காலம், வெளி ஆகிய கருத்தாக்கம் உலகம் முழுவதும் இலக்கிய, பண்பாட்டாய்வுகளில் தொழிற்படுவதைப் பார்க்க முடிகிறது. தமிழிலும் வெளி குறித்த ஓர்மை உண்டு. அதுவே தமிழரின் முதற்பொருளாகவும் கருதப்படுகிறது. இக்கருத்தாக்கத்தைக் கோட்பாட்டு நிலையாக்கி ஆராய்தல் அவசியம். அதைத் தொடங்கி வைத்துள்ளார் காசிமாரியப்பன்.
காலச்சுவடு பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியுள்ள ‘கள் மணக்கும் பக்கங்கள் – தமிழ்ச் சிந்தனை மரபில் வெளியும் காலமும்’ எனும் நூலில் இவர் முன்வைத்திருக்கும் அரசியற் பார்வை சமகால ஓர்மையுடையது. வெளி எனும் கருத்தாக்கத்தை அகம் x புறம், வைதிகவெளி x அ-வைதிகவெளி; பிராமணவெளி x சிரமணவெளி; ஆண்வெளி x பெண்வெளி; சீறூர்வெளி x பேரூர்வெளி என்றவாறு அமைத்துக்கொண்டு சிறுபான்மை வெளியில் அமர்ந்துகொள்கிறார்.
பருண்மையானது மட்டுமின்றிக் கட்புலனாகா வெளியும் உண்டு; அதுவே பேராதிக்கம் செலுத்துவதாகக் கருதுகிறார் காசிமாரியப்பன். திணைத் தன்மையில் அமைந்த பழந்தமிழர் வெளி, சோழர் காலத்தில் சாதியவெளியாக மாற்றமடைவதைச் சுட்டிக்காட்டுகிறார். குழந்தை விளையாட்டிலிருந்து இறப்பு வரையில் நிகழும் வெளிசார் அரசியலை முதல் இயலில் விவரிக்கிறார். பத்துக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன.
பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களும் நவீன நாவல்களும் அவருடைய ஆய்வுப் பொருள்களாகின்றன. ஆய்வின்வழி அவர் கண்டடைவது, பட்டினப்பாலை தாந்திரீகத் தன்மைக் கொண்ட உலகாயத நூல். மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து உள்ளிட்ட நூல்களில் இனக்குழுத் தன்மையழிந்து ஆண் மையம்கொண்ட வேந்துருவாக்கம் நிகழ்கிறது. தலித்திய நாவல்களில் புனைவியற் பாங்கான மண்சார் பிடிப்புகள் உள்ளன. இப்பண்பு சாதிய விடுதலைக்குத் துணைநிற்காது.
பெருமாள் முருகன், இமையம், பூமணி, சோ.தர்மன், சிவகாமி, பாமா உள்ளிட்டோர் கிராம வெளியையே கதையாக்குகின்றனர். நகரவெளியைப் புறந்தள்ளுகின்றனர். சோலை சுந்தரப்பெருமாளின் நாவல்களில் சமயசாயல் படிகிறது. அவை வட்டாரத் தன்மையில் நுட்பமாக அமைந்துள்ளன. தி.ஜா.விடம் மாற்றுமரபு தொடங்கினாலும் கம்யூனிஸஎதிர்ப்பு மேலோங்கியுள்ளது உள்ளிட்டஆய்வுமுடிவுகளை வெளி எனும் அணுகுமுறையைக்கொண்டு முன்வைத்துள்ளார். பகடிமொழியில் நுட்பமான ஆய்வுச்செய்திகளை அளிக்கும் சொல் மணக்கும் பக்கங்களாக இந்நூல் திகழ்கிறது. - கா.விக்னேஷ்
கள் மணக்கும் பக்கங்கள்
க. காசிமாரியப்பன்
காலச்சுவடு பதிப்பகம்,
விலை: 260
தொடர்புக்கு: 04652 278525
எதிர் அழகியலின் உயிர்நாடி: தமிழின் அச்சுத் துறை சார்ந்து இயங்கிய செயற்பாட்டாளர் பொதியவெற்பன் ஆவார். சிற்றிதழ்கள், பதிப்பகம் வழிக் காத்திரமாக இயங்கியவர் அவர். அவரது பங்களிப்புக்குக் கெளரவம் செய்யும் நூல் தொகுப்பு. இதில் பொதியின் பங்களிப்பைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
பொதியின் நேர்காணல்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. பொதியின் இயல்பான தடாலடிப் பதில்கள் வாசிப்புக்குச் சுவாரசியமும் கருத்துக்கு வலுவும் சேர்ப்பவை. பேரா. வீ.அரசு பொதியின் பங்களிப்பை முழுமையாகப் பட்டியலிட்டுள்ளார். புதுமைப்பித்தன் இயலின் முதல் பயணி என பொதியைச் சொல்லலாம்.
அந்த இயலில் நூல் வெளியிட்டுள்ள வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் கட்டுரை புதுமைப்பித்தனின் ‘மூணாவருணாசலமே...’ பாடலை முதன்முதலில் பதிப்பித்தது பொதிதான் என மேற்சொன்ன கூற்றுக்குச் சான்றளிக்கிறார். எழுத்தாளார் செல்வ புவியரசனின் சிலிக்குயில் வெளியீடாக வந்த ‘பறை’ நூல்கள் குறித்துச் சொல்லியிருக்கிறார்.
அதனுடன் அவரது இலக்கிய, பதிப்புச் செயற்பாட்டையும் பகிர்ந்துள்ளார். கவிஞர் விஷ்ணுபுரம் சரவணன் ‘எதிர் அழகியலே உயிர்நாடி’ எனக் கவிதை வடிவில் பொதிக்குப் பொன்னாடை போர்த்தியுள்ளார். இன்னும் பல கட்டுரைகள் பொதிக்கு மதிப்புக்கூட்டுகின்றன. - ஜெய்
பொதியவெற்பன் மதிப்பீட்டுத் தொகை நூல் 3
தொகுப்பு: அ.பழனிச்சாமி, பதிப்பு: இரா.கந்தசாமி
உயிர் பதிப்பகம்
விலை: ரூ.450
தொடர்புக்கு: 98947 74213
வாழ்க்கையின் கலைடாஸ்கோப் | நம் வெளியீடு: வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் அனுபவங்களே நமக்குப் பாடம் எடுக்கின்றன. அவையே ஆசானாகவும் இருந்து வழிகாட்டுகின்றன. அனுபவங்களின் வழிப் பெறப்படுகின்ற பாடங்கள் ஏதோ ஒன்றை உணர்த்திவிட்டே செல்கின்றன. எழுத்தாளர் பாவண்ணனின் ‘வண்ணக் கிளிஞ்சல்கள்’ என்கிற அனுபவங்களின் தொகுப்பும் அப்படித்தான்.
இந்தத் தொடரின் வழியே பாவண்ணன், தன் அனுபவங்களோடு மனித மனங்களின் ஈரத்தை, சக மனிதனுக்குத் தோள் கொடுக்கும் இயல்பை, இருப்பை, யதார்த்த அழகியலுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் வாசகர்கள் பெற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் ஏராளமாக இருக்கின்றன.
உச்சி வெயில் நேரத்தில் மரத்தடியில் அமர்ந்து வெல்லம் விற்கும் ஏழைப் பெண் ஒருவர், பசியால் வெல்லத்தைத் தவிப்போடு பார்க்கும் மாணவர்களுக்குச் சிறிதும் தயங்காமல் வெல்லத்தை உடைத்துக் கொடுக்கும் கட்டுரையைப் படிக்கும்போது, ‘வெல்லம் நம் கைகளில் பிசுபிசுப்பாக உருகி வழிவதையும் அதைச் சுவைக்கும் பரவசத்தையும்’ நம்மால் உணர முடிகிறது என்றால், அது பாவண்ணனின் அசாத்தியமான எழுத்துக்குச் சான்று எனலாம்.
வண்ணக் கிளிஞ்சல்கள்
பாவண்ணன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.170
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
ஆவணப்படத் திரையிடல் | திண்ணை: ஈழ நாடக ஆளுமை ஏ.சி.தாசீசியஸ் ஆவணப்படத் திரையிடல் இன்று (22.03.25) காலை 11 மணி அளவில் சென்னை கே கே நகர் டிஸ்கவரி புக்பேலஸில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் இயக்குநர் அம்ஷன் குமார் ஆவார்.
நாவல் போட்டி: தேநீர் பதிப்பகம் நாவல் போட்டியை அறிவித்துள்ளது. தேர்வுபெறும் மூன்று நாவல்களுக்குத் தலா ரூ.10,000 வழங்கப்படும். நாவல், குறைந்தபட்சம் 25,000 சொற்கள் இருக்க வேண்டும். வெளிவராத புதிய நாவலாக இருக்க வேண்டும். அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 15.08.2025. மேலதிகத் தொடர்புக்கு: theneerpathippagam@gmail.com