இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாஜக வலுவாக இருக்கும்; மோடியை நீக்கலாம்; பாஜகவை நீக்க முடியாது: பிரசாந்த் கிஷோர் கணிப்பு

By செய்திப்பிரிவு

இந்த நாட்டில் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாஜக வலுவான, சக்தியுள்ள கட்சியாக இருக்கும். மோடியை வேண்டுமானால் மக்கள் நீக்கலாம், பாஜகவை நீக்க முடியாது. பாஜகவுடன் இன்னும் பல ஆண்டுகளுக்கு நாம் போராட வேண்டியதிருக்கும் என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு உதவுவதற்காகப் பல்வேறு உத்திகளை பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார்.

இந்நிலையில் கோவாவுக்கு நேற்று பிரசாந்த் கிஷோர் சென்றிருந்தார்.அப்போது கோவா அருங்காட்சியகத்தில் கலந்துரையாடல் நடந்தது.

அதில் அவர் பேசியதாவது:

''இந்த தேசத்தில் பாஜக இன்னும் பல பத்தாண்டுகளுக்கு வலுவான, சக்திமிக்க கட்சியாக இருக்கும், அந்தக் கட்சியுடன் இன்னும் நாம் பல ஆண்டுகளுக்குப் போராட வேண்டியதிருக்கும். பாஜக அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், தேசிய அரசியலில் அந்தக் கட்சிதான் மையமாக இருக்கும்.

அதாவது காங்கிரஸ் கட்சி முதல் 40 ஆண்டுகளில் இருந்ததைப் போல் பாஜகவும் இருக்கும். பாஜக எங்கும் செல்லாது. இந்தியாவில் 30 சதவீத வாக்குகளைப் பெற்றுவிட்டாலே, அவசரப்பட்டு எங்கும் செல்லமாட்டீர்கள். எனவே மக்கள் கோபமடைந்து மோடியைத் தூக்கி எறிவார்கள் என்ற நினைப்பின் வலையில் ஒருபோதும் சிக்காதீர்கள்.

மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பாஜக எங்கும் போகாது. அடுத்த பல பத்தாண்டுகளுக்கு பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டியதிருக்கும். மக்கள் மோடியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். அங்குதான் அவருக்குப் பிரச்சினையே இருக்கிறது. ஆனால், அது நடக்காது.

பிரதமர் மோடியின் வலிமை என்ன என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுல் காந்தியால் ஒருபோதும் போட்டியிட முடியாது. அவரைத் தோற்கடிக்கவும் முடியாது.

நான் பார்த்தவரை பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலானோர் பிரதமர் மோடியின் பலத்தையும், அவரை பிரபலமாக்குவதற்கும் என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் போதுமான நேரத்தைச் செலவிடுவதில்லை. இதைப் பற்றி நீங்கள் தெரிந்தால் மட்டுமே, நீங்கள் அவருக்குத் தகுந்த போட்டியை அளிக்க முடியும்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள எந்தத் தலைவர் அல்லது மாநிலத் தலைவரிடம் சென்று மோடியின் எதிர்காலம், பாஜகவின் எதிர்காலத்தைப் பற்றிக் கேளுங்கள். அவர்கள் என்ன சொல்வார்கள் என்றால், “எல்லாம் காலம் பார்த்துக் கொள்ளும். மக்கள் பாஜக ஆட்சி மீது வெறுப்படைந்து, அரசுக்கு எதிராக அதிருப்தி உருவாகும். அப்போது மக்கள் அவர்களைத் தூக்கி எறிவார்கள்” என்று கூறுவார்கள். ஆனால், எனக்கு இதில் சந்தேகம் இருக்கிறது. மக்கள் பாஜகவையும், மோடியையும் தூக்கி எறியமாட்டார்கள்.

உதாரணமாக மோடி அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. மக்கள் மத்தியில் மோடிக்கு எதிராக ஏதேனும் எதிர்ப்பு எழுந்துள்ளதா? இல்லைதானே.

தேர்தலைப் பொறுத்தவரை நாட்டில் உள்ள வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் போதும். ஆதரவளித்தால் போதுமானது. மற்ற இரு பங்கு மக்கள் 10 முதல் 15 கட்சிகளுக்குத்தான் பிரித்து வாக்களித்திருப்பார்கள். ஆதலால், மோடிக்கு எதிராகவோ, பாஜகவுக்கு எதிராகவோ எந்த ஸ்திரமான கூட்டணியும் அணியும் உருவாகாது. 10 முதல் 15 கட்சிகளாகப் பிரிந்து வாக்கு பிரிவதற்குக் காரணமே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு சரியும்போது, 65 சதவீத சிறிய கட்சிகள் துண்டு துண்டாகச் சிதறி சிறிய கட்சிகளாகவும், தனிநபர்களைச் சார்ந்த கட்சிகளாகவும் மாறின''.

இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்