இலக்கியம்

புதிரல்ல, பாரதி! | நூல் நயம் 

செய்திப்பிரிவு

‘பாரதி தினத்தை ஒட்டி ​பார​தி​யைப் பற்றி நான் கண்​டறிந்த உண்​மை​களைக் கட்​டுரை வடி​வில் வழங்கி வரு​வதை ஒரு கடமை​யாகவே மேற்​கொண்டு வந்​துள்​ளேன்’ என ‘பாரதி - சில பார்​வை​கள்’ நூலுக்​கான முன்​னுரை​யில் கூறுகிறார் எழுத்​தாளர் தொ.​மு.சி. ரகு​நாதன். வாழ்​நாள் முழுதும் அவரை ஆட்​கொண்​டு​விட்ட ஆளு​மை​யாக பார​தி​யார் இருந்​தார்.

1982இல் பார​தி​யின் முதல் நூற்​றாண்டு விழா கொண்​டாடப்​பட்ட நேரத்​தில் இந்​நூலின் முதல் பதிப்பு வெளி​யானது. இதில் உள்ள 11 கட்​டுரைகள் மூல​மாக, புதிர்​போலத் தோற்​றமளிக்​கும் பார​தி​யின் சில படைப்​பு​களுக்​குப் பிந்​தைய – நாம் அறி​யாத காரணி​களை ரகு​நாதன் சுவைபட முன்​வைக்​கிறார்.

பார​தி​யின் படைப்​புத்​திறன் குறித்த பல்​வேறு பரி​மாணங்​களைத் தமிழ்ச் சமூகம் ஓரளவுக்கு இன்று உள்​வாங்​கி​யுள்​ளது. மக்​கள் மனதில் பாரதி என்​கிற பெயர் நுழைந்த அளவுக்​கு, வீடு​களில் அவரது நூல்​கள் நுழை​யாமல் இருந்த காலத்​தில் பார​தி​யின் சிறப்​பு​களை​யெல்​லாம் ஆய்​வுக்​கட்​டுரைகளாகப் பதிவு செய்​தவர்களில் முதன்​மை​யானவர் ரகு​நாதன்.

பாண்​ட​வர்​கள் கவுர​வர்​களின் சூழ்ச்சியால் துயருற்​றதும், எழுச்​சிக்​குப் பிறகு கவுர​வர்​களைப் போரில் வென்​றதும்​தான் மகா​பாரதக் கதை​யின் வடிவ​மாகக் காலங்கால​மாக இருந்து வரு​கிறது.

‘துன்​பத்​திலிருந்து இன்​பத்​துக்​கு’ என்​கிற தடத்​தில்​தான், தமிழில் வெளிவந்த பல காப்​பி​யங்​களும் கதை சொல்​லும் முறையைக் கையாளுகின்​றன. மகா​பாரதம் இயற்​றிய வியாசரும், அதைத் தமிழில் இயற்​றிய ஸ்ரீவில்​லிப்​புத்​தூ​ரார் போன்​றோரும் வனவாசம் சென்ற பாண்​ட​வர்​கள் இறு​தி​யில் நல்​வாழ்வு பெற்​றதோடு கதையை நிறைவு செய்​கின்​றனர்.

பார​தி​யார் இயற்​றிய ‘பாஞ்​சாலி சபதம்’ இதற்கு விதி​விலக்​காக இருக்​கிறது. பார​தி​யாரின் அணுகு​முறை, அர்ச்​சுனனும், பாஞ்​சாலி​யும் சூளுரைப்​ப​தோடு கதையை முடித்து வாசகர்​களுக்கு ஓர் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​துகிறது. இதற்​குப் பின்​னால் உள்ள பார​தி​யாரின் முதிர்ந்த பார்​வையை ரகு​நாதன் ‘முடி​யாத கதை’ என்​கிற கட்​டுரை​யில் கூறுகிறார்.

‘கரும்​புத்​தோட்​டத்​திலே- அவர்​/கைகளும் கால்​களும் சோர்ந்து விழும்​படி /வருந்​துகின்​றனரே’ என்​கிற பாடல், பிஜி தீவுக்கு ஒப்​பந்​தக் கூலிகளாகக் கூட்​டிச் செல்​லப்​பட்ட தமிழர்​கள் உள்​ளிட்ட தொழிலா​ளர்​கள் விலங்​கு​கள்​போல நடத்​தப்​பட்ட நிலை​யைக் கூறுகிறது.

பார​தி​யாரை இப்​பாடலை எழுதச் செய்த அரசி​யல் சூழல் ‘கரும்​புத் தோட்​டத்​திலே’ என்​கிற கட்​டுரை​யில் விவரிக்​கப்​படு​கிறது. இது பாரதி உலகளவி​லான அரசி​யல் பார்​வையை​யும், எல்​லைகள் கடந்த மனித நேயத்​தை​யும் கொண்​டிருந்​ததைக் கூறு​வதோடு, ஒப்​பந்​தக் கூலி​முறை ஒழிப்​புக்​காக முதலில் காந்​தி​யடிகள் கையில் ஏந்​திய ஜோதி, கோபால​கிருஷண கோகலே கைகளுக்கு மாறி, இறு​தி​யில் சி.எஃப்​. ஆண்ட்ரூஸிடம் நிலைகொண்டதையும் ஒரு புதினம்போலச் சித்திரிக்கிறது. - ஆனந்தன் செல்லையா

பாரதி சில பார்வைகள்
தொ.மு.சி.ரகுநாதன்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 98409 52919

ஆழி விழுங்கிய ‘குட்டி சிங்கப்பூர்’ - பாட்டாளியாக வாழ்க்கையின் முற்பாதியைக் கழித்த முதியவர் கருப்பையாவின் நினைவலை ‘பேரலையின் சாட்சியம் (1964, டிசம்பர் 23)’. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் கதை, கடலோர கவிதை பாடும் தனுஷ்கோடிக்கு இரவோடு இரவாக நம்மைக் கடத்திச் செல்கிறது.

உப்புக்காற்றின் வாசம் நாசியைத் துளைக்க, ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட நேரிடுகிறது. புனைவின் ஊடே கடலுக்குள் மூழ்கிய வரலாற்றை 95 பக்கங்களே கொண்ட இந்தக் குறுநாவல் நம் மனத்தில் ஆழப் பதித்து விடுகிறது.

காதலின்றி கதையா? “கருவக்காட்டுல வீசுற வெப்பக் காற்றை சுவாசிச்ச எனக்கு இதமான கடல் காற்றோடு தென்றல் வீசுனது மாதிரி இருந்துச்சு... இந்த உலகத்தில் என்னை நேசித்த முதல் மனுஷி” என்கிற நாவலாசிரியர் கு.காந்தியின் வர்ணனையால், நம்மை அறியாமல் உள்ளுக்குள் காதல் கொப்பளிக்கிறது.

கடந்த காலத்தில் மிதந்து கொண்டிருக்கும்போதே கதையோட்டத்தை இடைமறித்து நிகழ்காலத்துக்குச் சட்டென அவ்வப்போது அழைத்துவரும் உத்தியை நாவலாசிரியர் கையாண்டிருக்கும் விதம் அடுத்தது என்ன என்கிற சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

‘குட்டி சிங்கப்பூர்’ என்பதாக ஆங்கிலேயர் காலத்தில் கோலோச்சிய தனுஷ்கோடி, இன்று அதே வனப்புடன் நீடித்திருந்தால் தமிழ்நாடு மேலும் எட்டியிருக்கக்கூடிய பாய்ச்சலை எண்ணி, ஏக்கப் பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை. அட்லாண்டிக் பெருங்கடலில் மிதந்த ராட்சதப் பனிப்பாறையில் மோதி, 1,500 பேரின் உயிரைக் குடித்த டைட்டானிக் சொகுசு கப்பல் விபத்தை உலகறியச் செய்தது ‘டைட்டானிக்’ திரைப்படம்.

அதுபோலவே, ஒரு கடல் கிராமத்தையும், அதில் வாழ்ந்த 1,800க்கும் மேற்பட்ட உயிர்களையும் ஒரேயடியாக விழுங்கிய 1964-ம் ஆண்டு நிகழ்ந்த ஆழிப்பேரலை பெருந்துயரை, ரத்தமும் சதையுமாக உணரும்படி செய்கிறது ‘பேரலையின் சாட்சியம்’. - ம. சுசித்ரா

‘பேரலையின் சாட்சியம் (1964, டிசம்பர் 23)
கு.காந்தி
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 044-24332924

கவிதை போன்ற கதைகள்: கவிதை, நாவல், சிறுகதை என‌ பன்முகம் கொண்டவர் எழுத்தாளர் நர்சிம். சமீபத்தில் இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு ‘சொம்புநீர்ப்பூ. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளின் தலைப்பே வாசகர்களைக் கவரக்கூடியதாகப் பழந்தமிழ்ச் சொற்களில் இருக்கிறன. நர்சிம் இயல்பில் ஒரு கவிஞர் என்பதால், கவிதைக்குரிய பண்புகளுடன் பல கதைகள் எழுதப்பட்டுள்ளன. பேரிளம் பெண்ணோடுக் கடலை ஒப்பிடும் அதே நேரத்தில் குழந்தையின் கொட்டாவியையும் கடலோடு ஒப்பிடும்பக்கங்களை வாசிக்கும்போது இதனை உணரலாம்.

தொகுப்பில்‌ உள்ள ஒன்பது கதைகளும் ஒன்பது கதைக் களத்தைக் கொண்டுள்ளன. ‘நுரை’ சிறுகதையில் நீர்க் குமிழிகளையும், பாம்பு தீண்டியதால் வரும் நுரையினையும் ஒருசேர சிறுவனின் மனதில் காட்சிப்படுத்தியது குறும்படத்திற்கு இணையானதாக உள்ளது. ‘குழி’ சிறுகதையில்‌ வெளிப்படும் சமகாலத் தன்மை சிறப்பாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அலுவலக வாழ்க்கையைப் பற்றியும் நவீன காலயுகத்தைப் பற்றியும் காதாப்பாத்திரங்கள் வாயிலாகவே பேசியிருப்பது சிறப்பு. - சு. தீபிகா

சொம்புநீர்ப்பூ
நர்சிம்
எழுத்து பிரசுரம், சென்னை
விலை: ரூ100
தொடர்புக்கு: 89250 61999

SCROLL FOR NEXT