விழுப்புரம்
கள்ளக்குறிச்சி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ரங்கசாமி (59) மற்றும் அவரது சம்பந்தியான முருகன் (50) ஆகிய இருவரும் இன்று (செப்.19) அதிகாலை கோபிசெட்டிப்பாளையத்திலிருந்து காரில் சென்னை நோக்கிச் சென்றனர்.
அப்போது கார் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. எதிர்ப்புறத்தில் சென்னையிலிருந்து சேலம் நோக்கி தவிடு மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, எதிர்பாராவிதமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த ரங்கசாமி மற்றும் முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கார் ஓட்டுநர் சாமிநாதன் மற்றும் லாரி ஓட்டுநர் சிவராமன் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸார் இறந்த உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.