சிறப்புக் கட்டுரைகள்

மந்தைகள் அல்ல... இளைஞர்கள்!

சிவபாலன் இளங்கோவன்

ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அதன் பொருளாதார வளர்ச்சியை மட்டும் வைத்து மதிப்பிட முடியாது, நிலையான எதிர்காலத்துக்கான எத்தகைய வளங்களை அந்தச் சமூகம் கொண்டிருக்கிறது என்பது முக்கியமான அம்சம். இளைய தலைமுறையினரே சமூகத்தின் எதிர்கால மனிதவளம்; அவர்களின் அரசியல் புரிதல் சமூக வளர்ச்சியுடன் நேரடித் தொடர்புடையது.

சமூகத்தின் அரசியல், பொருளாதார நிலை, பல்வேறு வரலாற்றுத் தருணங்கள், ஏற்றத்​தாழ்வுகள், இன்றைய சவால்கள், வளர்ச்சிக்கான தடைகள், அந்தச் சமூகத்தின் கூட்டு மனசாட்சி போன்ற​வற்றைக் கட்சி சாய்வின்றிப் புரிந்து​கொள்வதே அரசியல் புரிதல்.

அந்த வகையில், தமிழ்​நாட்டின் தனித்துவ அடையாளங்களான மொழியுணர்வு, கூட்டாட்சி, சமூக நீதி போன்ற​வற்றை அதன் உண்மையான பொருளோடு புரிந்து​கொள்​வதும் இவற்றை உள்ளடக்கிய ஓர் ஆரோக்​கியமான எதிர்​காலத்தைக் கட்டமைப்​பதும்தான் இன்றைய இளைஞர்​களின் முன் உள்ள சவால்கள்.

தமிழ்​நாட்டின் கூட்டு மனசாட்​சியின் நிரந்தர அம்சங்களான இவை பற்றியெல்லாம் இன்றைய இளைஞர்கள் எந்தப் பக்கச் சாய்வின்​றியும் தெரிந்து​கொள்வதே முதல் படி. ஆனால் தனிநபர் அபிமானம், ரசிக மனநிலை, வறட்டு இனவுணர்வு, மேலோட்டமான தகவல்கள் போன்றவை இளைஞர்களின் அரசியல் புரிதலுக்கான தடைகளாக இருக்​கின்றன.

மாறிவரும் மனநிலை: தமிழ்​நாட்டைப் பொறுத்​தவரை, கடந்த காலத்தில் நடந்த இளைஞர்​களின் பல்வேறு போராட்​டங்களே அதன் இன்றைய வடிவத்தை நிர்ண​யித்​திருக்​கின்றன. பல்வேறு மாணவப் போராட்​டங்கள் சீரான ஒழுங்குட​னும், தெளிவான அரசியல் நோக்கங்​களு​டனும் தேசத்​துக்கே முன்னு​தா​ரணங்களாக இருந்​திருக்​கின்றன. ஆனால், கட்டுப்​பாடற்ற கும்பல் மனநிலை, கூச்சல், ஆரவாரம், எந்த அரசியல் நோக்கமும் அற்ற ரசிக மனநிலை, ஒழுங்​கின்மை, வன்முறை என இளைஞர்கள் கூடும் சமீபத்திய அரசியல் கூட்டங்கள் பெரிதும் வருத்தம் அளிக்​கின்றன.

அரசியல் முதிர்ச்சி​யற்று, சுயமரி​யாதையற்று வெறும் மந்தைகளாக இளைஞர்கள் திரள்வது சமூகத்தின் எதிர்​காலத்​துக்கு நல்லதல்ல. மந்தை மனநிலை​யி​லிருந்து அவர்களை உண்மையான அரசியல் இயக்க​மாகத் திரட்டுவதே சிவில் சமூகத்தின் முன்னுள்ள சவால். இளைஞர்​களின் ஆளுமைப் பண்பு என்பது பதின்​பருவம் முடியும்போது முழுமையடைகிறது. அதுவரை மாறிக்​கொண்​டே​யிருக்கும் இந்தப் பண்புகள் 20 வயதுக்கு மேல் ஒரு வடிவத்தை வந்தடைகின்றன.

கிட்டத்தட்ட நிலையான இந்தப் பண்பு​கள்தான் இளைஞர்​களின் எதிர்கால முடிவு​களைத் தேர்வு செய்கின்றன; மதிப்​பீடுகள், முன்னுரிமைகள், உணர்வு​களைக் கையாளுதல் போன்ற​வற்றை எல்லாம் நிர்ண​யிக்​கின்றன. இதில் மூன்று நிலைகள் மிக முக்கிய​மானவை. தன்னை அறிதல், சுய அடையாளம் உருவாதல், சமூகத்​துடனான இணக்கமான பிணைப்பு உருவாதல். இவை முழுமை அடையும்போது ஆரோக்​கியமான, பண்பட்ட, முழுமையான ஆளுமையை அது உருவாக்கு​கிறது.

மாறாக, பல்வேறு காரணங்​களால் இந்த மூன்று நிலைகள் பாதிக்​கப்​படும்​போது, அது பிளவுபட்ட ஆளுமையை உருவாக்கு​கிறது. அதேபோல, இந்த மூன்று நிலைகளின் ஆரோக்​கியமான வளர்ச்சி என்பது அந்தச் சமூகத்தின் அன்றைய மதிப்​பீடு​களு​ட​னும், நலனுடனும் நேரடித் தொடர்​புடையது. ஒரு சமூகத்தின் மதிப்​பீடுகள் வீழ்ச்சி​யடை​யும்​போது, அதன் தாக்கம் இளைஞர்​களின் இத்தகைய வளர்ச்சி​யிலும் எதிரொலிக்​கும்.

மிகைப்​படுத்​தப்பட்ட சுய பிம்பம்: இன்றைய இளைஞர்​களின் தன்னறிதல், சுய அடையாளம், சமூகப் பிணைப்பு ஆகிய மூன்று முக்கியமான வளர்ச்சிகளுமே முழுமை​யானதாக இல்லை. உதாரணத்​துக்கு, இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனைத்து வசதிகளு​டனும் வளர்க்க முற்படு​கிறார்கள்.

இதன் விளைவாக அவர்களுக்கு மிகைப்​படுத்​தப்பட்ட பொருளா​தாரச் சூழலை உருவாக்​கிக்​கொடுக்​கிறார்கள். இதில் வளரும் இளைஞர்கள் அதை உண்மை என நம்பு​கிறார்கள். இந்த மிகைப்​படுத்​தப்பட்ட வசதியை அவர்கள் தங்கள் சாதனை​யாகக் கருதுகிறார்கள். தங்களைப் பற்றிய ஓர் உயர்வான, அதேநேரம் போலியான மனநிலையை உருவாக்​கிக்​கொள்​கிறார்கள்.

சாதி, இனம், நாயக அபிமானம் அவர்களுக்கு ஓர் எளிய அடையாளத்தை உருவாக்​கிக்​ கொடுக்கின்றன. சமூக வலைத்​தளங்​களில் இந்த அடையாளம் கூர்மைப்​படுத்​தப்​படு​கிறது. எந்த மெனக்​கெடலும் இன்றி மிக எளிமை​யாகக் கிடைக்கும் அடையாளம், ஒரு குறுஞ்​சமூக​மாகத் தன்னை உணர்வதற்குப் போதுமானதாக இருக்கிறது.

இந்த அடையாளத்தை நிலைநிறுத்து​வதற்கு அவர்கள் செய்யக்​கூடிய எளிய செயல், எதிர்க் குழுக்​களின் மீது வன்மத்தையும் வெறுப்பையும் பரப்புவது; இதன் வழியாகவே தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்​திக்​கொள்கிறார்கள். இப்படித்தான் கும்பல் அடையாளம் உருவாக்​கப்​படு​கிறது.

அதேபோலச் சமூகப் பிணைப்பு என்பது ஒட்டுமொத்தச் சமூக நலன் மீதான அக்கறை​யினால், அதன் செயல்​பாடு​களால் உருவா​காமல், தாங்கள் சார்ந்த குழுக்​களின் கூட்டு நடவடிக்கைகள் ஒன்றிணைவதன் மூலம் உருவாக்கப்​படு​கிறது. அதனால், சமூகத்தின் மீதான பிணைப்பு என்பது சாதி, இன, திரைப்பட ரசிகக் குழுக்​களின் நடவடிக்கை​களில் ஒன்றிணைவதுடன் முடிவுக்கு வந்து​விடு​கிறது.

இந்தக் குழுக்​களில் இளைஞர்கள் தங்களது அடையாளத்தை இழக்கிறார்கள்; அதன் வழியாக உருவாக்​கப்பட்ட வெறுப்பும் வன்மமும்தான் அரசியல் என நம்பு​கிறார்கள். தங்களைப் பற்றி​யும், தங்கள் அடையாளத்தைப் பற்றி​யும், சமூகத்தைப் பற்றியும் அவர்கள் கொண்டிருப்​ப​தெல்லாம் மிகைப்​படுத்​தப்பட்ட போலியான பிம்பங்களே என்பதை உணராமல், அதில் இன்னும் தீவிரமாக இயங்குவதே அவர்களின் இந்த மனநிலைக்கு அடிப்​படைக் காரணம். இந்தக் குழு மனநிலையை அவர்கள் தீவிரமாக ஏற்றுக்​கொள்​ளும்போது சுய அடையாளமற்ற மந்தைகளாக மாறுகின்​றனர்.

ஓர் ஆழமான அரசியல் புரிதலை உருவாக்​கிக்​கொள்வதோ, ஆரோக்​கியமான உரையாடலை முன்னெடுப்பதோ, வன்முறைகள் அற்ற தெளிவான பாதைகளை வகுத்​துக்​கொள்வதோ அவர்களுக்குச் சாத்தி​ய​மாவ​தில்லை. சுய அடையாளமற்ற இந்தத் தீவிரத்​தன்​மைகளை, அவர்கள் பின்தொடரும் தலைவர்கள் புரிந்து​கொண்டு, அவர்களின் சுய அடையாளத்தை மீட்க வேண்டும். அவர்களோ இந்த மனநிலையைத் தங்களது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்​திக்​கொள்​கிறார்கள்; அவர்களை இதே நிலையில் வைத்திருக்கும் உத்தி​களைத் திட்ட​மிட்டுத் தொடர்​கிறார்கள்.

போலி மயக்கங்கள்: எப்போதெல்லாம் ஒரு சமூகம் அதன் மதிப்பீடு​களில் வீழ்ச்சி​யடைகிறதோ, அப்போதெல்லாம் அந்தச் சமூகத்தின் இடுக்​கு​களி​லிருந்து எழுந்து​வரும் இளைஞர்​கள்தான் அந்தச் சமூகத்தைச் சமன்படுத்​தி​யிருக்​கிறார்கள். ஆழமான அரசியல் எதிர்க்​குரல்​களைச் சமூகத்தில் அவர்கள் எழுப்புவதே அந்தச் சமூகத்தின் சீரான வளர்ச்சிக்கு அவசியம்.

இளைஞர்​களின் இந்த அரசியல் புரிதலை நாம் பக்கு​வப்​படுத்த வேண்டும், போலி மயக்கங்​களி​லிருந்து மீட்டெடுக்க வேண்டும். அவர்களை அரசியல்​படுத்தும் வழிகளை ஜனநாயக இயக்கங்கள் திட்டமிட வேண்டும். சினிமாக்​களின் கவர்ச்சியி​லிருந்து சமூகத்தை நோக்கி இளைஞர்​களைத் திரட்ட வேண்டும். சமூகத்தின் மீதான உண்மையான புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்து​வதற்கான வழிமுறைகளை சிவில் சமூகம் ஆராய வேண்டும்.

தங்கள் தலைவர்​களின் பின்னால் கும்பலாகத் திரள்வதோ, உணர்ச்சிவசப்​படுவதோ, வெறுப்பு​களைப் பரப்புவதோ அரசியல் அல்ல; சமூகத்தின் மீதுள்ள உண்மையான அக்கறையி​லிருந்து வெளிப்​படுவதே மக்களுக்கான அரசியல் என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்து​கொள்ள வேண்டும்.

இன்றைய தலைவர்கள் சுய அடையாளமற்ற, வெற்றுக் கோஷமிடும் கும்பலாகத் தங்களைப் பின்தொடரும் இளைஞர்களை வைத்திருக்​காமல், அவர்களை அரசியல் புரிதல்​கொண்ட, சமூக நலன் மீது உண்மையான அக்கறை கொண்ட இளைஞர்​களின் இயக்கமாக உருவாக்க முற்பட வேண்டும். அந்த வழியில்தான் ஆரோக்​கியமான எதிர்​காலத்தைக் கட்டமைக்க முடியும்​!

- தொடர்புக்கு: sivabalanela@gmail.com

SCROLL FOR NEXT