புதுடெல்லி
பல்வேறு ஏஜென்சிகளின் நெருக்கடியால் தொழிலதிபர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும் கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த்தா திங்கள்கிழமை மாலையில் இருந்து மாயமானார். அவரது உடல் இன்று ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
அவரது மரணத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது
‘‘கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா மரணமடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு ஏஜென்சிகளின் நெருக்கடியால் அவர் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்ததாக தெரிகிறது. தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக பல்வேறு வட்டார தகவல்களில் இருந்து கேள்வி படுகிறேன். சிலர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். இன்னும் சிலர் வெளியேறி வருகின்றனர்.
இதுபோல தான் எதிர்க்கட்சிகளும், குதிரைபேரம், நெருக்கடி, அரசியல் பழிவாங்குதலால் சிக்கலை சந்தித்து வருகின்றன’’ எனக் கூறியுள்ளார்.