மின்சார பற்றாக்குறையும் இல்லை; மின் தடையும் இல்லை: கடிதம் எழுதிய கேஜ்ரிவாலுக்கு மத்திய அரசு விளக்கம்

மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தேசிய தலைநகர் இருளில் மூழ்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அண்மையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் மின்சார பற்றாக்குறை காரணமாக மின் தடை எதுவும் ஏற்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாட்டில் உள்ள 135 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் நாட்டின் மின் தேவையில் சுமார் 70% வரை மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. கரோனா ஊரடங்குக்கு பிறகு நாட்டில் தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் மின் தேவை ஜெட் வேகத்தில் உயர்ந்தததால் இருப்பில் இருந்த நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு அதிகஅளவு சென்று விட்டது.

இது தவிர சீனாவிலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெளிநாட்டு நிலக்கரி நிறுவனங்களுக்கு கிராக்கி அதிகமானதால் விலையை தாறுமாறாக உயர்த்தின. இதனால் வெளிநாட்டில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாமலும், உள்நாட்டிலும் நிலக்கரி இல்லாமலும் இந்தியா சிக்கி தவிக்கிறது.

கடந்த சில வாரங்களாக நிலக்கரிக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தி குறித்து நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட 6 மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன. மின் நெருக்கடி குறித்து பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அண்மையில் எழுதிய கடிதத்தில், மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தேசிய தலைநகர் இருளில் மூழ்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் மின்உற்பத்தி நிலையங்களின் தேவைகளை சந்திக்கும் அளவுக்கு போதிய அளவு நிலக்கரி உள்ளதாகவும், இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும் நிலக்கரி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மின்துறை வெளியிட்டுள்ள தகவலில் ‘‘டெல்லியின் அதிகபட்ச மின்சார தேவை 2021 அக்டோபர் 10 அன்று 4536 மெகாவாட் (உச்சம்) மற்றும் 96.2 எம் யு (எரிசக்தி) ஆகும்.

டெல்லி மின்சார விநியோக அமைப்புகளிடம் இருந்து பெற்ற தகவல்களின் படி, போதுமான மின்சார விநியோகம் அவர்களுக்கு வழங்கப்பட்டதால் மின்சார பற்றாக்குறை காரணமாக மின் தடை எதுவும் ஏற்படவில்லை’’ எனத் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE