கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் ரூ.2-க்கு இட்லியும், ரூ.3-க்கு தோசையும் விற்பனை செய்யப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் அதிகமாக உள்ளனர். இவர்கள் விவசாயம், கரி மூட்டத் தொழில் செய்கின்றனர். இக்கிராமத்தில் 5-க்கும்மேற்பட்ட இட்லிக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் ஒரு இட்லி ரூ.2 முதல் ரூ.5-க்கும், தோசை ரூ.3-க்கும் சட்னி, சாம்பாருடன் விற்பனை செய்யப்படுகிறது.
காலையில் மட்டும் விற்பனை செய்யப்படும் இக்கடைகளில் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் ஏராளமானோர் சாப்பிட்டுச் செல்கின்றனர். அதேபோல் கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் தோசை ரூ.4 முதல் ரூ.5-க்கும்,ஊத்தப்பம் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு தேங்காய் சட்னி, காரச் சட்னி,சாம்பார் வழங்கப்படுகிறது. ஒருவர் ரூ.10 முதல் ரூ.25-க்குள் காலை உணவை நிறைவு செய்யலாம்.
சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இட்லி ரூ.10-க்கும், தோசை ரூ.40 முதல் ரூ.60-க்கும் விற்பனை செய்யும் நிலையில் ஏ.புனவாசல், கோவிலாங்குளம் கிராமங்களில் குறைந்த விலையில் இட்லி, தோசை விற்பனை செய்யப்படுவது வெளியூர் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரிசி, பருப்பு, காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்தாலும் இப்பகுதியில் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த விலைக்கு இட்லி, தோசை விற்பனை செய்கின்றனர்.
அதேபோல் ஏ.புனவாசல், மாரியூர், எம்.கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ரூ.1-க்கு ஒரு போண்டா அல்லது ஒரு வடை விற்கப்படுகிறது. இதுவே நகரங்களில் ரூ.5 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது.
ஏ.புனவாசலில் வீட்டின் அருகே உள்ள பெட்டிக் கடையில் இட்லிக் கடை நடத்தி வரும் முருகவள்ளி(38) என்ற பெண் கூறியதாவது:
கடந்த 15 ஆண்டுகளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறேன். ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் பயனடையும் வகையில் லாப நோக்கம் இன்றி ஒரு இட்லி ரூ.2.50-க்கு விற்பனை செய்கிறேன். காலையில் மட்டும் இந்த வியாபாரம் செய்கிறேன். வியாபாரம் முடிந்ததும் விவசாய வேலை அல்லது நூறு நாள் வேலைக்குச் சென்றுவிடுவேன்.
எந்த வியாபாரம் செய்தாலும் மனசாட்சிக்குப் பயந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில் குறைந்த லாபத்தில் பால் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறேன் என்றார்.
இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும் கிராமத்தில் குறைந்த லாபத்தில் இக்கடைகள் இயங்கி வருவது எங்களுக்கு உதவியாக உள்ளது என்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
உலகம்
14 mins ago
சினிமா
3 hours ago
ஓடிடி களம்
35 mins ago
இந்தியா
43 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
வாழ்வியல்
3 hours ago
இந்தியா
4 hours ago