40 எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைகிறேனா? - தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் மறுப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார், கட்சியின் 40 எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அஜித் பவார் மறுத்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத் பவார் செயல்படுகிறார். அவரது அண்ணன் மகன் அஜித்பவார் அந்த கட்சியின் மூத்ததலைவராக உள்ளார். மகாராஷ்டிராவில் 4 முறை துணை முதல்வராக அவர் பதவி வகித்துள்ளார்.

தற்போது மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த சூழலில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவார் கட்சியின் 40 எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக கட்சி எம்எல்ஏ.க்களுடன் அஜித் பவார் ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தனது ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களின் முகப்பு பகுதியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கொடியை அவர் அகற்றியது பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று நிருபர்களிடம் கூறியபோது, “அஜித் பவார் தலைமையில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்ததாகக் கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது. எந்தவொரு கூட்டமும் நடத்தப்படவில்லை. கட்சியை வலுப்படுத்துவது குறித்து மட்டுமே ஆலோசித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

இதே விவகாரம் தொடர்பாக அஜித் பவார் மும்பையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நான் பாஜகவில் இணையபோவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. எந்தவொரு எம்எல்ஏவிடமும் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெறவில்லை. எனது உயிருள்ளவரை சரத் பவார் தலைமையின் கீழ் செயல்படுவேன். இதுதொடர்பாக எழுத்துபூர்வமாக உறுதி அளிக்கவும் தயாராக உள்ளேன். நான் தேசியவாத காங்கிரஸில் இருக்கிறேன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இவ்வாறு அஜித் பவார் தெரிவித்தார்.

சரத் பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “அடுத்த 15நாட்களில் அரசியலில் 2 மிகப்பெரிய நிகழ்வுகள் அரங்கேறும். ஒரு நிகழ்வு டெல்லியிலும் மற்றொரு நிகழ்வு மகாராஷ்டிராவிலும் நடைபெறும்’’ என்று தெரிவித்தார். என்ன நிகழ்வு நடைபெறும் என்பதற்கு அவர் விளக்கம் அளிக்கவில்லை.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, “சிவசேனாவை உடைத்தது போன்று தேசியவாத காங்கிரஸை உடைக்க சதி நடக்கிறது. இதற்காக மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன’’ என்று குற்றம் சாட்டினார்.

இதனிடையே தேசியவாத காங்கிரஸை சேர்ந்த மாணிக் கோகடே, சுனில் சுக்லே, அன்னா பன்சோத் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் அஜித் பவாருக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். எந்தசூழ்நிலையிலும் அஜித் பவாருக்கு ஆதரவாக இருப்போம் என்று அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்