திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள வடுவூர் ஏரியில் ஆண்டு முழுவதும் போதுமான நீர் இருப்பை தக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வடுவூர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள ஏரி 320 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்குஜப்பான், கொரியா, லங்கா, நார்வே, வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து திரும்புகின்றன. இவற்றுடன் உள்ளூர் பறவை இனங்களான நாமக்கோழி, நீர்காகம் போன்ற பறவைகளும் தங்கியுள்ளன. நிகழாண்டில் 100-க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பறவைகள் வரை இந்த சரணாலயத்தில் வந்து தங்கி, திரும்பி சென்றுள்ளன.
இந்தப் பறவைகளில் பெரும்பாலானவை ஏரியில் நீர்இருப்பு குறைய தொடங்கிய உடனேயே கிளம்பி விடுகின்றன. தற்போது மார்ச் மாதம் தொடங்குவதற்கு முன்பே வடுவூர் ஏரியில்நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஏரியின் கிழக்கு கரைகளில் தரைகள் தெரியும் அளவுக்கு நீர் இருப்பு குறைந்து விட்டது. ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் ஏரி முற்றிலும் வறண்டுவிடுவதால், வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.
நிகழாண்டில் இந்த நிலை ஏற்படாமல் தடுக்க தற்போதே விழித்துக்கொள்ள வேண்டும். தற்போது உள்ள தண்ணீரையாவது தக்கவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஆண்டுகளில் ஆண்டு முழுவதும் வடுவூர் ஏரியில் நீர் இருப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தங்களது எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் வடுவூர் கார்த்திகேயன் கூறியது: வடுவூரின் அடையாளமாக பறவைகள் சரணாலயம் சொல்லப்பட்டாலும், பறவைகளுக்கு உதவும் வகையில், ஆண்டு முழுவதும் ஏரியில் நீீர் இருப்பை உறுதி செய்ய போதிய நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை. ஏரிக்கு தண்ணீர் வரத்து உள்ள கண்ணனாற்று தலைப்பில் ஷட்டர் ஒன்று அமைத்து கதவணை கட்டி இருந்தாலும் கூட, வடுவூர் ஏரி தொடர்ச்சியாக, முழுமையாக தூர் வாரப்படாத காரணத்தால் ஆங்காங்கே ஏரி தூர்ந்து போய் மேடிட்டுள்ளது. இதை சீரமைக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, வடுவூர் ஏரி முழுமைக்கும் பறவைகளுக்கு ஏற்றார் போல, தூர் வாரி நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
இதுகுறித்து வனத்துறை அலுவலர்களிடம் விசாரித்தபோது, ‘‘இந்த ஏரி 1999-ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு இருந்தே இந்த ஏரி தண்ணீரை விவசாயிகள் விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போதும் கோடை காலங்களிலும் ஏரி தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த விவசாயிகள் முற்படுவதால், கோடை காலத்தில் ஏரியில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விடுகிறது.
இதனால், பறவைகளின் பயன்பாட்டுக்காக ஆங்காங்கே சிறிய பள்ளங்கள் தோண்டப்பட்டு நீர் இருப்பு உறுதி செய்யப்பட்டது. இருந்தாலும் ஏரி முழுவதும் 25 சதவீத தண்ணீர் இருக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த நிலையை எட்ட வேண்டுமெனில், விவசாயிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். இதை எதிர்கொள்ள வனத்துறையுடன் நீர்வள ஆதாரத் துறையினர் ஆலோசித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
ஜோதிடம்
3 mins ago
தமிழகம்
32 mins ago
சுற்றுச்சூழல்
49 mins ago
வணிகம்
39 mins ago
இந்தியா
49 mins ago
க்ரைம்
22 mins ago
சுற்றுலா
5 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago