இலக்கியம்

‘பட்டியல் வடிவில் ஒரு (பொது) வாழ்க்கை வரலாறு’ முதல் ‘மணிரத்னம் சினிமா: மாற்றுப் பார்வை’ வரை | நூல் வரிசை

செய்திப்பிரிவு

பட்​டியல் வடிவி​லான தரவு​களை மட்​டுமே கொண்​டுள்ள இந்த நூல் தமிழில் அரி​தான முயற்​சி. கற்​பித்​தல், கல்வி நிறு​வனங்​களில் முக்​கிய​மான பொறுப்​பு​களை வகித்​தல், சொற்​பொழி​வு, நூல் எழுதுதல், பல்​வேறு அமைப்​பு​கள் மூலம் செயல்​படு​தல் எனத் தமது வாழ்​வைத் தமிழர்​களின் மேன்​மைக்​காகவே அமைத்​துக்​கொண்​ட​வர் காலஞ்​சென்ற க.ப. அறவாணன். அவரின் 50 ஆண்​டுத் தமிழ்த்​தொண்​டு​கள் இந்​நூலில் தொகுக்​கப்​பட்​டுள்​ளன.

1967லிலிருந்து 2017ஆம் ஆண்டு வரைக்​கும் அறவாணன் செய்த பணி​களைப் பற்​றிய விசால​மான பார்​வையை இத்​தொகுப்பு அளிக்​கிறது. அவர் எழு​திய கட்​டுரைகள், அவை வெளி​யான இதழ்​கள், அவரது சொற்​பொழி​வு​களின் தலைப்​பு​கள், அவை நிகழ்ந்த இடங்​கள், ஏற்​பாடு செய்த அமைப்​பு​கள், அவரது வானொலி உரைகள் ஒலிபரப்​பான நாள், நேரம் உள்​ளிட்ட தரவு​களைக் காண்​கை​யில் அறவாணன் என்​கிற ஆளுமை மீது நமக்​குக் கூடு​தல் மரி​யாதை தோன்​றுகிறது.

அறவாணனை நேர்​காணல் செய்த பத்​திரி​கை​யாளர்​களின் பெயர்​களும்​கூட இடம்​பெற்​றுள்​ளன. தன் பணி விவரங்​களைப் பராமரிப்​ப​தில் அறவாணனுக்கு இருந்த கவன​மும் இவற்​றைத் தொகுப்​ப​தில் அவரின் மனை​வி​யும் தமிழறிஞரு​மான தாயம்​மாள் அறவாணன் செலுத்​திய உழைப்​பும் நம்மை வியக்​கச் செய்​கின்​றன.

தொல்​காப்​பி​யம், சிலப்​ப​தி​காரம், திருக்​குறள் முதலானவற்​றைப் படித்​துப் பரப்​புரை செய்​வ​தில் அறவாணன் அடைந்த பெரு​மகிழ்ச்​சி, ஒரு மானுட​விய​லா​ள​ராக மேற்கு ஆப்​பிரிக்​கர்​களிடையே திரா​விடச் சமூகத்​தின் இயல்​பு​களைக் கண்டதில் அவருக்கு ஏற்​பட்ட நெகிழ்ச்​சி, தமிழர்​கள் ஒரு சமூக​மாகத் தோல்வி அடைய நேரும் சந்​தர்ப்​பங்​கள் குறித்து அறவாணன் கொண்​டிருந்த கவலை போன்​றவை இதில் வெளிப்​படு​கின்​றன. கல்விக்​கடன் வழங்​கப்​படும் முறை இன்​றும் விவாதத்​தில் இருக்​கும் சூழலில், ‘கல்விக் கடன் வழங்​கும் அதி​காரத்​தைக் கல்​லூரி முதல்​வர்​களிடம் தர வேண்​டும்’ என்​கிற ஆலோ​சனையை இவர், 2007இல் முன்வைத்​திருக்​கிறார்​. - ஆனந்தன் செல்லையா

க.ப.அறவாணரின் 50 ஆண்டுத் தமிழ்த் தொண்டு (1967-2017)
தொகுப்பாசிரியர்: தாயம்மாள் அறவாணன்
தமிழ்க் கோட்டம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 95977 17485

செம்பதிப்புகள் குறித்த ஆய்வு: உலகின் மிகச் சிறந்த செவ்வியல் இலக்கியங்கள் கொண்ட மொழிகளில் ஒன்று தமிழ். சங்க இலக்கியம் என்று சுட்டப்படும் நூல் தொகுதிகளே இந்தப் பெருமைக்குக் காரணம். சங்க இலக்கியங்கள் வாய்மொழியாகவும், பிறகு ஓலைச்சுவடிகளில் பிரதியெடுக்கப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டன. இப்படிப் பிரதியெடுக்கப்படும்போது, பிரதியெடுப்பவர்கள் செய்த மாற்றங்கள் பிரதிபேதம், பாடவேறுபாடுகளாக மேற்கண்ட இலக்கியங்களில் இருந்தன.

இந்தப் பின்னணியில் மூல நூலை அதன் இயல்புடன் வெளிக்கொண்டுவரும் முயற்சிகள், ‘செம்பதிப்பு’ என்கிற பெயரில் முன்னெடுக்கப்பட்டன. சில நூறு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தப் பணிகளின் பின்னணியில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றுடன் பத்துப்பாட்டு நூல்களின் செம்பதிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக ‘தமிழ்த்தடம்' இதழ் மலர்ந்துள்ளது. பேராசிரியர் இரா.அறவேந்தன் சிறப்பாசிரியராகச் செயல்பட்டு இந்த இதழைக் கொண்டுவந்துள்ளார். - நேயா

தமிழ்த்தடம் (8) செம்பதிப்புச் சிறப்பிதழ்
பரிசல் வெளியீடு
விலை: ரூ.180
தொடர்புக்கு: 88257 67500

சமகால சினிமாவின் மினி கையேடு: டிஜிட்டலுக்கு மாறிவிட்ட பிறகு, சினிமா அனைவரின் கைகளுக்கும் அடக்கமாக வந்துவிட்டது. மொபைலில் படம் பார்க்கத் தொடங்கி விட்டார்கள், பார்வையாளர்கள். பெருகிவிட்ட ஓடிடி தளங்களும் கணக்கிலடங்காத திரைப்படங்களை அதில் குவித்து வைத்திருக்கின்றன. கரோனாவுக்கு பிறகு, திரைப் படங்களுக்கு மொழி தாண்டியும் வரவேற்பு இருப்பதால், எதைப் பார்க்கலாம், எதை தவிர்க்கலாம் என்கிற குழப்பம் ஏற்படுவது நியாயமானதுதான்.

அந்தக்குறையை போக்கும்விதமாக, தான் பார்த்து ரசித்த பல்வேறு மொழித் திரைப்படங்களை இந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார், திரைப்பட இயக்குநர் ஜோசப் டி’சாமி (ஜேடி). நீண்ட கட்டுரையாக இல்லாமல், ஒவ்வொரு திரைப்படம் மற்றும் வெப் தொடர்கள் பற்றிய கதை சுருக்கம், அதில் என்ன சுவாரஸ்யம் என்கிற எளிய அறிமுகமாக எழுதப்பட்டுள்ள இதில், தமிழ்ப் படங்களை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார்.

250 திரைப் படங்களைப் பற்றிய அறிமுகம் கொண்ட இப்புத்தகத்தில், ஆங்கிலம், கொரியா, மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களுடன் உலக கிளாசிக் திரைப்படங்கள் பற்றிய விவரங்களும் இருக்கின்றன. முன்னுரையில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமி கூறியிருப்பதைப் போல, இந்நூல் சமகால உலக சினிமாவின் மினி கையேடாகவே இருக்கிறது. - அழகு

ஓடிடி சினிமா -சில பதிவுகள்
ஜோசப் டி’ சாமி
ஜேடி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 87545 07070

மணிரத்னம் சினிமா: மாற்றுப் பார்வை: தமிழ்நாட்டின் நவீன கால முக்கிய இயக்குநராக மணிரத்னம் முன்வைக்கப் படுகிறார். ஊடகங்கள், வெகுமக்கள் சினிமா விமர்சகர்கள் அவரைப் பெரும்பாலும் கொண்டாடுகின்றனர். அவரது திரைப் பங்களிப்பு குறித்து ஆங்கிலத்தில் விதந்தோதும் நூல்கள் வந்திருக்கின்றன. ஆனால், அவருடைய அனைத்துத் திரைப்படங்கள் குறித்த மதிப்பீடுகள் வெளிவரவில்லை. அதை இந்த நூலில் மேற்கொண்டிருக்கிறார் யமுனா ராஜேந்திரன். மணிரத்னத்தின் படங்கள் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டவையாக முன்வைக்கப்படுகின்றன.

அதேநேரம், அந்தத் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு கேளிக்கையாக மட்டும் இல்லாமல், என்ன உணர்வுகளைக் கடத்தின என்பது குறித்து பெரிய விவாதங்கள் நடைபெறவில்லை. மணிரத்னத்தின் காதல் படங்கள் பிரபலமடைந்தாலும் அரசியல் மையக்கருக்களைக் கொண்ட படங்கள் காரணமாகவே தேசிய அளவிலும் ஓரளவுக்கு சர்வதேச அளவிலும் அவர் அறியப்பட்டிருக்கிறார். அந்த வகையில் மணிரத்னம் படங்கள் என்னவிதமான கருத்தியல் அடிப்படைகளைக் கொண்டிருந்தன, மக்களிடையே எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்று இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அலசுகின்றன.- அன்பு

மணிரத்னம்: அழகியலும் கருத்தியலும்,
யமுனா ராஜேந்திரன்,
உயிர் வெளியீடு,
விலை: ரூ.360
தொடர்புக்கு: 98403 64783

SCROLL FOR NEXT