ஐந்து பைசா விவகாரத்தில் 41 ஆண்டுகளாக போராடும் டெல்லி போக்குவரத்துக் கழகம்

By எம்.சண்முகம்

ஐந்து பைசா விவகாரத்தால் முன்னாள் ஊழியருக்கு எதிராக 41 ஆண்டுகளாக டெல்லி போக்குவ ரத்துக் கழகம் போராடி வருகிறது. இந்த சட்டப் போராட்டத்தின் இறுதி முடிவு அடுத்த மாதம் 12-ம் தேதி தெரியவரும்.

டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந் தவர் ரன்வீர் சிங். இவர் 1973-ம் ஆண்டு மாயாபுரி சென்று கொண் டிருந்த பஸ்ஸில் பணியில் இருந்த போது, போக்குவரத்து பறக்கும் படை அதிகாரிகள் ஏறினர்.

ஒரு பெண் பயணியிடம் 15 பைசா வசூலிப்பதற்குப் பதில், 10 பைசா டிக்கெட் கொடுத்து போக்குவரத்துக் கழகத்துக்கு ஐந்து பைசா இழப்பை ஏற்படுத்திய தாக அவர்கள் கண்டுபிடித்தனர்.

ரன்வீர் சிங் கவனக்குறைவாக நடந்து போக்குவரத்துக் கழகத் துக்கு ஐந்து பைசா இழப்பை ஏற்படுத்திவிட்டதாக அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர் இதுபோன்ற இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 76-ம் ஆண்டு ரன்வீர் சிங் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த முடிவை எதிர்த்து பணியாளர் நல நீதிமன்றத்தில் ரன்வீர் சிங் வழக்கு தொடர்ந்தார். என்னை பழிவாங்கியுள்ளனர் என்று அவர் வாதிட்டார்.

நடந்துள்ள தவறுக்கு அளிக்கப் பட்டுள்ள தண்டனை பொருத்தமற் றதாக உள்ளது என்று தெரிவித்த பணியாளர் நீதிமன்றம், அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளும்படி, 90-ம் ஆண்டு உத்தர விட்டது. அவருக்குச் சேர வேண்டிய ஊதியத்தை வழங்கும் படியும் உத்தரவிட்டது.

இதை ஏற்காத டெல்லி போக்கு வரத்துக் கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அரசுக்கு வர வேண்டிய வருவாய் விஷயத்தில் மோசடியில் ஈடுபட்ட ஊழியர் மீது கருணை காட்ட முடியாது. எனவே அவரை டிஸ்மிஸ் செய்தது செல்லும் என்று உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டது.

டெல்லி உயர் நீதிமன்றம் 18 ஆண்டுகள் விசாரணை நடத்திய பின்பு, 2008-ம் ஆண்டு பணியாளர் நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டது. அதற்குள் ரன்வீர் சிங் ஓய்வுபெற்று விட்டார். தனக்குச் சேர வேண்டிய ஓய்வுகால சலுகைகள், சம்பள நிலுவைத் தொகை அனைத்தையும் வழங்க வேண்டும் என்று கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு சம்மதிக்காத போக்கு வரத்துக் கழகம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஹுமா கோலி முன்பு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ‘போக்குவரத்துக் கழகத்தை ஏமாற்றிய ஒரு ஊழியரை எந்த தண்டனையும் இன்றி தப்பிச் செல்ல அனுமதிக்க முடியாது. அவருக்கு பின் தேதியிட்டு சம்பளம் வழங்க முடியாது. ஓய்வுகால சலுகைகளும் வழங்க முடியாது. ரன்வீர் சிங்கின் பணிக்கால ஆவணத்தில் அவர் பல முறை இதுபோன்று தவறு செய்துள்ளது பதிவாகி உள்ளது. பயணிகளை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய வைத்தது நிரூபிக் கப்பட்டுள்ளது. எனவே அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்தது செல்லும்’ என்று குறிப் பிட்டுள்ளது.

இம்மனு நீதிபதி ஹுமா கோலி முன்பு அடுத்தமாதம் 12-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஐந்து பைசா விவகாரத் தில் கடந்த 41 ஆண்டுகளாக நடந்து வரும் சட்டப் போராட்டத்தின் முடிவு அன்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி போக்குவரத்துக் கழகம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி நஷ்டத் தில் இயங்கி வருகிறது என்று கூறப்படும் நிலையில் இந்த வழக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

மேலும்