கண்ணீருடன் விடை தருகிறோம்; எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்: சிவகார்த்திகேயன் உருக்கம்

By செய்திப்பிரிவு

கண்ணீருடன் விடை தருகிறோம், எங்கள் குரல் அரசனே உறங்குங்கள் என்று எஸ்பிபி மறைவு குறித்து சிவகார்த்திகேயன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்பிபி மறைவு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது..உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடிக் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்...இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம். எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்"

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE