இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் உள்ள பிரீத்தி சிறுநீரகச் சிறப்புச் சிகிச்சை மருத்துவமனையில், 16 மாதக் குழந்தை அவசரச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டது. அந்தக் குழந்தைக்குச் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்குச் சிறுநீரை வடிக்கும் ‘சிறுநீர் வடிகுழாய்’ (Ureter) பிறவியிலேயே அடைத்துக்கொண்டிருந்தது. சிறுநீர் பிரிய வழியில்லாமல் சிறுநீரகம் வீங்கியிருந்தது.
அதனால், அந்தக் குழந்தை ஆபத்தான நிலைமையில் இருந்தது. உடனடியாக அந்த அடைப்பை அகற்ற வேண்டிய கட்டாயச் சூழல். மேலும், மற்றவர்களுக்கு ஏற்படுகிற மாதிரி இல்லாமல் அந்தக் குழந்தைக்குச் சிறுநீரகத்தை ஒட்டிய சில அமைப்புகள் மாறியிருந்தன. ஆகவே, வழக்கமான அறுவைச்சிகிச்சையில் அந்தக் குழந்தையின் சிக்கலைத் தீர்க்க முடியாது; சிகிச்சையில் சில துல்லியங்கள் தேவைப்பட்டன.
துல்லியமான, அவசரநிலை அறுவைச்சிகிச்சைக்கு நவீன மருத்துவம் கொடுத்துள்ள கொடை ‘ரோபாட்டிக் டெலிசர்ஜரி’ (Robotic Telesurgery). இந்தியாவிலேயே ‘ரோபாட்டிக் டெலிசர்ஜரி’யில் முன்னோடியாகத் திகழும் மருத்துவர் சந்திரமோகன் வாடி அந்தக் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க முன்வந்தார்.
சிகிச்சைக்கு ஹைதராபாத்தில் இருந்து 1,550 கி.மீ. தொலைவில் உள்ள குருகிராம் மருத்துவமனையின் மிக நவீன ரோபாட்டிக் இயந்திரத்தைப் (Mantra 3 surgical robotic system) பயன்படுத்த முடிவுசெய்தார். இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரோபாட்டிக் இயந்திரம்.
‘ரோபாட்டிக் டெலிசர்ஜரி’ என்பது என்ன? - அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் ரோபாட் இயந்திரத்தின் கைகளை இயக்கி மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கு ‘ரோபாட்டிக் அறுவைச்சிகிச்சை’ (Robotic surgery) என்று பெயர். பயனாளிக்கு அருகில் ரோபாட் இயந்திரம் இருக்கும். மற்றொரு இயந்திரத்திலிருந்து அறுவைச்சிகிச்சை வல்லுநர் அதை இயக்குவார். மருத்துவரின் கைகளுக்குப் பதிலாக ரோபாட் இயந்திரத்தின் கைகள் அறுவைச்சிகிச்சையை மேற்கொள்ளும்.
சிகிச்சையின்போது உடலில் கீறப்படுகிற அளவு குறைவாக இருக்கும். மிகச் சிறிய உறுப்புகளில்கூட மிகத் துல்லியமாக அறுவைச்சிகிச்சையை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, பாதிப்புள்ள உறுப்புக்கு அருகில் இருக்கிற உறுப்புகளைத் தொடாமல் மேற்கொள்ளப்படும் அறுவைச்சிகிச்சை இது. ரத்த இழப்பு அவ்வளவாக இருக்காது. அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு வலியும் குறைவாக இருக்கும். தழும்பு தெரியாது. அதிக நாள்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்காது.
அடுத்து, ‘டெலிசர்ஜரி’ என்பது தொலைதூர அறுவைச்சிகிச்சை. வழக்கத்தில் அறுவைச்சிகிச்சை வல்லுநர் ரோபாடிக் இயந்திரத்தைப் பயனாளியின் அருகில் இருந்து இயக்குவார். அப்படியில்லாமல், அந்த இயந்திரத்தைத் தொலைதூரத்தில் இருக்கிற ஒரு ரோபாட்டிக் கட்டுப்பாடு மையத்தில் (Robotic console) இருந்துகொண்டு அவர் இயக்குவார். Digital control and Teleoperation என்னும் செயல்முறையில் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
ஆழ்கடல் ஆய்வுக்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் இது வேலை செய்கிறது. இந்தியாவில் இதுவரை 50க்கும் மேற்பட்ட அறுவைச்சிகிச்சைகள் இந்த முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனாலும், மேற்கண்ட சிகிச்சை தனித்துவமானது. உலகிலேயே முதன்முறையாக ‘ரோபாட்டிக் டெலிசர்ஜரி’யில் குழந்தைக்கு மிகவும் குறுகிய இடத்தில் இருந்த சிறுநீரக வடிகுழாய் அடைப்பை அவர் நீக்கியுள்ளார். இது உலக மருத்துவ வரலாற்றில் இடம்பிடித்து, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது.
சிகிச்சை செயல்முறை என்ன? - பிரீத்தி மருத்துவமனை மருத்துவர்கள் ரோபாட்டிக் இயந்திரத்தின் கைகளையும் கேமராவையும் அறுவைச்சிகிச்சைக்குத் தயாராக இருந்த குழந்தையின் வயிற்றில் துளை போட்டுப் பொருத்தினர். இந்த இயந்திரத்தை 5ஜி இணைய இணைப்பின் உதவியுடன் குருகிராம் மருத்துவமனையின் ரோபாட்டிக் கட்டுப்பாட்டு மைய இயந்திரத்தோடு இணைத்துவிட்டனர். அங்கு இருந்த மானிட்டரில் குழந்தையின் சிறுநீரகப் பகுதிகள் முப்பரிமாண (3டி) படங்களாக மிகப் பெரிய அளவில் மிகத் தெளிவாகத் தெரிந்தன.
அவற்றைத் திரையில் பார்த்துக்கொண்டே குழந்தையின் சிறுநீர் வடிகுழாயைப் பிரிக்கவும், அடைப்பை அகற்றவும், ஆரோக்கியமாக இருந்த வடிகுழாயைச் சிறுநீரகத்துடன் இணைக்கவும் ரோபாட்டிக் இயந்திர ரிமோட் மூலம் பிரீத்தி மருத்துவமனையில் இருந்த ரோபாட்டிக் இயந்திரத்தின் கைகளுக்கு ஆணைகளாகப் பிறப்பிக்க, அதன்படி அந்த இயந்திரம் செயல்பட்டுச் சிகிச்சையை (Robotic pyeloplasty) வெற்றிகரமாக முடித்தது. குழந்தையின் சிறுநீரகம் சிறுநீரை வடித்துச் சிறுநீரகப்பைக்கு அனுப்பத் தொடங்கியது. குழந்தையின் வயிற்றில் போடப்பட்ட துளையைப் பிரீத்தி மருத்துவமனை மருத்துவர்கள் தையலிட்டு மூடிவிட்டனர். குழந்தை நலம்பெற்றது.
உலக அரங்கில் இந்தியா: பொதுவாக, குழந்தைகளுக்கான சிக்கலான அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது, ஒப்பற்ற துல்லியங்கள் தேவைப்படுகின்றன. அதற்கு ரோபாட்டிக் அறுவைச்சிகிச்சை பயன்படுகிறது. ஹைதராபாத்தில் அனுமதிக்கப்பட்ட குழந்தைபோல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நிலைகளில் பயனாளியை இடம் மாற்றுவது அல்லது மருத்துவரைப் பயனாளி இருக்கிற இடத்துக்கு வரவழைப்பது காலதாமதத்தை உருவாக்கி ஆபத்தை அதிகப்படுத்திவிடலாம். இந்தத் தடையை ‘ரோபாட்டிக் டெலிசர்ஜரி’ அகற்றியுள்ளது.
மேலும், குழந்தைகள் அறுவைச்சிகிச்சைகளைத் தொலைவிலிருந்து மேற்கொள்ளும் திறனையும் உள்நாட்டின் ரோபாட்டிக் அமைப்புகள், இணைப்பு உள்கட்டமைப்புகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றங்களையும் இது வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தியா எவ்வாறு மருத்துவப் புதுமைகளை உருவாக்குகிறது என்பதற்கான சான்றாகவும் இது திகழ்கிறது.
சுடர்விடும் நம்பிக்கை: பெண்களுக்கான அறுவைச்சிகிச்சைகள், இதய அறுவைச்சிகிச்சைகள், பல்வேறு வயிற்று உறுப்புகள், புற்றுநோய் போன்றவற்றுக்கான அறுவைச்சிகிச்சைகளையும் ‘ரோபாட்டிக் டெலிசர்ஜரி’ மூலம் மேற்கொள்ள முடியும். உடல் உறுப்புகளில் அமைப்பு மாறுதல் இருக்கிறபோதும், சில சிக்கலான அறுவைச்சிகிச்சைகளின்போதும் கத்தியால் கீறி மேற்கொள்ளப்படும் வழக்கமான சிகிச்சைகளுக்கு மருத்துவர்களே யோசிப்பார்கள். இத்தகைய இடையூறுகளை இந்த நவீன சிகிச்சை முறை தகர்த்தெறிந்து மருத்துவர்களுக்குமே நம்பிக்கை அளித்திருக்கிறது.
தொழில்நுட்ப ரீதியில் இது இன்னும் மேம்படும்போது, குறுகிய அளவிலான ரோபாட்டிக் கருவிகள் உருவாக்கப்படும். இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலும் இந்த மேம்பட்ட வசதி கிடைக்கும். சிறப்பு மருத்துவர்களை மெய்நிகர் வடிவில் (Virtual) இந்த மருத்துவமனைகளுக்குக் கொண்டுவர முடியும். சிறப்புச் சிகிச்சைகளுக்கான மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை நீங்கும்.
மேம்பட்ட சிகிச்சைகளுக்காக வரும் வெளிநாட்டுப் பயனாளிகளுக்கு விசா, போக்குவரத்து போன்றவற்றில் ஏற்படுகிற பயணத் தடைகள் விலகும். அந்தந்த நாடுகளில் இருந்துகொண்டே சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் உள்நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.
இனிமேல், சிறப்பு மருத்துவர்களை நோக்கிப் பயனாளிகள் பயணப்படுவது குறையும். மேம்பட்ட மருத்துவப் படிப்பைப் படித்த மருத்துவர்களும் அனுபவம் கூடிய மருத்துவர்களும் தொலைவில் இருந்தாலும் அவர்களுடைய மருத்துவத் திறன் எங்கு இருக்கிற பயனாளிக்கும் உடனடியாகப் பயன்படும். ஏழைக் குழந்தைகளுக்கும்கூடச் சிக்கலான அறுவைச்சிகிச்சைகள் எளிதில் கிடைக்கச் செய்து, உலகத் தரமுள்ள சுகாதாரம் அனைவருக்கும் சமமாக வழங்கவும் வாய்ப்பு உருவாகும்!
- தொடர்புக்கு: gganesan95@gmail.com