காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “பி.எம். கேர்ஸ் நிதியத்திலிருந்து வாங்கப்பட்ட வென்டிலேட்டர்களுக்கும் பிரதமர் மோடிக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப் போகின்றன. மிகவும் தவறான முடிகளை எடுப்பது, அதற்கான வேலை என்னவோ அதைச் செய்யாமல் மற்ற அனைத்தையும் செய்வது, அவற்றுக்கு தேவை இருக்கும் போது உதவாமல் இருப்பது ஆகிய 3 ஒற்றுமைகள் பி.எம்.கேர்ஸ் வென்டிலேட்டர்களுக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
பி.எம். கேர்ஸ் நிதியத்திலிருந்து வென்டிலேட்டர்கள் வாங்கப்பட்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாபின் பரீத்கோட் நகரில் குரு கோவிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்தியில் ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார். ஆனால் இந்த செய்திகள் ஆதாரமற்றவை என மறுத்துள்ள மத்திய அரசு, குரு கோவிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய உள்கட்டமைப்புகள் இல்லை என குற்றம் சாட்டியுள்ளது. - பிடிஐ