இலக்கியம்

‘சமூகத்தில் தனியன்’ முதல் ‘மனிதம் மிக்கக் கதைகள்’ வரை | நூல் நயம்

செய்திப்பிரிவு

புகைப்படக்காரர் ஒருவரைப் பின்னணியாகக் கொண்டது இந்த நாவல். ஹைதராபாத், திருப்பூர், ஆனைக்கட்டி எனப் பல இடங்களில் நடக்கும் கதை இது. நாயகனான கிருஷ்ணன் சமைத்த தேநீர், தொட்ட பணம், உணவுப் பொட்டலம் எல்லாம் குப்பையில் வீசப்படுகின்றன. ஏனெனில் அவன் பிறப்பு அப்படிப்பட்டது. திருப்பூரை விட்டு ஹைதராபாத் சென்றால் போதையின் உச்சத்தில் நண்பனான ரமேஷும் அவனை இழிவு படுத்துகிறான். அவன் மீது காட்டப்பட்ட காழ்ப்புணர்ச்சி அவனை உந்தி மேலே உயர்த்துகிறது.

எண்ணங்களின் தொடர்ச்சியே இந்தக் கதை, காலம், இடம், பயணம் மாறி மாறி நம்மைத் தட்டாமலை ஆட்டுகிறது. கிருஷ்ணனின் சிந்தனைகளில், அவன் எண்ணங்களில் நாம் பல ரக வாழ்க்கையைப் பார்க்கிறோம். இலக்கியம் பத்தாம் நூற்றாண்டு மன்னர் பெருமை காட்டுவது அல்ல. நமது கால மக்களின் குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களின் இன்னல்களை காட்டுவதே நீதி சார்ந்த இலக்கியம். இலக்கியத்திலும் அநீதிசார் இலக்கியம், நீதி சார் இலக்கியம் உள்ளன. அந்தப் பணியைத் திறம்படச் செய்துள்ளார் நாவலாசிரியர் சுப்ரபாரதி மணியன். - இராமன் முள்ளிப்பள்ளம்

ஸ்மைல் ப்ளீஸ்
சுப்ரபாரதிமணியன்
பரிதி பதிப்பகம்
விலை: ரூ.230
தொடர்புக்கு:72006 93200

ஒரு கிலோ அரிசியைச் சுமக்க மாட்டாத வலி: பாரி கபிலனின் ‘அம்மாயி கும்பிட்ட சாமி’ சொந்த ஊரை, அதன் நீர்ப்பரப்புகளை, பறவையினங்களை, காடு கரைகளை மறக்க மாட்டாது, பிழைப்புக்காக மாநகரில் வந்து அல்லாடும் வாழ்க்கையின் வலியைச் சொல்லும் பாங்கு கவனத்தை ஈர்க்கிறது. சிற்றூரின் திளைப்பில் இருந்தாலும், அதன் சத்தத்தில், நெரிசலில், புகைக்கழிவில் தனக்கும் பங்குண்டு தானே என்று சந்தடிமிக்க நகரத்தையும் ஒரு கட்டத்தில் பிடித்துப் போகிறது.

‘வேங்கைவயல்’ கவிதை, 'சாதிவெறி மலத்தை விடவும் குமட்டுகிறது… சீ தள்ளிப் போ' என்று முடிகிறது. 'என் சிறுவயது' எனும் கவிதை, தான் படிக்கக் கூடாத சாதி என்று பழித்த ஓர் ஆசிரியரின் வன்முறை வசவுகளை வலியோடு வெளிப்படுத்துகிறது. அம்மாயியின் மீதான நேசம், பாசப் பிழிவு.

‘நெல்லை அதன் முளையிலிருந்தே அறிவோம்' என்று பேசும் ‘அரிசிகளின் கதை', காய்ச்சலை மாரடித்துச் சொல்லிக் கதறி இருக்கிறோம் குலசாமியிடம் என்றெல்லாம் விவரித்து, வயல் வெளிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட வாழ்க்கையில், ‘என்ன சாபக்கேடோ, எங்கள் நிலத்திலிருந்து கொண்டு செல்ல முடியாத அரிசியைக் கடைகளிலிருந்து வாங்கி வருகிறோம், பெருவெளியில் மண்ணையே சுமந்த எங்களால் ஒரு கிலோ அரிசியைச் சுமக்க முடியவில்லை' என்று நிறைவுபெறும் இடத்தில் ஒலிக்கும் விம்மல் எளிதில் கடக்க முடியாதது. - எஸ்.வி.வேணுகோபாலன்

அம்மாயி
கும்பிட்ட சாமி
பாரி கபிலன்
கவின் வெளியீடு விலை: ரூ.130
தொடர்புக்கு: 9840303575

மிளிரும் பொன்வரிகள்: ‘தமிழுக்​குத் தொண்டு செய்​வோன் சாவ​தில்​லை’ என்ற புரட்​சிக்​க​விஞரின் வரிகளுக்​கேற்ப, இந்த மண்ணை விட்டு மறைந்​தா​லும் தனது சிந்​தனை​யால் எழுத்​தால் இன்​ன​மும் வாழ்ந்து கொண்டிருப்​பவர் மூத்​தத் தமிழறிஞ​ரான ஒளவை நடராசன். வாழும் காலத்​தில் அவர் பங்​கேற்ற கருத்​தரங்​கு​கள், ஆய்​வரங்குகளில் தமிழாய்ந்த சிறப்​பான சொற்​பொழி​வு​களை ஆற்​றியதோடு, தான் பொறுப்​பேற்ற துறை களிலெல்​லாம் தமிழே முதன்​மை​யாக விளங்​கிட வேண்​டுமென்று சிறப்​பான முன்​னெடுப்​பு​களைத் திறம்பட செயல்​படுத்​தி​யுள்​ளார்.

ஆயிரத்​தும் மேற்​பட்ட பல்​துறை சார்ந்த தமிழ் நூல்​களுக்கு அவரெழு​தி​யிருக்​கும் முன்​னுரைகளி​லிருந்து 125 நூல்​களுக்​கான முன்​னுரைகளை மட்​டும் ‘ஒளவை​யின் தமிழ​முது’​வாகத் தொகுத்​துத் தந்​துள்​ளார் அவரது புதல்​வ​ரான ஒளவை அருள். கவிதை, கட்​டுரை நூல்​களுக்கு ஒளவை நடராசன் எழு​திய முன்​னுரைகள் அனைத்​து​மே, மூன்​று, நான்கு பக்​கங்​களுக்​குள் சுருக்​க​மாக எழுதப்​பட்​டிருந்​தா​லும், நூலின் மையக்​கருத்​தினை ஆழமாக உள்​வாங்​கி, அவற்​றின் பொருட்​செறி​வினை வாசகர்​களுக்கு எடுத்து வழங்​கும் வகை​யில் திறம்பட எழுதப்​பட்ட பொன்​னுரைகளாகவே மிளிர்​கின்​றன. முன்​னுரைகளுக்​கிடையே அவரது தமிழ்ப்​பணி​களை நினை​வு​கூறும் வகை​யில் பொருத்​த​மான 86 ஒளிப்​படங்​களை​யும் இணைத்​துள்​ளது நூலுக்கு கூடு​தலான சுவை சேர்க்​கும் வகை​யில் அமைந்​துள்​ளது. - மு.முருகேஷ்

ஒளவையின் தமிழமுது
ஒளவை அருள்
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 9600064311

மனிதம் மிக்கக் கதைகள்: நிஷாந்தனின் இந்தக் கதைத் தொகுப்பில் 12 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வித்தியாசமான அனுபவங்களைப் பகிர்கின்றன. இந்தக் கதைகள் எல்லாவற்றிலும் கதையாசிரியருக்கு வலுவான தொடர்பு இருப்பது போன்ற நெருக்கத்தை வாசகர்கள் உணர்வார்கள். எல்லாக் கதைகளிலும் மனிதம் நிறைந்திருக்கிறது. ஒரு வீட்டில் ஏல நோட்டீஸ் ஒட்டச் செல்லும் ஒருவரின் அனுபவமாக வெளிப்படும் ‘சாளரம்’ கதையில் மனித உணர்வுகளின் தேரோட்டத்தை எழுத்தாளர் நிகழ்த்தியிருக்கிறார்.

ராமநாதபுரம் பகுதியில் ஒரு ஊரின் கதையாக விவரிக்கப்பட்டுள்ள ‘ஒற்றைச் செருப்பு’ கதை, இந்து-முஸ்லீம் இணக்கத்துக்குச் சான்றாக எழுதப்பட்டுள்ளது. ஒரு இந்து, முஸ்லீம் குடும்பம் ரொம்பவும் அந்யோன்யமாக இருக்கிறது. ஆனால், அந்த நட்புக்கு சிறு பிணக்கு, செருப்பு வடிவில் வந்து விழுகிறது. ஆனால், காலம் எல்லாவற்றுக்கும் மருந்து இடுகிறது என்பதுபோல் அந்த முஸ்லீம் நண்பர், கதையின் பிரதான பாத்திரமான சண்முகசுந்தரத்தைத் தேடி வருகிறார். அவரது பேச்சில், செய்கையில் ஒரு குற்ற உணர்வு இருக்கிறது. நான்கு கண்களின் துளிகள் எல்லாவற்றுக்கும் விடையாகிறது. - விபின்

சாயல், நிஷாந்தன்
நாற்கரம் வெளியீடு
விலை: ரூ.170
தொடர்புக்கு: 9551065500

SCROLL FOR NEXT