நாடகங்கள், கதைகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியவரும் தூர்தர்ஷனில் ‘எதிரொலி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தயாரித்தவருமான மூத்த ஊடகவியலாளர் வெ.நல்லதம்பி எழுதியிருக்கும் முதல் நாவல் இது. மலர்களை விளைவிக்கும் வேளாண்குடியில் பிறந்த கமலா, நாவலின் முதன்மைக் கதாபாத்திரம். அவள் வாழ்க்கையில் முன்னேற அவளுடைய தமிழாசிரியரும் வேளாண் கல்லூரிப் பேராசிரியரும் வழிகாட்டுகிறார்கள். கமலாவுக்கும் மேலைநாட்டைச் சேர்ந்த ஆங்கிலக் கலப்புத் தமிழனான ஜார்ஜுக்கும் காதல் மலர்கிறது.
கமலாவின் இத்தகைய வாழ்க்கைப் பயணத்தை முன்வைத்து மலர் விளைவித்தலில் ஈடுபடும் வேளாண்குடி மக்களின் வாழ்வையும் வரலாற்றையும் ஆவணப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர். உலக நாடுகள் பலவற்றில் மலர்கள் நோய் தீர்க்கும் சிகிச்சைக்கான மருந்தாகப் பயன்படுவது உள்ளிட்ட மலர்கள் குறித்துப் பொதுவாக அறியப்படாத பல தகவல்களின் வாயிலாக இந்த நாவல் மலர் உலகம் குறித்த ஆவணமாகவும் உருப்பெறுகிறது. தமிழில் மலர்கள் குறித்த முழுநீளப் புனைவு நூல் என்ற வகையில் இந்த நாவல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
மலரினும் மெல்லிது
வெ.நல்லதம்பி
வள்ளுவன் வெளியீட்டகம்
தொடர்புக்கு- 9445141266
விலை-ரூ.300