கரோனா: நாடாளுமன்றம், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்தி வைக்க வேண்டும்; ராமதாஸ்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 21) வெளியிட்ட அறிக்கையில், "உலகை உலுக்கும் கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் நிலையில், நாடாளுமன்றம் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத் தொடர்கள் ஒத்தி வைக்கப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற, சட்டப்பேரவை நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம் என்றாலும், இதனால் மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் நோய்த்தொற்று ஆபத்து அதிகரிக்கும் என்பது கவலையளிக்கிறது.

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் மார்ச் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாலும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மனிதர்களிடையே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதாலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை கூட்டத்தொடர்கள் ஒத்தி வைக்கப்பட வேண்டும்.

ஆனால், ஏப்ரல் 3-ம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டத் தொடர் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும், கூட்டத்தொடரை ஒத்தி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அதேபோல், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துவிட்ட தமிழக முதல்வர், அடுத்த மாதம் 9 ஆம் தேதி வரை கூட்டம் நீடிக்கும் என்றும் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் முடிவு அவர்களின் பொறுப்புணர்வைக் காட்டலாம்.

ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்கொண்டு வரும் கரோனா நோய் சவாலை முறியடிக்க எந்த வகையிலும் உதவாது. மாறாக, இதைப் பின்பற்றி பொதுமக்களும் வெளியில் அதிகமாக நடமாடத் தொடங்கினால் அது நோய்த் தடுப்புப் பணிகளை பாதிக்கும்.

நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வரும் தலைநகர் டெல்லி மிகக்குறைந்த நிலப்பரப்பைக் கொண்டது ஆகும். அதுமட்டுமின்றி, அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் பகுதியாகும். அதன் காரணமாக, நேற்றிரவு வரை 17 பேர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்றக் கூட்டம் என்ற பெயரில் இரு அவைகளையும் சேர்த்து 788 உறுப்பினர்கள், அவர்களின் உதவியாளர்கள், ஓட்டுநர்கள், பணியாளர்கள், பார்வையாளர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தேவையின்றி டெல்லியில் குவியச் செய்வது கரோனா நோய்த் தடுப்புக்கான அடிப்படைகளையே தகர்க்கும் செயலாகும்.

அதேபோல், தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிலையில் 233 உறுப்பினர்கள் உள்ளனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக தலைமைச் செயலகத்திலும், சட்டப்பேரவைச் செயலக வளாகத்திலும் பார்வையாளர்கள் வருகை தடை செய்யப்பட்டிருக்கிறது. அங்குள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன.

ஆனால், ஒவ்வொரு உறுப்பினருடனும் குறைந்தது இருவராவது தலைமைச் செயலக வளாகத்திற்கு வருகின்றனர். அமைச்சர்களின் உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் என குறைந்தது 2 ஆயிரம் பேராவது அவை நடைபெறும் நேரத்தில் அந்த வளாகத்தில் இருப்பார்கள்.

அதுமட்டுமின்றி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வளாகத்தில் அவர்களின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்திருப்பார்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவதும், ஒழுங்குபடுத்துவதும் கடினம் என்பதால் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும்.

கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையே சமூக இடைவெளிதான். இதற்காக மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்; அவ்வாறு கூடினாலும் ஒவ்வொருவருக்கும் இடையே குறைந்தது 3 அடி இடைவெளி அவசியம் தேவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், நாடாளுமன்ற அவைகளாக இருந்தாலும், தமிழக சட்டப்பேரவையாக இருந்தாலும் மூன்று அங்குல இடைவெளி கூட இல்லாமல் மிகவும் நெருக்கமாகத்தான் உறுப்பினர்கள் அமர்ந்திருக்க வேண்டும். மையப்படுத்தப்பட்ட குளிரூட்டி வசதி கொண்ட அவைகளில் வைரஸ் எளிதில் பரவக்கூடும் என்பதால், மக்கள் பிரதிநிதிகளின் நலன் கருதி அவை நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையின் ஒப்புதலை உரிய காலத்தில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமரும், முதல்வரும் நினைப்பதில் தவறில்லை. இன்னும் கேட்டால் அவர்களின் இந்த உணர்வு பாராட்டப்பட வேண்டியதாகும்.

ஆனால், அவர்களின் பொறுப்புணர்வே நாடாளுமன்றம், மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நோய் தொற்றுவதற்கும், அவர்களை சார்ந்தவர்கள் கூடுவதால் நோய் பரவுவதற்கும் வழிவகுத்துவிடக் கூடாது. எனவே, நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கும்படி பிரதமரும், தமிழக முதல்வரும், அவைத் தலைவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்