மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு எதிராக நடந்த கலவரத்துக்கு திரிணாமுல் காங்கிரஸே காரணம் என அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக தலைவர் அமித் ஷா, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டியும், ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளை காட்டியும் கோஷமிட்டனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். உடனே பாஜக தொண்டர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீ வைத்து கொளுத்தப்பட்டன.
பல்லைக்கழக வளாகத்தில் உள்ள ஈஷ்வர சந்திர வித்யாசாகர் மார்பளவு சிலையையும் உடைக்கப்பட்டது. பின்னர் ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். போலீஸார் தடியடி நடத்தி கும்பை கலைத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். கல்வீச்சு தாக்குதல், போலீஸ் தடியடியில் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து மம்தாவும் அமித் ஷாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமித் ஷா சில புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
மேற்குவங்கத்தில் நேற்று நடந்த வன்முறைச் சம்பங்களுக்கு முழுக்க முழுக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம். எனது பிரச்சார பேரணியில் திட்டமிட்டு கலவரத்தை தூண்டியுள்ளனர். வாகனங்களை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். பாஜக தொண்டர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதற்கு அந்த கட்சியே பொறுப்பேற்க வேண்டும். என்னை வெளியில் இருந்து வந்தவர் என திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளும், மம்தா பானர்ஜியும் கூறி வருகின்றனர்.
மேற்குவங்கம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். எங்கள் கட்சிக்காக நான் பிரச்சாரம் செய்ய மேற்குவங்கம் சென்றேன். நான் வெளியில் இருந்து வந்தவன் என்று திரிணாமுல் காங்கிரஸ் பிரச்சாரம் செய்வது கண்டிக்கதக்கது. மம்தா பானர்ஜி டெல்லிக்கு வரும்போது, அவர் வெளியில் இருந்து வந்தவர் என யாரும் கூறுகிறார்களா.
ஈஷ்வர சந்திர வித்யாசகர் சிலையை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் உடைத்து விட்டு பழியை பாஜக மீது சுமத்தி அனுதாபம் தேட முயலுகின்றனர். மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு முன்பாக வன்முறை கும்பலை கைது செய்ய தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் இல்லையென்றால் நான் கூட காயமின்றி தப்பி இருக்க முடியாது.
இவ்வாறு அமித் ஷா கூறினார்.