தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகறியச் செய்வதில் கீழடி அகழாய்வு முந்தியிருக்கிறது. கல்வி, சுகாதாரம், நகரமயமாதல், பொது நிர்வாகம், வணிகம் முதலானவற்றில் வளர்ச்சி அடைந்தவர்களாகத் தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளனர் என்பதையும் தங்களுக்கென தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருந்தனர் என்பதையும் உரக்கச் சொல்லும் சான்றாக இது அமைந்திருக்கிறது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, ‘பாண்டியநாட்டில் வணிகம் வணிகர் வணிக நகரங்கள்’ புத்தகம் வெளிவந்திருக்கிறது. நூலாசிரியர் முனைவர் வெ.வேதாசலம், தொல்லியல், கலை, வரலாற்றாய்வில் மூன்று தசாப்தங்கள் அனுபவம் மிக்கவர்.
கரூர், கோவலன்பொட்டல் (மதுரை), திருத்தங்கல், மாங்குடி, தொண்டி, அழகன்குளம், கீழடி, கொடுமணல் முதலிய இடங்களில் உள்ள தொல்லியல் தலங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் ஈடுபட்டவர். பாண்டிய நாடு என சங்ககாலம் தொட்டு அறியப்படும் புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை அடக்கிய பகுதிகளின் வணிக பண்பாட்டினை உள்ளும் புறமுமாக ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார்.
செழித்தோங்கிய மக்கள்: தமிழ் பிராமி எழுத்துகள், அசோகன் பிராமி எழுத்துக்கள் இவற்றில் எது காலத்தால் முந்தியது என்கிற தேடலும் மோதலும் நெடுங்காலமாக நீடித்து வந்தது. இந்நிலையில், கீழடி அகழாய்வில் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகளின் வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் வழியாகத் தமிழ் பிராமி எழுத்துக்களின் பழமை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இந்நூலில், ‘பண்டுதொட்டுப் பாண்டியநாடு’ என்கிற சொற்கள் அசோகன் (கி.மு.273-236) கல்வெட்டுகளிலேயே காணக்கிடைப்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதன் வழியாகத் தமிழின் தொன்மை மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ள குகைத்தளங்கள் பாண்டிய நாட்டில்தான் அதிகம் காணப்படுவதாக ஆசிரியர் அறுதியிட்டுக் கூறுகிறார். இந்தக் கல்வெட்டுக்களில் வணிகம், வணிகர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
அவை வெற்று பழம்பெருமை பேசவில்லை. மக்களின் வாழ்வியலை, அவர்களைச் செழித்தோங்கச் செய்த உப்பு, இரும்பு, ஆடை, பச்சைக்கற்பூரம் சார்ந்த வார்த்தகத்தைப் பறைசாற்றுகின்றன. அதிலும் சங்ககாலத்தில் கீழடி நெசவுத் தொழில் கூடமாக விளங்கியிருக்கிறது. கீழடியில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் வட இந்தியாவுக்கும், ரோமானிய நாடு உள்ளிட்ட அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.
‘பள்ளி’ எனும் தமிழ்ச்சொல்லின் ஆணிவேர் சமண சமயத்தில் உள்ளது. இதுபோல் ‘நியமம்’, ‘ஆவணம்’ முதலான சொற்களின் ஊற்றுக்கண்ணைத் தேடிச் செல்கிறது இந்நூல். மதுரையில் நாகமலைப் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள பெருமாள்மலை சமணர் குகைத்தளம் நாடறிந்த பண்பாட்டுப் பீடம் ஆகும். இத்தகைய சமய அடிப்படையிலான தொடர்பு தவிர, வணிக ரீதியிலும் சமண மக்களுடன் தமிழர்கள் தொடர்பில் இருந்துள்ளனர்.
நாணயமும் இலக்கியமும்: பண்டமாற்று முறையில் வணிகம் நடைபெற்று வந்த காலத்திலேயே தங்கம், வெள்ளி முதலிய நாணயங்கள் மூலம் வர்த்தகம் செய்யும் முறை பாண்டிய நாட்டில் நடைமுறைக்கு வந்துவிட்டது. இதற்கு ஆதாரமாக கி.மு.3, 2, 1 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சங்க இலக்கிய பாடல்கள், சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட காசுகள் ஆதாரமாகத் திகழ்கின்றன.
அதிலும் சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் வடநாட்டினருடனும், கிரேக்க, ரோமானிய நாட்டினருடனும் அதிக அளவில் வணிகம் செய்து வந்திருப்பது வியப்பூட்டுகிறது. சங்ககாலம் தொட்டு 15ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய நாட்டில் பல பரிமாணங்களைக் கண்ட வணிக வளர்ச்சியை, பறைசாற்றும் நூலாக இது திகழ்கிறது.
‘பாண்டிய நாட்டில் வணிகம் வணிகர் வணிக நகரங்கள் (கி.மு.400-கி.பி.1400)’
முனைவர் வெ.வேதாசலம்
தனலட்சுமி பதிப்பகம்
விலை:ரூ.400, தொடர்புக்கு: 9894578440
- தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in