அடுத்த தலைமுறை தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நிமிடத்துக்கு 7,200 ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் வகையில் இணையதளத்தின் வேகம் அதிகரிக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் டி.வி. சதானந்த கவுடா பட்ஜெட் தாக்கலின் போது கூறியதாவது: அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரயில் டிக்கட் முன்பதிவு புனரமைக்கப்படும். தற்போது நிமிடத்துக்கு 2,000 டிக்கெட்கள் என்ற வேகத்தில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது.
இந்த வேகம் நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்கள் என்ற அளவுக்கு அதிகரிக்கப்படும்.
ஒரே சமயத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 1.20 லட்சம் பேர் முன்பதிவு செய்யும்வகையில் இணையதளத்தின் வேகம் மேம் படுத்தப்படும்.
இணையதளத்தின் மூலம் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளும், முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளும் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வாகன நிறுத்தம் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை ஒரே டிக்கெட்டில் இணைத்து வழங்குவதன் மூலம் பயணிகளின் நேரம் விரயமாவது தடுக்கப்படும். தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பரிசோதனை முயற்சியாக நிறுவப்படும்.
ரயில்வே துறையில் தகவல் தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துறையை அடுத்த 5 ஆண்டுகளில் காகிதப்பயன்பாடற்ற அலுவலகங்களாக மாற்று வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
வை-ஃபை
ஏ-1, ஏ வகை ரயில் நிலையங்களிலும், சில தேர்ந்தெடுக் கப்பட்ட ரயில்களிலும் வை-ஃபை சேவை அறிமுகப்படுத்தப்படும்.
இது தவிர, ரயில் தற்போது வந்து கொண்டிருக்கும் இடம், பயணிக்கு அலைபேசியில் ரயில் பற்றிய தகவலை எச்சரிக்கை செய்வதல், பயணி இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதை அலைபேசிக்குத் தகவல் மூலம் அறிவித்தல், கணினி மயமாக்கப்பட்ட சுமை மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிறைவேற்றப்படும்.
ரயில் நிலையங்களல் டிஜிட்டல் முன்பதிவு அட்டவணை, டிக்கெட் வழங்கும் மையங்களில் டிஜிட்டல் கட்டண விவர அட்டவணை உள்ளிட்டவை அரசு-தனியார் பங்களிப்பு முறையில் அறிமுகப் படுத்தப்படும்.