புதுடெல்லி: ஆந்திரா, ஜார்க்கண்ட் உட்பட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று நியமனம் செய்தார். இவர்களில் 6 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். 7 ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தமிழக பாஜக மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர ஆளுநராக இருந்தபகத் சிங் கோஷ்யாரி தனது கருத்துகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். கடந்த நவம்பரில் இவர் சத்ரபதி சிவாஜி பற்றிதெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அதிருப்தியடைந்த பகத்சிங் கோஷ்யாரி, கடந்த மாதம் பிரதமர் மோடியை சந்தித்து, ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
எதிர்க்கட்சிகள் வரவேற்பு
இந்நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ்,மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அங்குள்ள எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.
2 முறை எம்.பி.யாக இருந்தவர்
ஜார்க்கண்ட் ஆளுநராக தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 முறை பாஜகமக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். தேசிய கயிறு வாரியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர்ஏற்கெனவே ஆளுநராக பதவிவகிக்கும் நிலையில் தற்போது சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் லஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த மற்றொரு பாஜக மூத்த தலைவர் சிவ பிரதாப் சுக்லா, இமாச்சல பிரதேச ஆளுநராகவும், ராஜஸ்தானை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, அசாம் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இல.கணேசன் மாற்றம்
ஆந்திர ஆளுநராக இருந்த விஸ்வபூஷன் ஹரிசந்தன், சத்தீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் ஆளுநராக இருந்த அனுசுயா உய்க்கே, மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன், நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லடாக் துணைநிலை ஆளுநராக இருந்த ராதாகிருஷ்ணா மாத்தூரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். அருணாசல பிரதேச ஆளுநராக இருந்த பிரிகேடியர் டாக்டர் பி.டி.மிஸ்ரா, லடாக் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கைவல்யத்ரிவிக்ரம் பர்நாயக், அருணாசலபிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பிஹார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிஹார் ஆளுநராக இருந்த பாகு சவுகான், மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஆளுநர்களின் நியமனம், அவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து அமலுக்கு வருகிறது.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியஅப்துல் நசீருக்கு ஆளுநர் பதவி
ஆந்திர பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.அப்துல் நசீர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். நீதிபதி பணியில் இருந்து கடந்த ஜன.4-ம் தேதி ஓய்வு பெற்றார். பல முக்கிய வழக்குகளில் இவர் தீர்ப்பு வழங்கியுள்ளார். அயோத்தி – பாபர் மசூதி, முத்தலாக் தடை, பண மதிப்பிழப்பு, தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமை போன்ற முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் இவர் இடம்பெற்றிருந்தார். சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே முஸ்லிம் நீதிபதி இவர். ஆனால், மற்ற நீதிபதிகளுடன் இணைந்து ஒருமித்த தீர்ப்பை வழங்கினார். நீதித் துறையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மிக குறைவாக இருப்பதாக தனது பிரியாவிடை நிகழ்ச்சியில் இவர் குறிப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
47 mins ago
தமிழகம்
53 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
3 hours ago