டெல்லி முதல்வர் அரவிந்த்கேஜ்ரிவால் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ
கரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் 22-ம் தேதி(நாளை) காலை 6 மணி முதல் 31-ம் தேதிவரை நள்ளிரவு வரை டெல்லி முழுவதும் கூடுதல்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது(லாக்டவுன்) என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார்
துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுடன் இணைந்து இந்த தகவலை முதல்வர் கேஜ்ரிவால் தெரிவி்த்தார்.
உலகை உலுக்கி வரும் கரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கடந்த வாரத்தில் இருந்து மெல்ல,மெல்ல ஊடுருவி தன் கோர முகத்தை காட்டி வருகிறது.
இந்தியாவில் இதுவரை கரோனாவுக்கு 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர். ெடல்லியில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்துவரும் நாட்களில் மக்களின் சமூகத் தொடர்பைத் துண்டிக்கும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாளை முதல் 31-ம் தேதிவரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் போராட்டம், அரசியல், மதம், கலாச்சார ரீதியாக கூட்டம் நடத்துதல், மக்கள் 4 பேருக்கு மேல் கூடத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா பரவுவதை தீவிரமாகத் தடுக்கும் வகையிலும், மக்களின் சமூகத் தொடர்பைத் துண்டிக்கும் வகையில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் இருவரும் சேர்ந்து டெல்லியில் அடுத்த 8 நாட்களுக்கு லாக்டவுன் கொண்டுவரும் முடிவை அறிவித்தனர்.
அது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க டெல்லி அரசு பல்வேறு தொடர் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லியில் 27பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை காலை 6 மணி முதல் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை டெல்லி முழுவதும் லாக் டவுன் அறிவிக்க உள்ளோம்.
- டெல்லியில் அனைத்து பொதுப்போக்குவரத்தும் முடக்கப்படும். அரசுப்பேருந்து, தனியார் பேருந்து, ஆட்டோ, கால்டாக்ஸி சேவைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படும். அத்தியாவசிய பணிக்குச் செல்லும் ஊழியர்களுக்காக 25 சதவீத டெல்லி மாநகராட்சி பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்
- அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், பணிமனை, வாரச்சந்தை அனைத்தின் செயல்பாட்டுக்கும் தடை விதிக்கப்படுகிறது
- ஹரியானா, உத்தரப்பிரதேச மாவட்டங்களோடு டெல்லியை இணைக்கும் சாலைகள் எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்படும். இங்கிருந்து யாரும் வெளியேற முடியாது, அங்கிருந்து யாரும் நுழைய முடியாது.
- மாநிலங்களுக்கு இடையிலான பஸ்போக்குவரத்து நிறுத்தப்படும்
- அனைத்து விதமான கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படும்
- மக்கள் அடிப்படை சேவைகளைப் பெறுவதற்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். மற்றவகையில் வெளியேற தடை விதிக்கப்படுகிறது.
யாருக்கெல்லம் விதிவிலக்கு
- சட்டம் ஒழுங்கு பணி,
- நீதிமன்ற பணியில் இருப்போர்
- போலீஸார், சுகாதாரத்துறையினர்
- தீதடுப்புதுறை
- சிறைத்துறை
- நியாயவிலைக்கடை
- மின்வாரியப் பணி
- குடிநீர் வாரியம்
- நகராட்சி பணியாளர்கள்
- சட்டப்பேரவையில் பணியாற்றுவோர்
- மாநில அரசின் கணக்கு மற்றும் ஊதியம் வழங்கும் பிரிவு ஊழியர்கள்
- ஊடகப்பிரிவினர், தொலைத்தொடர்பு
- இன்டர்நெட்,தபால்சேவை
- இ-வர்த்தகப்பிரிவு குறிப்பாக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உணவுகள் வழங்குவோர்
- மளிகைக் கடைகள், பால் விற்பனை நிலையம்
- பெட்ரோல் பம்ப், எல்பிஜி நிலையம்
- மேற்கண்ட பட்டியலில் இருப்போர் மட்டும் அடுத்துவரும் நாட்களில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். அரசின் விதிமுறைகளை கவனத்துடன் பின்பற்றி நடக்க வேண்டும்.
- மக்கள் தங்களின் அத்தியாவசிய சேவையைப் பெற வெளியே வந்தால், தங்களின் சுயவிருப்பம் கடிதத்தை அளித்த வேண்டும்.
- 5 நபர்களுக்கு மேல் நிற்பது தடை செய்யப்படுகிறது, அவ்வாறு நின்றால் தண்டனைக்குரிய குற்றமாகும்.
- தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவேண்டும். இந்த காலத்தில் பணிக்கு வந்ததாகவே கருதப்பட்டு ஊதியம் வழங்கப்படும்.
- இந்த விதிகளை மீறும் மக்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்