உலகளாவிய புதிய அனுபவங்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் தனித்துவமான பங்கை ஈழ எழுத்துகள் செய்து வருகின்றன. யுத்தத்தையும் அகதி வாழ்வையும் எழுதாத ஈழ எழுத்தாளர் ஒருவரைக்கூட காட்ட முடியாது. யுத்தத்தின் ஆரம்ப காலத்தல் புலம் பெயர்ந்த ஈழ எழுத்தாளர்கள் புலத்தில் வாழ்ந்த பொழுதும் தாய்நாட்டுக் கதைகளையே எழுதி வந்தனர்.
அந்த நிலை இன்று மாறிப் புலத்து வாழ்வும் ஈழ எழுத்தில் ஊடுருவி கலந்துவிடத் தொடங்கி உள்ளது. தமிழுக்கு இது ஒரு அகில உலகப் பரிமாணத்தை வழங்கி உள்ளது. பரந்த தளம் புதிய மொழி நடையையும் அவாவி நிற்கிறது. எழுத்தாளர்கள் பலர் இந்தப் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அனோஜன் பாலகிருஷ்ணனின் முதலாவது நாவல் ‘தீக்குடுக்கை’ இதன் இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.
வெளிநாட்டில் பிறந்த தமிழரின் பார்வையில் நகரும் கதை, தற்கால ஈழ அரசியல், வாழ்வின் பல்வேறு முக்கிய முரண்களையும் தொட்டுச் செல்கிறது. அதே சமயம் யுத்தத்தின் பல கோர அனுபவங்களையும் பதிவுசெய்கிறது. ஒரு குறுநாவலில் இத்தகைய சிக்கல்களை ஒன்றிணைப்பது, அதுவும் வாசிப்பவருக்குச் சிரமமின்றி செய்வது ‘தீக்குடுக்கை’ நாவலைக் கவனத்திற்கு உள்ளாக்குகிறது. நாட்டிற்குள் அகதி, நாடு திரும்பும் அகதி என அகதியாகும் உலகத்தையும் அதற்குள் இருக்கும் அவலங்களையும் செல்கிறது நாவல்.
அனோஜன் நன்கறியப்பட்ட ஈழ எழுத்தாளர். அவரது ‘பச்சை நரம்பு’ மிகவும் பேசப்பட்ட சிறுகதைத் தொகுப்பு. மௌனி போல் அகவய உணர்வுகள் சார்ந்து கதை சொல்லும் பாவனை கொண்டவர் என அறியப்பட்டவர் அனோஜன். இந்நாவல் இதில் இருந்து முற்றிலும் மாறிய நடை கொண்டதாக இருக்கிறது.
இது அவரது புதிய முயற்சி. புதிய முயற்சி என்பது இலகுவான ஒன்றல்ல. ஒரே பாவனையில் தொடர்ந்து எழுதி வருபவர்கள் மலிந்து இருக்கும் தமிழ் இலக்கியச் சூழலில் மீண்டும் புதிய முயற்சிகள், புதிய வெளி, புதிய கதைக் கரு என நகர்பவர்கள் பெரும் சிரமம் எடுக்க வேண்டி உள்ளது. இது போலச் செய்தல் அல்ல. அதனால்தான் அவர்கள் புதிய மொழி, எழுத்து நடை, சொல்லும் முறை என நகர வேண்டி உள்ளது. இந்த வெளிச்சத்தில்தான் இந்த நாவலை அணுக வேண்டும்.
புலம்பெயர் அனுபவங்களையும், ஈழ யுத்த அனுபவங்களையும் காயங்களாக காவித் திரிபவர்களுக்கு இது நாவலாக அனுபவம் தராமலும் போகலாம். ஆனால், ஆசிரியர் அவர்களை மட்டும் நோக்கி இதைப் படைக்கவில்லை என்றே எண்ணுகிறேன். அதற்கும் அப்பால் பரந்து கிடக்கும் தமிழ் வெளிக்கு இந்த முரண்களையும் அனுபவங்களையும் பரப்பிச் செல்ல விரும்பும் அவா நாவலுக்கு லாவகமும் எளிமையும் தந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
அதே சமயம் இந்தக் கதையை முற்றிலும் சாதாரணம் என ஒதுக்கி விட்டும் செல்ல முடியாது. கே.டானியலின் கதைகளைச் சாதாரணம் என எவ்வளவு ஒதுக்கிய போதும், இன்றும் அவரது கதைகள் தமிழ்ப் பரப்பை ஆக்கிரமித்து இருப்பதை அறிவோம். சில கதைப்பரப்புகள் உள்ளங்களில் வளரும். அதற்கு நாட்கள் எடுக்கும்.
சில வார்த்தை அலங்கார நாவல்களைப் படிக்கும்போது ஒரு அழகியல் உணர்வைத் தரும். அதுவும் ஒரு திறமைதான். கவர்ச்சியை அற்புதம் எனச் சிலாகிக்கும் வழமை உண்டுதானே. ஆனால், கதை சேராத முறையில் விவரிப்பாக மட்டும் அது விரியும்போது விரைவில் நாம் அந்த நாவலை மறந்து விடுகிறோம்.
சில சமயம் அத்தகைய எழுத்துகள் அலுத்துப் போய் விடுகின்றன. அந்த நாவலில் என்ன கதை இருந்தது, என நம்மை யோசிக்க வைத்து விடுகிறது. அனோஜனின் இந்த நாவல் அத்தகையதல்ல. மாறாக மனதில் பரப்பு விரிய வைக்கும் வகை. அனோஜன் ஒரு நல்ல கதை சொல்லி. அவரது எழுத்து தொடர்ந்து செழுமைப்பட்டு வருகிறது. கூடவே அவரது எழுத்துகளின் சமூக ஆழங்களும் வளர்ச்சி கண்டு வருவதை இந்த நாவலில் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
- தொடர்புக்கு: senann@hotmail.com
தீக்குடுக்கை
அனோஜன் பாலகிருஷ்ணன்
சால்ட் பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 7010908978