2050க்குள் மீன்களைவிட அதிகமாக ஞெகிழியே கடலில் மிதக்கக்கூடும் அதிவேகமாக அதிகரித்துவரும் ஞெகிழி மாசு உலகளாவிய பெரும் சுற்றுச்சூழல் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. சூழலியல் தொகுதிகள், நிலைத்த வளர்ச்சி, மனித இனத்தின் சமூகப் பொருளாதார ஆரோக்கியப் பரிமாணங்கள் என ஒட்டுமொத்தமாகப் பாதிக்கக்கூடிய தீவிரமான பிரச்சினை இது. பொருளாதாரச் சந்தைகளின் மோசமான வளர்ச்சியே ஞெகிழியின் மிதமிஞ்சிய பயன்பாட்டுக்கு முக்கியக் காரணம் என்கிறது பொருளாதார ஒத்துழைப்பு - மேம்பாட்டுக்கான அமைப்பின் ‘உலகளாவிய ஞெகிழிக் கண்ணோட்டம்’ அறிக்கை.
குப்பைக் கிடங்காகும் ஏழை நாடுகள்: கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் 2000 - 2019 காலக்கட்டத்தில் ஞெகிழி உற்பத்தி இரட்டிப்பானது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் 46 கோடி டன் ஞெகிழிப் பொருள்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், அவற்றிலிருந்து வெளியேறிய கழிவின் அளவு மட்டும் 35.3 கோடி டன். ஞெகிழிப் பொருட்களில் மூன்றில் இரண்டு மடங்கு தயாரிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் கழிவாகிவிடுபவை. பொருட்களைச் சேமித்துவைத்து விற்பனை செய்ய அல்லது விநியோகிப்பதற்கு ஏற்ப ‘பேக்கேஜிங்’ செய்வதில் மட்டும் 40% ஞெகிழிக் கழிவு வெளியேற்றப்படுகிறது.
இது தவிர, நுகர்பொருட்களிலிருந்து 12%, ஆடை - ஜவுளி உற்பத்திகளிலிருந்து 11% ஞெகிழிக் குப்பை வெளியேற்றப்படுகிறது. இவற்றில் 9% மட்டுமே மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள ஞெகிழிக் கழிவில் 19% எரித்துச் சாம்பலாக்கப்படுகிறது. 50% குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகிறது.
இதைவிட மோசம் என்னவென்றால், 22% ஞெகிழிக் குப்பைகள், மேலாண்மை அமைப்புகளின் கண்காணிப்புக்குள்ளேயே வருவதில்லை. புறம்போக்கு நிலப்பரப்புகளில் கொட்டப்படுவது, கேட்பாரற்ற பகுதிகளில் வைத்து எரிக்கப்படுவது அல்லது நீர்நிலைகளில் கொட்டப்படுவது முதலிய சட்டவிரோதமான முறைகளில் அவை அப்புறப்படுத்தப்படுகின்றன. முக்கியமாக, ஏழை நாடுகள் ஞெகிழிக் குப்பைக் கிடங்குகளாக மாற்றப்படுகின்றன.
ஞெகிழி மாசு தொடர்பான அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக் குழு வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி, கடந்த 2024இல் மட்டும் 50 கோடி டன் ஞெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன அல்லது பயன்படுத்தப்பட்டன. அவற்றின் மூலம் 40 கோடி டன் ஞெகிழிக் கழிவு வெளியேற்றப்பட்டது. இந்தப் போக்கு தொடருமேயானால், 2060வாக்கில் ஞெகிழிக் குப்பையின் அளவு மும்மடங்காக அதிகரித்து, 120 கோடி டன்னாகப் பெருகிவிடும் அபாயம் உள்ளது.
அதிலும் ஆண்டுக்கு ஆண்டு 1 கோடியே 10 லட்சம் டன் ஞெகிழிக் கழிவு கடலில் கொட்டப்பட்டு, கடற்பரப்பை ஆக்கிரமிக்கின்றன. இதுபோக, கப்பல்கள், மீன்பிடித்தல் போன்றவற்றின் மூலமாகவே 20 கோடி டன் ஞெகிழிக் குப்பை கடலில் கலப்பது தெரியவந்துள்ளது. இப்படியே போனால், 2050க்குள் மீன்களைக் காட்டிலும் பன்மடங்கு ஞெகிழிக் குப்பை கடலில் மிதக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காரணம் என்ன? - மட்காத குப்பை என்பதாலேயே ஞெகிழி தீவிரமான ஒரு சிக்கல். நாளடைவில் நுண்துகள்களாகச் சிதையக்கூடியது ஞெகிழி. இதனால் நுண்ணிய, நானோ அளவிலான ஞெகிழிக் கழிவு எவரெஸ்ட் சிகரம் தொட்டு ஆழ்கடல் வரை நீக்கமறப் புவி முழுவதையும் மாசுபடுத்திவிடும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது.
பசுங்குடில் வாயு வெளியேற்றத்துக்கு 3.4% காரணம் ஞெகிழியே. ஆண்டுதோறும் கார்பன் பட்ஜெட்டுக்கு உலகளவில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் 19 சதவீதத்தை ஞெகிழி உற்பத்தி, பயன்பாடு / அகற்றலுக்கு 2040 வாக்கில் ஒதுக்க வேண்டிய நிலை வரும் என ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் தெரிவித்துள்ளது.
பின்விளைவுகள்: ஞெகிழியினுடைய வாழ்க்கைச் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பலவிதமான தாக்கங்களை அது ஏற்படுத்துகிறது. முதலாவதாக, புற்றுநோய் விளைவிக்கும் காரணியான கார்சினோஜென்கள், நரம்பியல் நச்சுகள், நாளமில்லாச் சுரப்பிகளைச் சீர்குலைக்கும் வேதிப்பொருள்கள் முதலிய தீங்கு விளைவிக்கக்கூடிய ஆயிரக்கணக்கான சேர்க்கைப் பொருள்களின் கூட்டுக்கலவையே ஞெகிழி. இத்தகைய நச்சுப்பொருள்கள் நமது சுற்றுச்சூழலை ஆக்கிரமித்து, மனித இனத்தையும் சூழலியலையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. விலங்குகளின் இனப்பெருக்க ஆற்றலையும் ஞெகிழி பாதிப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
தீர்வு உண்டா? - ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் (2022) ஐந்தாவது பொது அவைக்கூட்டத்தில் ஞெகிழி மாசுக்கு முடிவு கட்டப்படும் என்னும் உறுதிமொழி சட்டபூர்வமாக ஏற்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச உடன்படிக்கையில், ஒருமனதாக 193 உறுப்பு நாடுகளும் கையெழுத்திட்டன. காலநிலை மாற்றத்துக்கான எதிர்வினைகள், நிலையான நுகர்வு - உற்பத்தி, கடல்சார் பாதுகாப்பு, சூழலியல் தொகுதிகள், பல்லுயிர் மீட்பு உள்ளிட்ட ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய இது வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.
அதேநேரம், அடுத்த இரண்டு தசாப்தங்களில் ஞெகிழிக் கழிவை 80% வரை குறைக்க வேண்டும் என்கிற ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் மாபெரும் கனவு மெய்ப்படப் பல்லடுக்கு நடவடிக்கைகள் அவசியம்.
இதற்குச் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு, சீரிய செயல்திட்டங்கள், புத்தாக்க நடவடிக்கைகள், சிறப்பான மாற்றுப் பொருள்களின் வடிவமைப்பு, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகள் உள்ளிட்டவை காலத்தின் கட்டாயம். இதுபோகக் கழிவு மேலாண்மை, மறுசுழற்சி செய்யப்படும் விகிதமும் முறையும் மேம்படுத்தப்பட வேண்டும்.
முதலாவதாக, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் ஞெகிழியை உடனடியாக ஒழித்துக்கட்ட வேண்டும். சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்ட ஞெகிழி உற்பத்திக்கு மட்டுமே அனுமதி வழங்குவது என அரசுகள் திட்டவட்டமாக முடிவெடுக்க வேண்டும். இன்றைய நிலையில், மறுசுழற்சி செய்யப்பட்ட ஞெகிழி 6% மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
ஆகையால், மறுசுழற்சித் தொழில்நுட்பத்தைச் செம்மைப்படுத்தி, மறுசுழற்சி செய்யப்பட்ட ஞெகிழிக்கான சந்தையை லாபகரமானதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஞெகிழியைக் கிடங்குகளில் கொட்டுபவர்களுக்கு வரி விதிப்பது, ஞெகிழிக் குப்பையை வெளியேற்றும் தொழிற்சாலைகளிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பது போன்ற நடவடிக்கைகள் மறுசுழற்சியை நோக்கி அவர்களை நகர்த்த வைக்கலாம்.