இலக்கியம்

பத்திரிகைத் துறையில் ஒரு பண்பாளர்

செய்திப்பிரிவு

தமிழ் இதழியல் துறை​யில் பிரபல​மான பெயர் எஸ்​.​பாலசுப்​ரமணி​யன். தமிழின் முன்​னணி வார இதழான ‘ஆனந்த விகடன்’ பொற்​காலத்​தில் அதன் ஆசிரியர் பொறுப்​பில் இருந்​தவர். ஸ்மார்ட்​போன் வரு​கைக்கு முந்​தையை தலை​முறை ஆளு​மை​களை உரு​வாக்​கிய​தில் இவரது ஆசிரி​யத்​து​வத்​தின் பங்​களிப்பு முக்​கிய​மானது. பாலசுப்​ரமணி​யனின் தனிப்​பட்ட ஆளு​மைப் பண்​பு​கள் பத்​திரி​கைத் துறை​யில் பரவலாகப் பேசப்​பட்​டது​தான்.

ஊழியர், முதலாளி என்​கிற நிலைகளுக்கு அப்​பாற்​பட்டு அவர் விகடன் ஊழியர்​களை அணுகு​வார் என்​ப​தற்​கான உதா​ரண​மாக இந்த நூல் பல சம்​பவங்​களை முன்​னிறுத்​துகிறது. விகடன் குழுமத்தில் பத்திரிகையாளராகவும், நிர்​வாகப் பொறுப்​பிலும், பாலசுப்​ரமணி​யனின் உதவி​யாள​ராக​வும் பணி​யாற்​றிய ஜே.​வி.​நாதன் இந்த நூலை எழு​தி​யிருப்​பது இந்த உண்​மை​யைத் துலங்கச் செய்​கிறது.

பாலசுப்​ரமணி​யன் ‘சேவற்​கொடியோன்’ என்​கிற புனைபெயரில் எழு​திய கதைகள் குறித்து இந்த நூலில் சொல்​லப்​பட்​டுள்​ளது. சென்னை புறநகர் படப்பையில் பாலசுப்​ரமணி​யனின் பண்ணை குறித்து பத்​திரி​கைத் துறை​யில் அடிக்​கடி விதந்​தோம்​பப்​படு​வதுண்​டு. வேளாண்​மை, பறவை வளர்ப்பு போன்​றவை குறித்து அவருக்கு இருந்த நாட்​டம், ஊழியர்​களுக்​குச் சமைத்து அவர்​கள் ருசிப்​ப​தைக் கேட்​டறிந்து மகிழும் அவரது குணம், இவையெல்​லாம் இன்​றைய பெருநிறு​வனச் சூழலில் அரி​தினும் அரிது எனச் சொல்​லலாம். நூலாசிரியரிடம், பாலசுப்ரமணி​யன் கழுதைக் குட்டிகள் வாங்​கிக் கேட்டிருக்கிறர். இந்தச் சம்​பவத்​தை இவர் சுவாரசி​ய​மாக எழு​தி​யுள்​ளார்.

தேவை இருப்​போரைக் கண்​டடைந்து உதவும் பாலசுப்​ரமணி​யத்​தின் அருங் ​குணத்​தை​யும் சில சம்​பவங்​கள் மூலம் நூலாசிரியர் வெளிப்​படுத்​தி​யுள்​ளார். எழுத்தாளார் ஸ்டெல்லாபுரூஸ் தன் மனைவி இழந்த துக்கத்தைப் பகிர பாலசுப் ரமணியத்தைத் தேடி வந்த ஒரு நிகழ்ச்சி இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. பாலசுப்ரமணியன் தனது அறையிலிருந்து வெளி வந்து அவரை வரவேற்றுள்ளார். பாலசுப்ரமணியனைப் பார்த்ததும் கதறி அழுதிருக்கிறார் புரூஸ்.

தனக்கு ஆறுதலும், ஆதரவும் தரக்கூடியவர் என புரூஸ் உணர்ந்ததால் வந்த அழுகை. இது பாலசுப்ரமணியனின் பண்புக்கு மற்றுமோர் சான்று. ஊழியர்களின் பிழைகளை அவர் எதிர்கொள்ளும் தன்மையான முறை, அவர்களை உற்சாகப்படுத்த அவர் அளிக்கும் புதுப் புது யோசனைகள் எல்லாம் இதழியல் பணிகளுக்கான முன்னுதாரணங்கள். பாலசுப்ரமணியன் என்கிற ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை இந்த நூல் வழி ஜே.வி.நாதன் துலங்கச் செய்துள்ளார்.- ஜெய்

சேவற்கொடியோன்
ஜே.வி.நாதன்
புஸ்தகா
விலை: ரூ.140
தொடர்புக்கு: 7418555884

தேவையான அரசியல் பாட நூல்: முன்பெல்லாம் பள்ளி – கல்லூரி வளாகங்களில், தங்கும் விடுதிகளில் மாணவர் தலைவர்கள் உடனிருந்து வழிநடத்துதல் இயல்பாக இருக்கும். ஆலை, தொழிற்சாலைகளில் வாயிற்கூட்டங்களும், தொழிற்சங்க அலுவலகங்களும் அரசியல் பட்டைத் தீட்டும் களங்களாக இருக்கும். தேநீர்க் கடை இருக்கைகளும், முடித்திருத்தகங்களும் அரசியல் விவாத அரங்கங்களாக ஜொலிக்கும். இந்தச் சூழல் இப்போது முற்றாகத் தகர்ந்தே போய்விட்டது.

யாருக்கும் நின்று பேச நேரமில்லை. இன்றைக்கு, நாளைக்கு, இந்த வாரம், மாதம் என எல்லோர் தலையிலும் இலக்குகளைச் சுமைகளாக்கி இறக்கி வைத்திருக்கின்றன நிர்வாகங்கள். மூச்சு முட்டும் சுமையில் களைத்துக் கிடப்பவர்களிடம் ஆரவாரங்களே அதிக இடத்தைப் பிடிக்கின்றன. இந்த நிலையில் சரியானதைக் கூடச் சுருக்கமாகக் கொண்டு சேர்க்க முடியும் என்று நூலாசிரியர் தா. சந்தரன் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்கு உரியது.

லெனினின் நினைவு நூற்றாண்டை ஒட்டி அவரது படைப்புகளிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தேர்ந்தெடுத்துத் தினமும் முகநூலில் பதிவாக்கி வந்தார் சந்தரன். அவையனைத்தும் அரசியலை கூர்மையாகப் பார்க்க துணைசெய்யும் கண்ணாடியாக இருந்தன. அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட தோழர்கள் பலர் வலியுறுத்தியதன் விளைவே இந்நூல். - ஜீவா

லெனினிடம் கற்போம்
தா.சந்தரன்
பொன்னுலகம்
புத்தக நிலையம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 88707 33434

நாடக நூலுக்குக் கூட்டம் | திண்ணை: நடிகரும் நாடகவியலாளருமான சி.கார்த்திகேயனின் ‘நிலமாடிய பொழுது’ என்னும் நாடக நூல் குறித்த கூட்டம் இன்று (29.03.25) மாலை 4 மணி அளவில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறவுள்ளது. நாடகவியலாளர்கள் பிரளயன், வெளி ரங்கராஜன், பேரா.கோ.பழனி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தவுள்ளனர். போதிவனம் பதிப்பகம் ஒருங்கிணைக்கிறது.

அஞ்சலிக் கூட்டம்: முத்துக் காமிக்ஸ் நிறுவனர் செளந்திர பாண்டியனுக்கு இன்று (29.03.25) மாலை 6 மணிக்கு சென்னை கே.கே.நகர் டிஸ்கவரி புக்பேலஸ் அரங்கில் அஞ்சலிக் கூட்டம் நடைபெறவுள்ளது. நடிகர் பொன்வண்ணன், ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர், கிங் விஸ்வா, யுவகிருஷ்ணா உள்ளிட்டோர் பேசவுள்ளனர். தமிழ்காமிஸ் உள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைக்கிறது.

SCROLL FOR NEXT