கோவை: தானங்களில் பலவகைகள் இருந்தாலும், உடல் தானம் என்பது மருத்துவ மாணவர்களின் கல்விக்கு பயன்படும் முக்கிய ஒன்றாகும். மருத்துவக் கல்லூரிகளில், 10 மாணவர்களுக்கு ஓர் உடல் என்பது தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) வகுத்துள்ள விதிமுறை.
இந்தத் தேவை அறிந்து, வயதுமூப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்த கோவை ராம் நகரைச் சேர்ந்த அன்ன பூரணி அம்மாளின் (88) உடலை, அவரது மகன்கள், மகள்கள் என 5 பேர் இணைந்து கோவை சிங்கா நல்லூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு தானமாக அளித்துள்ளனர்.
அந்த உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து, மருத்துவமனையின் டீன் ரவீந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் டி.ரவிக்குமார், இருப்பிட மருத்துவ அலுவலர், உடற்கூறியல் பேராசிரியர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தானம் அளிக்கும் நடைமுறை: இது தொடர்பாக டாக்டர் டி.ரவிக்குமார் கூறியதாவது: தற்போது உயிருடன் இருப்பவர்கள், தங்கள் இறப்புக்கு பிறகு, உடலை தானம் செய்ய விரும்பினால், 20 ரூபாய் முத்திரை தாளில், ‘என்னுடைய மறைவுக்குப் பிறகு எனது உடலை தானமாக வழங்க சம்மதிக்கிறேன்’ என குறிப்பிட்டு, கையெழுத்திட வேண்டும்.
அவர்கள் இறந்த பிறகு வாரிசுகள் தான் உடலை ஒப்படைக்க வேண்டும் என்பதால், கணவன் அல்லது மனைவி, அவரது பிள்ளைகள், தாங்கள் இதற்கு ஒப்புக்கொள்வதாக கையெழுத்திட்டு, சான்றுறுதி அலுவலர்களிடம் (நோட்டரி பப்ளிக்) கையெழுத்து பெற வேண்டும். உடல் தானம் அளிக்க வேண்டுமெனில், அது இயற்கை மரணமாக இருக்க வேண்டும்.தற்கொலை, கொலை, விபத்து போன்றவற்றால் உயிரிழந்தால் அந்த உடலை பெற இயலாது.
ஒருவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்கிறோம். அவர் செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார் என்றால், அந்த உடலை நேரடியாக தானமாக வழங்க இயலாது. அவர் உயிரிழந்த காரணத்தை மருத்துவர் குறிப்பிட்டு அளித்த இறப்பு சான்று இல்லாமல் தானமாக உடல் பெற்றுக்கொள்ளப்படாது. சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் இறப்பு இருந்தால் மட்டுமே உடலை தானமாக வழங்க முடியும்.
தானமாக வழங்கப்படும் உடலை மருத்துவமனைக்கு எடுத்துவர, அரசின் இலவச அமரர் ஊர்தி சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு 155377 என்ற எண்ணில் தொடர்புகொண்டால், எங்கு உடல் உள்ளதோ அங்கு ஆம்புலன்ஸ் வந்துவிடும். தானமாக உடலை பெற்றுக்கொண்ட பிறகு, அதற்கான சான்று குடும்பத்தினரிடம் வழங்கப்படும்.
உடலை பெற்ற பிறகு அந்த உடலானது‘எம்பாமிங்’ செய்யப்பட்டு, உடற்கூறியல் குறித்து மாணவர்களுக்கு பாடம் நடத்துவ தற்காக பாதுகாக்கப் படும். அவ்வாறு பாடத்தை தொடங்கும்போது, அந்த உடலின் காலை தொட்டு வணங்கிவிட்டுதான் மாணவர்கள் பாடத்தையே கற்க தொடங்குவர். ஓராண்டில் 100 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பாடம் நடத்த, 10 உடல்கள் தேவைப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
29 secs ago
தமிழகம்
29 mins ago
கல்வி
31 mins ago
தமிழகம்
33 mins ago
இந்தியா
32 mins ago
சினிமா
37 mins ago
தமிழகம்
39 mins ago
இந்தியா
53 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
57 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago