வைரஸ் எதிர்ப்பு மருந்து ரெம்டெசிவைர்: அமெரிக்க நிறுவனத்துக்கு மார்க்கெட்டிங் அனுமதி

By பிடிஐ

கரோனா வைரஸ் நோய்க்கு உதவுவதாக அறியப்பட்ட ரெம்டெசிவைர் என்ற மருந்திற்கான இந்திய மார்க்கெட்டிங் அனுமதியை இந்திய மருந்துக் கழகம் அமெரிக்க நிறுவனமான ஜிலீட் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது, ஆங்காங்கே சமூகப்பரவல் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் ரெம்டெசிவைர் மருந்தை இந்தியாவில் மார்க்கெட்டிங் செய்ய அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஜிலீட் சயன்சஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தீவிர கரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்பு ரெம்டெசிவைர் மருந்தை பயன்படுத்த உலகம் முழுதும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“ஊசிமூலம் செலுத்தும் இந்த ரெம்டெசிவைர் மருந்தை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மருத்துவமனை பயன்பாட்டுக்காக பரிந்துரை செய்யும்போது அல்லது பெரிய மருத்துவ அமைப்பின் பயன்பாடுகளுக்கு மட்டுமே இது சில்லரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மே 29ம் தேதி ஜிலீட் சயன்சஸ் நிறுவனம் இந்த மருந்து மார்க்கெட்டிங்குக்காக விண்ணப்பத்திருந்தது.

இந்த மருந்தை மருத்துவமனையில் மருத்துவ நிபுணர் முன்னிலையில்தான் ஊசிமருந்தாகச் செலுத்த வேண்டும். ரெம்டெசிவைர் மருந்துக்கு ஜிலீட் சயன்சஸ் நிறுவனம் காப்புரிமை வைத்துள்ளது.

இந்திய நிறுவனங்களான சிப்லா மற்றும் ஹெடிரோ லேப்ஸ் ஆகியவை இதே மருந்தை உற்பத்தி செய்து விற்க மேற்கொண்ட விண்னப்பம் இன்னும் பரிசீலனையில்தான் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE