ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்: சாலைகள் மூடலால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் காரணமாக பல சாலைகளை போலீஸார் மூடியதால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, பாஜக தலைமை அலுவலகம் மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செல்லும் ஐடிஒ சவுக், ராஜ் கட் மற்றும் விகாஸ் மார்க் சாலைகளை இன்று காலையில் போலீஸார் மூடினர். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஐடிஒ சந்திப்பு, டிடியு மார்க் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக தலைமை அலுவலகம் அருகே ஏஏபி கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர்.

அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதால் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டனர். மேலும், போலீஸார் டிடியு மார்க் செல்லும் சாலைகளில் தடுப்புகளை வைத்து தடுத்திருந்தனர். மத்திய டெல்லியின் பல சாலைகளில் வாகனப் போக்குவரத்தையும் தடை செய்திருந்தனர்.

இதுகுறித்து டெல்லி போக்குவரத்து போலீஸார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “டெல்லி டிடியு மார்க் பகுதியில் அரசியல் கட்சி ஒன்று அறிவித்துள்ள போராட்டத்தின் காரணமாக, ஐபி மார்க், விகாஸ் மார்க், மின்டோ சாலை, பகதூர் ஷா ஜாபர் மார்க் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அகதிகமாக இருக்கும். டிடியு மார்க் சாலை மூடப்படுகிறது. இந்தச் சாலைகளை பயன்படுத்துதை வாகன ஓட்டிகள் தவிர்த்து அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கீதா காலணி மற்றும் ராஜ்கட் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செல்லும் சாலைகளையும் போலீஸார் மூடியிருந்தனர். இதனால் கிருஷ்ண மேனன் மார்க், மோதிலால் நேரு மார்க், ஜன்பத் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சாலைகளைத் தவிர்க்குமாறு போலீஸார் தெரிவித்திருந்தனர்.

வியாழக்கிழமை இரவு அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறையினர் கைது செய்ததைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் பாஜக அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது பின்னணி: டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறைவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முதல்வர் கேஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை.

இந்த சம்மன்களை எதிர்த்து கேஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சுரேஷ் குமார் கெய்த், மனோஜ் ஜெயின் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது கேஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அவர் கூறும்போது, “மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர் கேஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத் துறை முயற்சி செய்கிறது. இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்றார்.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, “கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார். பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன” என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் தரப்பில் கோரப்படுகிறது. இப்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22-ம் தேதி நடைபெறும்” என்று தெரிவித்தனர்.

கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள கேஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 9.20 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

இந்தியா

8 mins ago

விளையாட்டு

48 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்