“நமது ராணுவ வீரர்களின் உடல்கள் மீது நடத்தப்பட்டது 2019 மக்களவைத் தேர்தல்” - சத்ய பால் மாலிக்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "2019 மக்களவைத் தேர்தல், நமது ராணுவ வீரர்களின் உடல்கள் மீது நடத்தப்பட்டது" என்று பாஜக அரசு மீது ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் சத்ய பால் மாலிக் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது: “தேர்தல்கள் (2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்) நமது ராணுவ வீரர்களின் உடல்கள் மீது நடத்தப்பட்டன. அதுகுறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அப்படி நடத்திருந்தால் அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் (ராஜ்நாத் சிங்) பதவி விலகியிருக்க வேண்டியிருக்கும். பல அதிகாரிகள் சிறை சென்றிருக்க வேண்டும். பெரிய சர்ச்சையே உருவாகியிருக்கும்.

புல்வாமா தாக்குதல் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நடந்தது. அப்போது பிரதமர் மோடி, ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஒரு படப்பிடிப்பில் இருந்தார். அவர் அங்கிருந்து வெளியே வந்ததும் அவரிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. நான் அவரிடம் நாம் செய்த தவறினால், நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறினேன் அதற்கு அவர் என்னை அமைதியாக இருக்கும்படிக் கூறினார்" என்றார்.

மேலும், மாலிக் அதானி விவாகரம் குறித்தும் மத்திய அரசைத் தாக்கினார். அதுகுறித்து அவர் கூறுகையில், "வெறும் மூன்றே ஆண்டுகளில் அதானி அதிக அளவு சொத்துகளைச் சேர்த்துள்ளார். உங்களால் அவ்வாறு சேர்க்க முடிந்திருக்கிறதா? காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் அதானிக்கு கிடைத்த ரூ.20,000 கோடி எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதமர் பதில் அளிக்கவே இல்லை. இரண்டு நாட்கள் அவர் நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால், அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை. ஏனென்றால் அவரிடம் பதில் இல்லை.

நான் கோவாவின் ஆளுநராக இருந்தபோது அம்மாநில முதல்வரின் ஊழல்கள் குறித்து பிரதமரிடம் புகார் தெரிவித்தேன். அதன் விளைவாக ஆளுநர் பதவியில் இருந்து நீங்கப்பட்டேன். ஆனால், முதல்வர் அந்தப் பதவியில் நீடித்தார். அதனால்தான் அவர்கள் ஊழலில் ஈடுபடுகிறார்கள், அதில் அவர்களுக்கு ஒரு பங்கு கிடைக்கிறது, மீதமுள்ள பணம் அதானிக்குச் செல்கிறது என்று நான் நம்புகிறேன்.

அவர்களுக்கு நீங்கள் மீண்டும் வாக்களித்தால், அதற்கு பின்னர் உங்களால் எப்போதும் வாக்களிக்கவே முடியாது. அவர்கள் உங்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பைத் தரமாட்டார்கள். எப்போதும் நாங்கள் தானே வெற்றி பெறுகிறோம், பிறகு எதற்கு தேர்தலுக்குக்காக செலவு செய்ய வேண்டும் என்று பதில் சொல்வார்கள்" என்று முன்னாள் ஆளுநர் பேசினார்.

சத்ய பால் மாலிக் ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பு ஒருங்கிணைந்த அந்த மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். முன்பு ஒருமுறை, புல்வாமா தாக்குதல் தொடர்பாக அவர் மத்திய அரசு மீது புகார் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அழவர் 2018, ஆகஸ்ட் 23 முதல் 2019 அக்டோபர் 30-ம் தேதி வரை ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது, காப்பீடு தொடர்பான ஊழல் குறித்த ஆவணங்களை அழிப்பதற்காக ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு சிபிஐ விசாரணைக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

6 mins ago

க்ரைம்

12 mins ago

க்ரைம்

21 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்