நிலவெடிப்பு, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஜோஷிமத் நகர மக்கள் மறுகுடியமர்த்தப்படுவர் - உத்தராகண்ட் அரசு உறுதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில மாதங்களாக நிலவெடிப்பு, நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக அந்த நகரில் உள்ள கோயில்கள், வீடுகள், கடைகள், ஓட்டல்களில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு கட்டிடங்கள் மண்ணில் புதைந்து வருகின்றன.

அந்த நகரின் சுமார் 800 கட்டிடங்கள் வாழத் தகுதியற்றவை என்றுகண்டறியப்பட்டுள்ளன.

இந்த சூழலில் முதல்கட்டமாக ஜோஷிமத் நகரில் செயல்படும் 2 ஓட்டல்களை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம், போலீஸ், தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே ஜோஷிமத் நகரை அழிவில் இருந்து மீட்க அந்த நகரின் அருகே உள்ள நீர் மின் நிலைய பணிகளை நிறுத்த வேண்டும். உத்தராகண்ட் சுற்றுலா தலங்களை இணைப்பதற்காக அமைக்கப்படும் சார்தார் நெடுஞ்சாலை பணிகளை நிறுத்த வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரோகித் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தராகண்ட் அரசு சார்பில்தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “ஜோஷிமத் நகரில் நிலவெடிப்பு, நிலச்சரிவு, வீடுகளில் விரிசல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். அவர்களை மறுகுடியமர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும். மக்களை மறுகுடியமர்வு செய்ய 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்