இலக்கியம்

வன்முறை உண்டாக்கும் அச்சம் | நூல் வெளி

செ. ஏக்நாத்ராஜ்

தமிழிலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்​பு​கள் சமீப​கால​மாக அதி​கரித்​திருக்கின்​றன. பல்​வேறு நாடு​களின் சிறுகதைகள், நாவல்கள், கட்​டுரைகள் என வரு​வதைப் போல மலை​யாளம், கன்​னடம், வங்​கமொழி உள்​ளிட்ட இந்​திய மொழி இலக்​கி​யங்​களும் அதி​க​மாகவே மொழி பெயர்க்​கப்​பட்டு வரு​கின்​றன. இதில் சாகித்ய அகாதமி சமீபத்​தில் வெளி​யிட்​டிருக்​கிற மொழி பெயர்ப்பு நூல்​களில் ஒன்​று, ‘ஒரு பெண்​மானின் கண் - மேலும் பிற கதைகள்’ எனும் பஞ்​சாபி சிறுகதைகள் தொகுப்பு.

'பஞ்​சாபின் செக்​காவ்' எனப்​படும் எழுத்​தாளர் மோஹன் பண்​டாரி எழு​தி​யுள்ள கதைகள் இவை. சாகித்ய அகாதமி உள்பட பல்​வேறு விருதுகளைப் பெற்​றுள்ள அவரின் அழுத்​த​மான ஏழு சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது என்​றாலும், ஒவ்​வொரு கதை​யும் அதன் உள்​ளடக்​கம், கதைபேசும் பொருள், அதன் போக்கு என அனைத்​தி​லும் ஒரு நாவலுக்​கான அடர்த்தி யையும் விஷ​யங்​களை​யும் கொண்​டுள்​ளன.

கிட்​டத்​தட்ட அனைத்​துக் கதைகளி​லுமே, எண்​பதுகளின் பிற்​பகு​தி​யில் பஞ்​சாப் சந்​தித்த காலிஸ்​தான் பிரச்​சினை, அது மக்​களிடம் ஏற்​படுத்​திய தாக்​கங்​கள், பிரி​வினை மோதல்​கள் உள்​ளிட்​டப் பிரச்​சினை​கள் ஏதோ ஒரு ரூபத்​தில் கண்​முன் வந்து நிற்​கின்​றன. வன்​முறை உண்​டாக்​கும் அச்​சத்தை எதிர்​கொள்​கிற ஆண், பெண் கதா​பாத்​திரங்​களின் வழியே அவர்​களின் உணர்​வு​களை ஆழமாக​வும் அதிர்ச்​சி​யோடும் சித்​தரிக்கப்பட்டுள்ள சூழல், இக்​கதைகளின் வீரி​யத்தை நமக்கு உணர்த்​துகின்​றன.

முதல் கதை​யான ‘புறா’, ஒரு நாட்​டுப்​புறக் கதை​யின் தொனி​யுடன் தொடங்​கு​கிறது. நம்​மூர் பொட்​டுக் கட்​டும் பழக்​கத்தை ஞாபகப்​படுத்​தி​னாலும், இக்​கதை காட்​டும் நில​மும் சூழலும் பண்​பாடும் வேறானது. சிறு​வய​திலேயே வற்​புறுத்​தப்​பட்ட துறவறத்துக்கு உட்​படுத்​தப்படும் சக்தி தேவி எதிர்​கொள்​கிற அகச்​சிக்​கல்​கள், வன்​முறை​யாக மாறு​வதை​யும், அவளின் ஆன்மா ஒரு புறாவுக்​குள் இருக்​கிறதென நம்​பும் அவளின் நம்​பிக்​கை​யும், ஒரு கட்​டத்​தில் அப்​புறா கொல்​லப்​படும்​போது அவள் கேட்​கிற கேள்​வி​யுடன், அவள் ஆன்​மாவைப் போலவே கதை​யும் முடிந்து விடு​வது, வாசக​னுக்கு அதிர்​வு​களை ஏற்​படுத்​துகிறது. இக்கதையின் பின்​னணி​யில் விவரிக்​கப்​படும் சூழல் நாம் அறி​யாதது.

தலைப்​புக் கதை​யான ‘ஒரு பெண்​மானின் கண்’ மதக்​கல​வரங்​களின் பின்​னணி​யில் அமைக்​கப்​பட்​டுள்​ளது. கலவரத்​தில் கணவனை​யும் குழந்​தைகளை​யும் பறி​கொடுத்த இளம் பெண், உயிர் பயத்​தில் நடுங்​கியபடி ராணுவ அதி​காரி​யிடம் உதவி கேட்டு வரு​கிறார். அந்த இரவில் வெளியே வன்​முறை நடந்து கொண்​டிருக்க, சக அதி​காரி​களு​டன் மது அருந்​தி​யபடி இருக்​கிற அவர், அவளுக்கு உதவ முன் வரு​கிறார்.

தனது படுக்​கையறை​யில் அவளைத் தூங்க வைக்​கிறார். கையில் துப்​பாக்​கி​யுடன் பாது​காப்​புக்கு உத்​தர​வாதம் கொடுக்​கும் அதிகாரி, கடைசி​யில் எதிர்​பா​ராத சம்​பவத்​தின் வழியே குற்ற உணர்ச்​சி​யில் தவிப்​பதை அக்​கதைக் கடத்​துகிறது. கதை முடிந்த பின்​னும் அந்த இரக்​கம் கொண்ட அதி​காரி​யின் வேதனையை, அவர் எதிர்​கொள்ள இருக்​கிற பிரச்​சினையை விட, அழுத்தமாகச் சொல்​லிப் போகிறது.

‘என்​கிற...’ என்ற கதை, தீவிர​வாதத்​துக்​கும் போலீஸுக்​கு​மான மோதலில் நல்​மனம் கொண்ட அப்​பாவி​களும் இரக்​கமின்றி கொல்​லப்படு​வதைச் சொல்​கிறது. இக்​கதையை வாசித்து முடித்​ததும், பிரபு தயாள் சிங் என்​கிற அந்​தக் கதா​பாத்​திரம் மீது நமக்கு ஏற்​படு​கிற அனு​தாப​மும் ஆச்​சரிய​மும்தான் இக்​கதை​யின் வெற்​றி.

‘உடைப்​பு’ கதை, முஸ்​லிம் எதிர்ப்பு என்​ப​தில் தொடங்​கி, 1984இல் நடந்த சீக்​கிய எதிர்ப்​புக் கலவரங்​கள் வரை நடக்​கிறது. இக்​கல​வரங்​களால் இரட்​டைப் பாதிப்​புக்​குள்​ளாகும் நாயகன் ஹர்​சந்த்​தின் போராட்​டத்​தைப் பேசு​கிறது. இதே​போல ‘தலையை வாரிக் கொள், என் கண்​ணே!’, ‘பகிர்​வு’, ‘கா​யம்’ ஆகிய கதைகளும் கனமான விஷ​யங்​களை அழுத்​த​மாகச் சொல்​லுகின்​றன.

ஆங்​கிலத்​திலிருந்து தமிழில் மொழிபெயர்த்​திருக்​கிற பென்​னேசனின் மொழிநடை, கதைகளைத் தடை​யின்றி வாசிக்க உதவு​கிறது. நாம் பார்த்​தி​ராத வாழ்​வை​யும்​ சிக்​கல்​களை​யும்​ பேசும்​ இத்​தொகுப்​பு வேறொரு வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

ஒரு பெண்மானின் கண் மேலும்
பிற கதைகள்
மோஹன் பண்டாரி
சாகித்ய அகாதமி
விலை: ரூ.250
தொடர்புக்கு: 044-24311741

- தொடர்​புக்கு: egnathraj.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT