இலக்கியம்

உணர்வுகளின் ஆலாபனை | நூல் வெளி

மண்குதிரை

சுகுமாரன் கதைகள், 1983இல் தொடங்கி இந்த 2025 வரையிலான நீண்ட காலகட்டத்தில் பயணித்திருப்பவை. இந்தக் காலகட்டத்திற்குள் தமிழ்ச் சிறுகதைப் போக்குகள், சுகுமாரன் என்கிற தனிமனிதனின் உள்ளுக்குள் நடந்த மாற்றங்கள் ஆகிய இரு அம்சங்களையும் பிரதிபலிப்பவையாக இந்தக் கதைகள் உள்ளன. தன்னுடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத, பாதிக்காத ஒரு சம்பவத்தைக் கதைப் பொருளாகக் கொள்ள சுகுமாரனுக்கு விருப்பம் இல்லை. சுகுமாரன் குறைவாக எழுதியதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

புது​மைப்​பித்​தன் தொடங்​கிய தமிழ் நவீனச் சிறுகதை​யின் தொடர்ச்சி என இவரது கதைமொழியை வரையறுக்​கலாம். கதையைச் சட்​டெனத் தொடங்​கு​வ​தில், அதை எடுத்​துச் செல்​வ​தில் சுகு​மாரனின் சிறுகதை மொழிக்கு தயக்​கமே இல்​லை. சுகு​மாரனின் காதல் கவிதைகளில் வெளிப்​படும் நினை​வேக்​கம், இந்​தத் தொகுப்​பிலுள்ள பெரும்​பாலான கதைகளில் பல்​வேறு உணர்வு சார்ந்து ஏற்​படு​கிறது.

அந்​திக்​குப் பின்​புறம் மறைந்​திருக்​கும் ஒளியைப் போல் அந்த உணர்வை இந்​தக் கதைகள் வெளிப்​படுத்​துகின்​றன. கதைகளின் பிர​தான நோக்​கமே அந்த உணர்வை எழுப்​புவது​தான். சமூக விழு​மி​யங்​களுக்​குத் தங்​களை ஒப்​புக்​கொடுத்த சில கதா​பாத்​திரங்​களின் உணர்வு அழுத்​தங்​கள், அடுப்​படிப் புகை​யாகக் கதைகளுக்​குள் கமறுகின்​றன.

‘அரண்’ நெடுங்​கதை, சுகு​மாரனின் புனை​வாற்​றலுக்​குச் சான்​று. அசோகமித்​திரனின் ‘அவனுக்கு மிகப் பிடித்​த​மான நக் ஷத்​ரம்’ கதை, 1960 கால​கட்​டத்​தில் நில​விய அம்மை நோய்ப்​பர​வல் அனுபவத்​தில் எழுதப்​பட்​டது. பெருந்​தொற்​றுக் காலத்​தில் மக்​களும் அரசு அமைப்​பு​களும் எப்​படி மனித உணர்​வு​களுக்கு அப்​பாற்​பட்டு இயந்​திரத்​தன​மாகச் செயல்​படும் என்​பதை அசோகமித்​திரன் சொல்​லி​யிருப்​பார்.

சுகு​மாரனின் இந்​தக் கதை, கோவிட் பெருந்​தொற்​றுக் கால​கட்​டத்​தில் எழுதப்​பட்​டது. ஆனால், இது கோவிட் தொற்று குறித்​தது அல்ல. இங்​கிலாந்​தில் ‘இயாம்’ என்​கிற சிறு கிராமத்​தில் நிகழ்​வ​தாகும். ஒரு தேவால​யம், அதன் பாதிரி​யார், அவர் மனை​வி, தெய்வ விசு​வாசிகளான மக்​கள் எனப் பின்​னப்​பட்​டது இந்​தக் கதை. ஒரு பெருந்​தொற்று, மனித மனங்​களில் உண்​டாக்​கும் விகாரங்​களை இந்​தக் கதை விவரிக்​கிறது.

‘உஸ்​தாத்​’தும் சுகு​மாரனின் கற்​பனா சக்​திக்கு உதா​ரண​மான கதை. சுகு​மாரன் என்​கிற தனி ஆளு​மை​யின் அம்​சம் இந்​தக் கதை​யில் மறை​முக​மாக வெளிப்​படு​கிறது. கரு​நாடக இசைப் பாடகர் மதுரை சோமுவை தஞ்​சாவூரில் ஒரு லாட்​ஜில் எதேச்​சை​யாகச் சந்​தித்த அனுபவத்தை சுகு​மாரன் கட்​டுரை​யாக எழு​தி​யிருக்​கிறார். ஒரு கீர்த்​தனையை சுகு​மாரனுக்​காக சோமு பாடிக் காட்​டி​யிருப்​பார். புகழ்​பெற்ற ஷெனாய் இசைக் கலைஞர் பிஸ்​மில்லாகானின் ஒரு நாளில் நடந்​த​தாகச் சொல்​லப்​படும் சம்​பவத்​தைப் பற்​றியது.

தெய்​வம் அவதரிக்​கும் கதை இது. கையாள்​வதற்​குச் சிக்​கலான கதைப் பொருளை, சுகு​மாரன் லாவக​மாகக் கையாண்​டுள்​ளார். இந்​தக் கதை​யில் பிஸ்​மில்லாகான் இரு​முறை ஷெனாய் வாசிக்​கிறார். ஒரு புதிய ராகம் அது. கதைக்​குள் வாசிக்​கப்​படும் அந்த இசை​யின் ராக பாவங்​களை சுகு​மாரன் தன் எழுத்​தின் வழி வாசகர்​களுக்கு உணரச் செய்​திருப்​பார்.

கேரளப் பின்​னணி​யில் எழுதப்​பட்ட ‘சர்ப்​பம்’ கதை, துள்​ளல் நடை​யில் எழுத​பட்​டுள்​ளது. ஒரு மெக்​கானிக் ஷாப்​புக்​குள் பாம்பு புகுந்து விடு​கிறது. இதன் பிறகு நடக்​கும் சம்​பவங்​களை அங்​கதச் சுவை​யுடன் எழு​தி​யிருக்​கிறார். மலை​யாள மொழிக்கே உரித்​தான எள்​ளல் பாணியை சுகு​மாரனின் இந்​தக் கதை அதன் போக்​கிலே சுவீகரித்​துக் கொண்​டுள்​ளது.

ஒரு மெல்​லிய உணர்​வைச் சுற்​றியே பெரும்​பாலான கதைகள் பின்​னப்​பட்​டிருக்​கின்​றன. அதை வாசகர்​களுக்​குக் கடத்​தும் விதத்​தில் இந்​தக் கதைகள் வெற்​றியைப் பெற்​றிருக்​கின்​றன. அதைக் கடந்து முடிவு நோக்​கிச் செல்​லும் வழி​யில் இந்​தக் கதைகள், வாசக விருப்​பத்​துக்​காகத் திருப்​பங்​களில்​ ஒளிந்​து​கொள்​ள விரும்​பு​கின்​றன. இதி​லுள்​ள கதைகளை, அவை எழுதப்​பட்​ட ​கால​கட்​டத்​தைச்​ ​சார்​ந்​து மதிப்​பிட வேண்​டும்​. அந்​த விதத்​தில்​ பல கதைகள்​ அந்​தக்​ ​கால​கட்​டப்​ போக்​கை வெளிப்​படுத்​தியுள்​ளன.

உஸ்தாத்
சுகுமாரன்
நூல்வனம் பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9276549991

- தொடர்புக்கு: jeyakumar1027@gmail.com

SCROLL FOR NEXT