இந்தியா

போதைப் பொருள் வழக்கு: ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

செய்திப்பிரிவு

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் ஒன்று கடந்த 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா புறப்பட்டது. இதில் என்சிபி அதிகாரிகளும் சாதாரண உடையில் பயணம் செய்தனர். கப்பலில் நடந்த கேளிக்கைவிருந்தின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (23) உள்ளிட்ட 8 பேரை பிடித்து விசாரித்தனர்.

இரண்டாம் கட்டமாக இந்த வழக்கில் மேலும் சிலரையும் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோரர் இன்று (அக்டோபர் 7) வரை என்சிபி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்நிலையில் இன்றுடன் விசாரணை முடிவடைந்ததால், ஆர்யன் கான் உள்ளிட்டோர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் அடுத்த 14 நாட்களுக்கு (அதாவது அக்டோபர் 21 வரை) நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆர்யன் கான் உள்ளிட்டோரை வரும் 11 ஆம் தேதி தங்களின் காவலிலேயே வைத்து விசாரிக்க என்சிபி கோரிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையில் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீது நாளை (அக்.8) விசாரணை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT