இலக்கியம்

நினைவில் தங்கும் உரைகள்

செய்திப்பிரிவு

பேச்​சுக் கலை​யில் சிறந்​தவர்​கள் மேடைகளில் பேசி​விட்​டு, கைதட்​டல்​களை எளி​தில் வாங்​கி​விட முடி​யும். ஆனால், அவர்​களின் பேச்சை எழுத்​தில் கொண்​டு​வரும்​போது​தான் அது சிந்​திக்க வைக்​கும் பேச்​சா, சிந்​தனையை மழுங்​கடிக்​கும் பேச்சா என்​பது தெரிய​வரும்.

மேடைப் பேச்சை முக்​கிய​மான​தாகக் கரு​தி, ஏராள​மான புத்​தகங்​களைப் படித்​து, தகவல்​களைச் சேகரித்​து, பொருத்​த​மான இடத்​தில் அவற்​றைச் சேர்த்​து, கேட்​போர் நினை​வில் என்​றென்​றும் தங்​கி​விடு​கிறார் ஸ்டா​லின் குணசேகரன். புத்​தகத் திரு​விழாக்​களில் அவர் பேசிய அத்​தகைய சிறந்த உரைகளைத் தொகுத்​து, ‘காகிதப் புரட்​சி’ என்​கிற பெயரில் கொண்டு வந்​திருக்​கிறார் வே. குமர​வேல்.

இந்த 30 உரைகளும் உலக அளவி​லான புத்​தகங்​களைப் பற்​றி​யும் எழுத்​தாளர்​களைப் பற்​றி​யும் நூல​கங்​களைப் பற்​றி​யும்​தான் இருக்​கின்​றன. டயரி என்​றதும் நம் நினை​வுக்​குச் சட்​டென்று வருபவர் ஆன் ஃப்​ராங்க். ஹிட்​லர் ஆட்​சி​யின் கொடுமை​களை உலகத்​துக்​குச் சொன்​னது அந்த 15 வயது சிறுமி​யின் டயரி​தான். அதே போல் சுமார் 270 ஆண்​டு​களுக்கு முன்பு வாழ்ந்த, பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்​பாள​ராக இருந்த ஆனந்த ரங்​கம் பிள்​ளை, நாள் தவறாமல் 25 ஆண்​டு​கள் நாட்​குறிப்​பு​களை எழுதி வைத்​திருக்​கிறார். அவருடைய எழுத்​தின் மூலமே அந்​தக் காலக்​கட்​டத்​தின் வரலாற்றை நாம் தெரிந்​து​கொள்ள முடிகிறது.

பாடப்​புத்​தகத்​தைப் படித்​தால் தேர்​வில் தேர்ச்​சி​யடைய​லாம், அதைத் தாண்டி மற்ற புத்​தகங்​களைப் படித்​தால் மனித​னாகலாம் என்று சொல்​லி, ஏழாம் வகுப்பு படிக்​கும்​போது ஸ்டா​லின் குணசேகரன் அப்​பா, டால்​ஸ்​டாய் எழு​திய குழந்​தைகளுக்​கான புத்​தகத்​தைக் கொடுத்​திருக்​கிறார்.

இந்த நிகழ்​வு​தான் தான் புத்​தகங்​களைத் தேடிச் சென்று படிப்​ப​தற்​கான காரண​மாக அமைந்​தது என்று குறிப்​பிடும் இவர், ஆசிரியர்​களும் பள்​ளி​களில் பாடத்​தைத் தாண்​டி​யும் புத்​தகங்​களைப் படிக்க ஊக்​குவிக்க வேண்​டும் என்​கிறார். சிறை இலக்​கி​யம் என்​றால் நேரு, நெல்​சன் மண்​டேலா, பகத் சிங் போன்​றவர்​கள் நினை​வுக்கு வரு​வார்​கள். சிறைச்​சாலை​யில் நேரு, உலக வரலாற்றை இரண்டு பாகங்​களாக எழு​தி​னார்.

சிறைக்குள் இருந்த அவரால் எப்​படி உலக வரலாற்றை எழுத முடிந்​தது? அவர் ஏற்​கெனவே ஏராள​மான நூல்​களைப் படித்​து, குறிப்​பு​கள் எடுத்​து, நினை​வில் நிறுத்தி வைத்​திருந்​த​தாலேயே எழுத முடிந்​தது என்​ப​தைப் படிக்​கும்​போது ஆச்​சரிய​மாக இருக்​கிறது. புகழ்​பெற்ற எழுத்​தாளர் டைம் மிஷின் புகழ் ஹெச்​.ஜி. வெல்​ஸும் உலக வரலாறு புத்​தகத்தை எழு​தி​யிருந்​தார்.

அமெரிக்க இதழான நியூ​யார்க் டைம்​ஸ், நேரு​வின் உலக வரலாற்​றை​யும் வெல்​ஸின் உலக வரலாற்​றை​யும் ஒப்​பிட்டு ஒரு கட்​டுரை வெளி​யிட்​டது. அதில், ‘நேரு​வின் பிரம்​மாண்​ட​மான உலக வரலாற்​றைப் படிக்​கும்​போது, ஹெச்​.ஜி. வெல்ஸ் நம் கண்​களுக்​குச் சுருங்​கி​விடு​கிறார்’ என்று சொன்​னதோடு, ஆங்​கிலத்​தை​யும் நேரு​விட​மிருந்து கற்​றுக்​கொள்​ளலாம் என்று குறிப்​பிட்​டிருந்​தது.

அவர்​களின் மொழியை ஆங்​கிலேயர் அல்​லாத இன்​னொரு​வரிடம் கற்​றுக்​கொள்​ளலாம் என்று சொன்​னதன் மூலம் நேரு​வின் எழுத்​தாற்​றலை​யும் மொழி வளத்​தை​யும் புரிந்​து​கொள்​ளலாம். இப்​படி இந்த நூலில் மார்​டின் லூதர் கிங், ஆபிர​காம் லிங்​கன், பிரடெரிக் ஏங்​கெல்​ஸ், தேவநேயப் பாவாணர், உ.வே.​சா. பரி​தி​மாற் கலைஞர், ஜி.ஹெச்​.ஹார்​டி, டால்​ஸ்​டாய் போன்ற ஏராள​மான அறிஞர்​கள் குறித்து சுவாரசி​ய​மான தகவல்​கள் கொட்​டிக்​கிடக்​கின்​றன. - ஸ்நேகா

காகிதப் புரட்​சி,
த. ஸ்டா​லின் குணசேகரன்,
நியூ செஞ்​சுரி
புக்​ ஹவுஸ்​,
விலை: ரூ.600
தொடர்​புக்​கு: 044 26251968, 26258410

SCROLL FOR NEXT