தெற்கு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மேஜர், வீரர் உட்பட 2 ராணுவத்தினர் பலியாகினர். குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, ''சோபியன் மாவட்டத்தின் சைபோரா இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தரப்பில் தெரிவிக்கபப்ட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர்.
அப்போது தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கித் தாக்குதலில் மேஜர், வீரர் உட்பட 3 ராணுவத்தினர் காயமடைந்தனர். மூவரும் அருகிலுள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சைபோராவில் இன்னும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது'' என்றனர்.
குல்காமில் 2 தீவிரவாதிகள் கொலை
குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் மே 1 அன்று வங்கிப் பணம் எடுத்துச் செல்லப்பட்ட வேனை மறித்து தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தவர்.
என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து இரண்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன'' என்று தெரிவித்தார்.