ரஷ்ய சிறுகதைகள், பெரும்பாலும் போர்க்கதைகளின் மொழிபெயர்ப்பு இந்நூல். இத்தொகுப்பில் அலெக்ஸி டால்ஸ்டாயின் ‘ருஷ்ய கதாபாத்திரம்’ கதையை குறிப்பிட்டுச் சொல்லலாம். இச்சிறுகதை போரின் வலியை, வாழ்வின் இழப்பை, தாயின் தவிப்பை நம்முள் கடத்தி விடுகிறது.
எகோர், இளைஞன். ராணுவ லெப்டினென்ட்டாக டாங்கி பிரிவில் பணியாற்றுபவன். போரில் அவனுக்கு நேர்ந்த பாதிப்பு நம் நெஞ்சை உலுக்குகிறது. ஒருநாள், எதிரிகள் அடிவாங்கி, புறமுதுகிட்டு ஓடும்போது, டாங்கிமீது தாக்குதலை நிகழ்த்திவிட்டு ஓடுகின்றனர். குண்டுவீச்சில் டாங்கி எரிகிறது. டாங்கி டிரைவர், லெப்டினென்ட்டை காப்பாற்றுகிறான். ஆனால் உடலில் தீக்காயங்கள்... முகமே மாறிவிடுகிறது.
சிகிசிச்சைகள் எல்லாம் முடிந்து எட்டு மாதம் கழித்து ஊருக்கு பெற்றோரை, காதலியைக் காணச் செல்கிறான். தீப்பாதிப்புகள் கண்டு பெற்றோரும் காதலியும் பயந்துவிடுவார்கள் எனக்கருதி, பெயரை மாற்றி “எகோர் நண்பன் நான்” எனக் கூறுகிறான். எகோரின் அன்பைத் தெரிவிக்க வந்தததாகவும் கூறுகிறான்.
மறுநாளே விடைபெறுகிறான். பதினைந்து நாட்களில் அவன் தாய் அவனுக்கு கடிதம் எழுதுகிறாள், ‘மகனே, உன் நண்பன் என சொல்லிக்கொண்டு ஒருவன் வந்தான். ஆனால் அவன் நடவடிக்கைகள் உன்னைப்போலவே இருந்தன. சொல் மகனே, வந்தது நீதானே!’ என்று... புகழ்பெற்ற எழுத்தாளர்களான புஷ்கின், துர்க்கனேவ், டால்ஸ்டாய், தாஸ்தாயெவ்ஸ்கி, செகாவ், கார்க்கி உள்ளிட்டோரின் கதைகளும் இந்நூலில் அணிவகுக்கின்றன. - பால்நிலவன்
ருஷ்யக் கதைகள்
தமிழாக்கம்: நா.பாஸ்கரன்
விலை ரூ.350
முல்லை பதிப்பகம்,
தொடர்புக்கு: 9840358301
அன்பும் அறமும்: தனித்தனி சிதறல்களாய் உருவான, 40க்கும் மேற்பட்ட சிறுசிறு கட்டுரைகள் ஒருசேரத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு மனிதன் நேர்மையாக வாழ்வதற்கே உலகின் அமைப்புகள் உதவ வேண்டும். ஆனால், உண்மை அப்படி இல்லையே என்கிற நூலாசிரியர் மு.அஸ்வின் ரோம் பொன் சரவணனின் ஆதங்கம், நூல் முழுவதும் வெளிப்படுகிறது.
அன்பை போதிக்கவே ஆன்மிகம் என்ற நிலையில், மதங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகள் பற்றி தனது கவலையை வெளிப்படுத்துகிறார். ஆயுதமேந்திய போராட்டங்களால் உலக மேம்பாட்டுக்கு எந்த நன்மையும் விளைவிக்க முடியாது என்று கூறும் நூலாசிரியர், மக்களைப் பிரித்து வைத்திருக்கும் அனைத்து வகையான தடைகளையும் தகர்த்து, அன்பும், அறமும் நிறைந்த மனித மனங்களால் மட்டுமே உலக மக்களை ஒன்றிணைக்க முடியும் என்று இந்நூலின் கட்டுரைகளில் கூறியுள்ளார். - பால்
எல்லைகள் இல்லா உலகம்
மு.அஸ்வின் ரோம் பொன் சரவணன்
விலை ரூ.300
ரோமரிஷி வெளியீடு
தொடர்புக்கு: 7550350468
மரபும் ஓவிய அழகும்: இந்தியாவின் முதல் நவீன நகரமான சென்னையில் மரபுத் தளங்கள் நிறைய உள்ளன. அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்வதும், அவற்றைப் பற்றி அறிய முயலும் ஆர்வமும் சமீப காலத்தில்தான் அதிகரித்துவருகின்றன.
இதற்கிடையே பல மரபுச் சின்னங்களை, கட்டிடங்களை இழந்துவிட்டோம். இப்படிப்பட்ட மரபுத் தளங்களை ஆவணப்படுத்தும் முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஒளிப்படம் மூலம் ஆவணப்படுத்துவது ஒரு முறை என்றால், ஓவியம் வழியே ஆவணப்படுத்துவது அதனினும் அழகுணர்ச்சி மிக்கது.
பாலச்சந்தர் எம்., யூசுப் மதியா ஆகிய இருவரும் இந்த நூலில் அந்தச் சின்னங்களை ஓவியங்களாகப் படைத்துள்ளனர். நீர்வண்ண ஓவிய முறையில் பாலச்சந்தர் உருவாக்கியுள்ள படைப்புகள் உயிர்ப்புடன் திகழ்கின்றன.
இதில் பல்வேறு மதச் சின்னங்கள், வரலாற்று நினைவிடங்கள், மரபுத் தளங்கள் என முக்கியமான 58 இடங்கள் இடம்பெற்றுள்ளன. ராயபுரம் நெருப்புக் கோயில், அடையாறு இசைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பழைய மெட்ராஸ் கிளப் கட்டிடம், லஸ் தேவாலயம் போன்ற பரவலாக அறியப்படாத சின்னங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. - அன்பு
சென்னை பாரம்பரியத்தின் வழிகாட்டி,
பாலச்சந்தர். எம். யூசுப் மதியா,
தமிழில்: கிருஷ்ண பிரபு,
எதிர் வெளியீடு,
விலை ரூ. 699