இலக்கியம்

360: இ.பா. நாடக நிகழ்ச்சி

செய்திப்பிரிவு

எழுத்தாளார் இந்திரா பார்த்தசாரதியின் எழுத்தில் உருவான ‘புனரபி ஐனனம் புனரபி மரணம்’ நாடகம், சுரேன் சேகரன் நெறியாள்கையில் வில்லியனூரில் (தட்டாஞ்சாவடி) உள்ள குளத்து மேட்டு வீதி யாழ் அரங்கில் இன்றும் (06.08.2022) நாளையும் (07.08.2022) மாலை 6:30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. அனுமதி இலவசம். தொடர்புக்கு: 99442 08897

ஈரோடு தமிழன்பனின் 80-வது கவிதைத் தொகுப்பு!

2022-ல் இதுவரை ஈரோடு தமிழன்பனின் நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. 2020-ல் ஏழு கவிதைத் தொகுப்புகளும் 2021-ல் 9 கவிதைத் தொகுப்புகளும் வெளியாகியிருந்தன.

இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை அவர் வெகுவிரைவில் கடந்துவிடக் கூடும். தமிழன்பனின் 80-வது கவிதைத்தொகுப்பாக அண்மையில் வெளிவந்திருக்கும் ‘கீழடியில் கேட்ட தாலாட்டுகள்’ நூலில் அவரது தமிழ்க் கவிதைகள் இடது பக்கத்திலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வலது பக்கத்திலுமாக வெளிவந்துள்ளது.

பேராசிரியர்கள் கா.செல்லப்பனும் நா.இராமச்சந்திரனும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். கீழடி அகழாய்வின் கண்டுபிடிப்புகளையும் பெருமைகளையும் பேசும் 25 கவிதைகளின் தொகுப்பு இது. ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியிருக்கும் தமிழன்பனின் 25-வது கவிதைத் தொகுப்பு என்கிற பெருமையும் இதற்கு உண்டு.

ஈரோடு புத்தகக்காட்சியில் இந்து தமிழ் திசை

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஆகஸ்ட் 5இலிருந்து 16 வரை ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரித் திடலில் புத்தகக்காட்சி நடைபெறவுள்ள புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ அரங்கும் (ஸ்டால் எண்: 201) இடம்பெறுள்ளது.

‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகளில் பரபரப்பாக விற்பனையாகிவரும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘உயிர் வளர்க்கும் திருமந்திரம்’, ‘குறள் இனிது’ உள்ளிட்ட பல புத்தகங்கள் இங்கே கிடைக்கும். ‘இந்து தமிழ் திசை’ உட்பட 230 பதிப்பகங்கள் கலந்துகொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஆங்கிலத்தில் தமிழச்சி

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் சிறுகதைகள் ‘Birthing Hut and other stories’ என்னும் தலைப்பில் வி.பாரதி ஹரிஷங்கர் மொழிபெயர்ப்பில் விட்டஸ்டா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT