அம்மாக்களைப் பாடுவது நவீன இலக்கியத்தின் ஒரு அம்சம். சில படைப்புகளில் அம்மா ஒரு திரு உருவாக, ஒரு சங்கல்பமாக இருக்கிறாள். ஆனால், அம்மா குறித்த இந்தப் பொதுக் கற்பிதம் கேள்விக்கு உட்படுத்தக்கூடியதுதான். இந்தப் பின்னணியில் அம்மாவைப் பற்றி கன்னட எழுத்தாளர் வசுதேந்த்ரா எழுதிய இந்த நினைவுக் குறிப்புகள் விசேஷமானது.
அம்மாவின் நினைவுக் குறிப்புகள் என்கிற பெயரில் எழுதப்பட்டாலும் இவை எல்லையில்லாச் சுதந்திரத்துடன் எழுதப்பட்டுள்ளன. தனது பால்ய காலம், கிராமம் குறித்துச் சுவாரசியமாக எழுத இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் அவர். அதில் அம்மா ஒரு பங்குதான். ஆனால், ஆதார மையமாக அவளை வசுதேந்த்ரா சுழலச் செய்கிறார். வீட்டுக்கு டிவி வந்த அனுபவத்தில் அந்தக் காலமும் மனித உணர்வுகளும் அவ்வளவு வெள்ளந்தித்தனத்துடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பொறியியல் படித்த எல்லோரிடமும் டியூப் லைட், ஃபேன் மாட்டத் தெரியுமா எனக் கேட்பதுபோன்ற ஒரு கொடூரம் வசுதேந்த்ராவுக்குச் சம்பவிக்கிறது. வீட்டுக்கு வந்த புது டிவி, புள்ளியாகத் தெரிகிறது. பொறியியல் நன்றாகப் படிக்கும் தன் மகன் அதைச் சரிசெய்துவிடுவான் என அப்பா நம்புகிறார்.
ஊர்ச்சனமும் அக்காவும் அம்மாவும், வசுதேந்த்ரா ரிப்பேர் செய்யும் அழகைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள். உள்ளூரில் ரேடியோ ரிப்பேர் செய்பவனும் டிவி ரிப்பேர் செய்வதைக் கற்றுக்கொள்ளலாம் என்கிற ஆசையுடன் காத்திருக்கிறான். வசுதேந்த்ரா உண்மையில் அப்போதுதான் டிவி என்கிற சாதனத்தைப் பார்க்கிறார். இந்தப் பிரச்சினையில் அம்மாதான் தலையிட்டுச் சரிசெய்கிறார். இப்படி அவர் அனுபவத்தில் அம்மா தன் தலையைக் காட்டுகிறார்.
டவுசரில் மலம் போய்விடும் ஒரு சிறுவன் இந்த எழுத்துகளுக்குள் இருக்கிறான். எள்ளலுடன் அவனைப் பற்றி வசுதேந்த்ரா சொல்கிறார். அப்படி அந்தப் பையன் எங்கு நின்றாலும் அம்மாதான் துணியும் குடத் தண்ணீருமாக வருகிறாள். அந்த அம்மா வயதாகி, திராணியற்று ஆடையிலேயே மலத்தை விட்டுவிடுகிறாள். இந்தச் சூழலில் மகன் என்ன செய்வான், என்ன செய்தான்? வசுதேந்த்ரா அதைச் சொல்கிறார். முன்பகுதி எள்ளலை, ஒரு உணர்ச்சிவசமான இடத்துக்கு நகர்த்திவிடுகிறார். இந்த இரண்டு விஷயங்களுக்கும் வசுதேந்த்ரா காலத்தைச் சாட்சியாக்குகிறார்.
வாய் விட்டும் சிரிக்குமளவுக்கான அங்கதம் வசுதேந்த்ராவுக்கு வசப்பட்டுள்ளது. எவர் சில்வர் பாத்திரங்களின் மீதான அம்மாவின் ப்ரியம் அவளின் குணாம்சமாகவே வெளிப்பட்டுள்ளது. அந்தக் காலத்துப் பெண்களின் பாத்திரப் பற்று வியக்கத்தக்கதுதான். ரயில் பயணத்தில் ஒரு சொந்தக்கார பையன் ஒரு டம்பளரைக் கழுவி வைக்கிறேன் என வெளியில் தவறவிட்டு விடுகிறான். அது ‘டன்’ என்கிற சத்தத்துடன் விழுந்துவிட்டது. அம்மா அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தப் போய்விட்டாளாம்.
திரும்பி வரும்போது தண்டவாளத்தில் அந்த டம்பளரை ஒருமுறை பார்த்துவிடமாட்டோமா எனப் பார்த்தபடியே வந்தாளாம். தனக்குப் பிடித்த தெலுங்கு சீரியலை அப்பாவைப் பார்க்க வைத்துள்ளார் அம்மா. அப்பா இறந்த காரியத்தின்போது “அந்த சீரியல் முடியம்வரை உன் அப்பா உயிரோடு இருந்து அதைப் பார்த்துவிட்டார்” என உணர்ச்சிவசப்பட்டாளாம். ஆனால், இவருக்குத்தான் காரிய நிகழ்ச்சியிலும் சிரிப்பு வந்துவிட்டதாம்.
அக்காவின் திருமணச் சீர்வரிசைப் பாத்திரங்களைக் கொடுக்கப்போன அனுபவமும் இவரது அங்கச் சுவைக்கான சான்று.
பேருந்தில் சீர்வரிசையுடன் ஏறிவிடுகிறார். பிறகு நடந்தது இதுதான்: “அம்மா சொன்னது போல் காலடியில் பெட்டியை வைத்துக் கொண்டேன். ஆனால் காலஞ்சென்ற டி. கே. ராமராயருடைய விறுவிறுப்பான துப்பறியும் நாவல் ஒன்றை வாசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். ராயர் அடுத்தடுத்துப் பிணத்தை விழவைத்துக் கொண்டிருந்தார்.
நான் யாரைக் கொலைகாரன் என்று ஊகித்துக் கொண்டிருந்தேனோ அவனே கொலையானான். யாரோ காலைக் கொஞ்சம் நகர்த்துங்க என்றார். நகர்த்தினேன். பெட்டியை நைசாக அவர் ஏதோ நிறுத்தத்தில் எடுத்துக் கொண்டு போய்விட்டார். கொலை எல்லாம் முடிந்து, குற்றவாளி யார் என்று தெரியும்முன் அக்கா ஊர் வந்துவிட்டது” ஆனால், சீர்வரிசைப் பாத்திரங்கள் போய்விட்டன.
இந்த நூலுக்குள் அம்மா எங்கும் நிறைந்திருக்கிறாள்; அவள் பார்வை இல்லை. ஆனால், அது குறையில்லை. புனைவுக்கு உரிய லட்சணங்கள் இந்த அனுபவங்களில் தோய்ந்திருக்கின்றன. ஆனால், வாழ்க்கையைக் குறித்த ஆழமான பார்வை இல்லை. இந்த நூலின் மனிதர்கள், மனித சங்கல்பமாக இருக்கிறார்கள்; கேலிச் சித்திரக் கதையின் கதாபாத்திரங்களைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளனர். ஒரு விகல்பமில்லாத்தன்மை அதனால் தான் வெளிப்பட்டிருக்கிறது.
இந்த எழுத்துகளுக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. மாறாக அவர்களது இயல்புகள் என அவை ஆனந்தமாகச் சொல்லப்பட்டுள்ளன. வாழ்க்கை பற்றிய குதூகலம் நூலில் வெளிப்பட்டுள்ளது. ‘தவறுகள் செய்தால் சாமிகண்களைக் குத்தும் என்றாய்/ஒருமுறை தவிட்டுக்காக/வாங்கினேன் உன்னை என்றாய்/...எதனால் இன்று பொய்களை நிறுத்திக் கொண்டாய் அம்மா?’ என்கிற ஞானக்கூத்தன் கவிதையில் காட்சிப்படுத்தும் அம்மாவைப் போல் ஒரு அம்மாவைத்தான் வசுதேந்த்ரா இந்த நூல் வழி திருத்தமாகச் சொல்லியுள்ளார். அவரும் அம்மாவுமான உலகம், இந்த நூல் வழித் தனித்து மேலெழும்பி ஒரு சிட்டுக் குருவியைப் போல் சிறகசைக்கிறது. அந்தச் சிறகசைவு நமது நினைவுக் கட்டுகளையும் அவிழ்த்துவிடுகிறது.
- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in
அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்
வசுதேந்த்ரா (தமிழில்: கே.நல்லதம்பி)
டூ ஸ்சோர்ஸ் பிரஸ் விலை: ரூ.350
தொடர்புக்கு: 8903665360