உலகத் தமிழ் ஓசை என்கிற மாத இதழை நடத்தியவர் பேராசிரியர் சி.எஸ்.எஸ்.சோமசுந்தரனார். இத்தகைய முயற்சிகளால் நிகழும் பொருளாதார இழப்புக்கு இவரும் விதிவிலக்கல்ல. ‘உலகத் தமிழர் கலைக்களஞ்சியம்’ நூலை வெளியிடுவது அவரது வாழ்நாள் லட்சியமாக இருந்தது.
நூல் வெளிவரும் முன்பே சோமசுந்தரனார் இறந்துவிட்டார். தனது பெருங்கனவான இந்த நூலை வெளிக் கொண்டுவர வேண்டும் என அவரால் அன்புடன் பணிக்கப்பட்ட இ.கே.தி.சிவகுமாரைப் பதிப்பாளராகக் கொண்டு இந்த நூல் இறுதியில் 2006இல் வெளிவந்தது. அது மீண்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் தனிமனிதர் ஒருவரால் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) ‘உலகத் தமிழர் கலைக்களஞ்சிய’ மாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. முதன்மையான தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், தேசத் தலைவர்கள் குறித்த சுருக்கமான வரலாறு இதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
அதில் மட்டும் சோமசுந்தரனார் மனநிறைவு கொண்டுவிடாமல் தமிழர் இசைவிழா, தமிழர் வாணிகம், தமிழரின் நம்பிக்கைகள், பசிபிக் கடலில் தமிழ்க் குடியரசு போன்ற தலைப்புகளிலும் பயனுள்ள தகவல்களைத் தந்திருக்கிறார். சங்க காலத்தில் ‘புளிஞர்’ எனக் குறிக்கப்பட்ட மக்கள்தான் இன்று பளிங்கர் எனப்படுவதாக ‘பழகு தமிழ்’ என்னும் இயலில் இடம்பெறும் செய்தி ஓர் உதாரணம்.
பதிப்பகச் செம்மல் ச. மெய்யப்பன் குறித்து தமிழண்ணல் பெயரில் வந்துள்ள கட்டுரை போன்றவை வேறெங்கும் வாசிக்கக் கிடைக்காதவை. சில சமகால ஆளுமைகளின் பணிகள் குறித்தும் வாசகர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற சோமசுந்தரனாரின் ஆர்வத்தைப் புலப்படுத்தும் வகையில், அவர்கள் குறித்த இயல்களும் உள்ளன. - ஆனந்த் செல்லையா
உலகத் தமிழர் கலைக்களஞ்சியம்
அமரர் சி.எஸ்.எஸ்.சோமசுந்தரனார்;
பதிப்பாசிரியர்: இ.கே.தி.சிவகுமார்;
அன்பு பதிப்பகம்
விலை: ரூ. 2000;
தொடர்புக்கு: 73389 84668
குழந்தைகளை ஈர்க்கும் நூல்: பன் ஒரு வாகனத்தை வாங்க விரும்புகிறது. ஆனால், வாகனம் விற்கும் அணில், 35 பருப்புகளைக் கொண்டுவந்தால், அந்த வாகனத்தைத் தருவதாகச் சொல்கிறது. பன்னுக்கு 35 பருப்புகளைக் கொண்டுவந்து எப்படிக் கொடுப்பது என்று தெரியவில்லை. மரத்தில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஆந்தை, ஒரு யோசனை சொல்கிறது.
அந்த யோசனை என்ன, பன் அதை எப்படிச் செயல்படுத்தியது, வாகனத்தை வாங்க முடிந்ததா என்பதை எல்லாம் எளிய ஆங்கிலத்தில் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார் கிருத்திகா. அழகான ஓவியங்களுடன் வழுவழுப்பான கெட்டித் தாளுடன் குழந்தைகள் ஈர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது, இந்த நூல்.
Bun and the Magic Jar
எஸ்.கிருத்திகா
Lore Quill Tales
விலை: ரூ.299
தூரிகையில் விரியும் வரலாறு: மனிதகுல வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது ரஷ்யப் புரட்சி. 1917-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்தப் புரட்சியானது உலகிலுள்ள உழைக்கும் மக்களுக்கெல்லாம் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது. ஜார் மன்னனுக்கு எதிராக லெனின் தலைமையில் செஞ்சேனையில் இணைந்த தொழிலாளி வர்க்கம், புதிய விடியலுக்கான புரட்சிக்கு வித்திட்டது.
‘மாகாளி பராசக்தி உருசிய நாட்டினில் / கடைக்கண் வைத்தாள்! அங்கே / ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி! / கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!’ என்று 1921-இல் ‘சுதேச மித்திரன்’ இதழில் நம் பாரதியை எழுத வைத்ததும் இப்புரட்சியே. ரஷ்யப் புரட்சி நடைபெற்று ஒரு நூற்றாண்டினைக் கடந்திருக்கும் வேளையில், புரட்சி நடைபெற்ற போது ரஷ்யாவில் இருந்தபடி நேரடியான செய்திகளை எழுதிய அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜான் ரீட் எழுதிய ‘உலகை உலுக்கிய பத்து நாட்கள்’ நூலையும், எழுத்தாளர் ரைஸ் வில்லியம்ஸ் எழுதிய ‘நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி’ நூலையும் முதன்மை ஆதாரமாக் கொண்டு,
தூரிகையின் வழியே காட்சிகளாக விளக்குகிறது இந்நூல். கவிஞரும் ஓவியருமான ஸ்ரீரசா, சின்னச் சின்னச் சித்திரங்களின் மூலமாகப் புரட்சியின் தாக்கத்தை நம் மனங்களுக்குள் கடத்திப்போகிறார். இந்நூலில் அடர்வண்ணங்களினால் தீட்டப்பட்ட பல நூறு ஓவியங்கள், அன்றைய நாளில் பாட்டாளி வர்க்கம் அனுபவித்த இன்னல்களையும், உரிமைகளையும், உணர்வுகளையும் பெற புரட்சி ஒன்றே தீர்வு என்கிற இலக்கை நோக்கி உழைப்பாளி மக்கள் களமிறங்கியதையும், புரட்சியின்போது நடைபெற்ற நிகழ்வுகளையும் ஒரு கதைக்கான கூறுகளோடு சுவாரசியமாகச் சொல்லிச்செல்கின்றன. இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாலும் உலக வரலாற்றில் சிவப்பு நட்சத்திரமாக மின்னிக்கொண்டிருக்கும் ரஷ்யப் புரட்சியை அனைவரும் அறிந்துகொள்ளவும், படித்துத் தெளிவுறவும் இந்நூல் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. - மு.முருகேஷ்
மானுடம் கண்ட மகத்தான புரட்சி - வரலாறு & சித்திரங்கள்:
ஸ்ரீரசா
காலம் வெளியீடு,
மதுரை.
விலை: ரூ. 400
தொடர்புக்கு: 94430 78339