தலைமை நீதிபதிக்கு 600+ வழக்கறிஞர்கள் கடிதம்: காங்கிரஸை ‘கைகாட்டும்’ பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “பிறரை அச்சுறுத்துவதும், காயப்படுத்துவதும் பழைய காங்கிரஸின் கலாச்சாரம். தன்னலத்தில் விருப்பமுள்ள குழு ஒன்று நீதித் துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதிமன்றத்தை அவமதிக்கவும் முயற்சிக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "பிறரை அச்சுறுத்துவதும், துன்புறுத்துவதும் பழைய காங்கிரஸின் கலாச்சாரம். 5 தசாப்தங்களுக்கு முன்பு அவர்கள் உறுதியான நீதித் துறைக்கு அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் சுயலாபத்துக்காக மற்றவர்களிடமிருந்து அர்ப்பணிப்பை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நாட்டின் எந்த ஒரு நலனிலிருந்தும் அவர்கள் விலகியே இருப்பார்கள். 140 கோடி இந்தியர்கள் அவர்களை நிராகரிப்பதில் ஆச்சரியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித் துறையைக் காக்க வலியுறுத்தி மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இணைந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்-டுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில், “நீதித் துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடவும் ஒரு சுயநலக் குழு முயன்று வருகிறது.

அரசியல் வழக்குகளில் குறிப்பாக, ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல் பிரமுகர்களின் வழக்குகளில் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி நடக்கிறது. இதுபோன்ற அழுத்தங்கள் நீதிமன்றத்தை பாதிக்கக் கூடியவை; ஜனநாயக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவை. இந்தக் குழு பல வழிகளில் செயல்படுகிறது. கடந்த காலம்தான் சிறப்பானது என்றும், கடந்த காலம் பொற்காலம் என்றும் தவறான கருத்தை உருவாக்க இக்குழு முயல்கிறது.

நீதிமன்றங்களின் முடிவுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பகலில் அரசியல்வாதிகளை பாதுகாப்பவர்களாகவும், இரவில் சமூக ஊடகங்கள் மூலம் நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுப்பவர்களாகவும் சில வழக்கறிஞர்கள் இயங்குகிறார்கள்.

கடந்த காலங்களில் நீதிமன்றங்களில் செல்வாக்கு செலுத்துவது எளிதாக இருந்தது என்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கோமாளித்தனமான நம்பிக்கைகள் சூழலை கெடுப்பதாக உள்ளன. நீதித் துறையின் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் நீதிமன்றங்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தின் மீதான தாக்குதல் என்றே கருத முடியும். சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடுகளுடன் ஒப்பிடும் நிலைக்கு அவர்கள் நமது நீதிமன்றங்களை தள்ளுகிறார்கள்.

எனவே, அரசியல் மற்றும் தொழில்முறை அழுத்தங்களில் இருந்து நீதித் துறையை காப்பது மிகவும் முக்கியம். அமைதியாக இருப்பது அல்லது எதுவும் செய்யாமல் இருப்பது, தீங்கு செய்ய நினைப்பவர்களுக்கு இயல்பாக அதிக சக்தியை அளிக்கும். இதுபோன்ற முயற்சிகள் சில வருடங்களாக அடிக்கடி நடந்து வருவதால், கண்ணியமான மவுனம் காப்பதற்கான நேரம் இதுவல்ல” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

53 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

4 hours ago

கல்வி

5 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்