திரை விமர்சனம்: மாநாடு

By செய்திப்பிரிவு

ஒரு கதையில் வரும் முதன்மை கதாபாத்திரமோ, கதாபாத்திரங்களோ, ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை, திரும்பத் திரும்ப எதிர்கொள்வதைக் குறிப்பது ‘டைம் லூப்’ (Time loop) எனும் ‘கால வளையம்’. இவ்வாறு நிகழும்போது, கதாபாத்திரம் தன் முயற்சியால் அந்த நாளின் எந்தவொரு செயலையும் மாற்றி, அதில் வெற்றிபெற முடியும். அதாவது, காலத்துடன் கதாபாத்திரம் ஆடும் ஆட்டம். இதை அடிப்படையாக கொண்ட திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’.

நண்பனின் திருமணத்துக்காக துபாயில் இருந்து டெல்லி வழியாக கோவை வருகிறார் சிம்பு. விமானம் உஜ்ஜைன் நகரின் மீது பறக்கும்போது, ‘டைம் லூப்’ உணர்வுக்குள் ஆட்படுகிறார். அன்று, கோவையில் ஆளுங்கட்சி அரசியல் மாநாடு நடக்கிறது. அதில் கலந்துகொண்ட மாநில முதல்வர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த சதியில் ஈடுபடுவது யார், அவர்களது நோக்கம் என்ன என்பதை அறிந்து, அதை நாயகன் எப்படி முறியடிக்கிறார் என்பது கதை.

நாயகன் வழியாக வில்லனுக்கும் டைம் லூப் விளைவு தொற்றிக்கொண்டு, இருவருக்குமான ஆடுபுலி ஆட்டமாக சுவாரஸ்யமான ட்ரீமென்ட்டை திரைக்கதைக்கு தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.

அதில், வாரிசு அரசியல் திணிப்பு, சிறுபான்மை மதத்தவரை தீவிரவாதி என முத்திரை குத்துவது, விமான நிலையக் கூரை இடிவது, கட்சி பேனர் விழுந்து சாலையில் செல்வோர் உயிரிழப்பது என பல அரசியல் நிகழ்வுகளை திரைக்கதையில் கச்சிதமாகப் பொருத்தியிருக்கும் நேர்த்தி படம் முழுவதும் ஈர்க்கிறது.

வந்த காட்சிகளே திரும்பத் திரும்ப வந்து அலுப்பை ஏற்படுத்தக்கூடிய கதைக் களத்தை, கே.எல்.பிரவீன் தனது ‘கூர்மை’யான எடிட்டிங் மூலம் தூக்கி நிறுத்துகிறார். ‘ரிப்பீட்’ காட்சிகளின் கோணங்களை அதிரடியாக மாற்றிக் காட்டி, தனது இருப்பை பதிவு செய்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன். கதை நகர்வுக்கேற்ற பின்னணி இசையை வழங்குகிறார் யுவன். ‘மெஹர்சைலா’ திருமண வீட்டின் பாடல் ஈர்க்கிறது.

வில்லன் கூட்டத்தின் சதியை முறியடிக்கவும், நண்பர்களைக் காப்பாற்றவும் செத்து செத்து மீண்டும் வந்து கெத்து காட்டும் துடிப்பான நடிப்பைத் தந்து, அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் அடக்கி வாசிக்கிறார் சிம்பு.

தங்களது திட்டத்தை தெரிந்துகொள்ளும் சிம்புவை தடுக்க, அவரை சாகவிடாமல் பார்த்துக்கொள்ளும் காவல் அதிகாரி தனுஷ்கோடியாக வரும் எஸ்.ஜே.சூர்யா, மிகை நடிப்பால் மிரட்டுகிறார். இவருக்கு அடுத்த இடத்தில், மூத்த அரசியல்வாதியாக வரும் ஒய்.ஜி.மகேந்திரன் எதிர்மறை நடிப்பில் வெளுத்து வாங்குகிறார். கல்யாணி ப்ரியதர்ஷன். கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோரை, திரைக்கதைக்கு தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்தியுள்ளனர்.

படத்தின் தொடக்கத்தில் சிம்புவுக்கான சில ‘பில்ட் அப்’ காட்சிகள், சில வசனங்களின் தேவையற்ற பிரயோகம், நாயகனின் ‘டைம் லூப்’ விளைவு வில்லனுக்கு தொற்றிக்கொள்வதற்கான லாஜிக்கை வலுவாக அமைக்காதது போன்றவை இயக்குநரை ‘சமாளிப்புத் திலகம்’ ஆக காட்டுகின்றன. இருப்பினும் அரசியல் பின்னணியை ‘டைம் லூப்’ கதைக்குள் பொருத்தி, நாயகனைவிடவும் வலுவாக வில்லன் கதாபாத்திரத்தை படைத்ததால், கடைசி காட்சிவரை களைகட்டுகிறது இந்த ‘மாநாடு’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE