’’பாலசந்தர் சார் படங்கள் மொத்தத்தையும் லைப்ரரியாக்கவேண்டும் ’’ - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா யோசனை

By வி. ராம்ஜி

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஜூலை 9ம் தேதி 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.

உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

உண்மையான கலைஞன் பாலசந்தர் சார். அவரிடம் ‘ஏக் துஜே கேலியே’ தொடங்கி ‘புன்னகை மன்னன்’ வரை உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். உதவி இயக்குநராக அவரிடம் நான் சேர்ந்தது, எதிர்பாராமல் நடந்த ஒன்று. அவரிடம் ஏழு வருடங்கள், 14 படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினேன்.
‘சிந்து பைரவி’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அரங்கேற்றம்’, ‘தண்ணீர் தண்ணீர்’ படங்களெல்லாம் கிளாஸிக்கலான படங்கள். டிரெண்ட் செட்டிங்கான படங்கள். அவருடைய பல படங்கள், எடுத்துக் கொண்ட கதை, உறவுகள், நம்பவே முடியாத கதையையும் நம்பும்படியாகச் சொல்லுவது எல்லாமே புதுமையாக இருக்கும். இப்படி யோசிக்கவும் யோசித்து எடுக்கவும் பலரும் பயப்படுவார்கள்.

பாலசந்தர் சாரின் உதவி இயக்குநர்கள், அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் நடிகைகள் எல்லோருமே அவரின் வாழ்வின் ஒருபகுதியாகவே இருக்கிறார்கள்.
என்னுடைய ஆசை, விருப்பம்... பாலசந்தர் சார் படங்கள் மொத்தத்தையும் லைப்ரரியில் வைக்கவேண்டும். அவற்றைப் பாதுகாக்கவேண்டும். அவருடைய படங்கள் அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டும். கே.பாலசந்தர் எனும் உன்னதமான இயக்குநர் இருந்தார் என்பதை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த வேண்டும். இப்போது உள்ள எந்த இயக்குநர்களும் அவரையோ அவரின் படங்களையோ ‘பீட்’ செய்யமுடியவில்லை என்பதைக் கொண்டு செல்லவேண்டும். பாலசந்தர் சார் படங்களைப் பார்த்து அடுத்த தலைமுறையினர் கற்றுக்கொள்ளவேண்டும்.

பாலசந்தர் சாருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தேசிய விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது. எதற்காக வழங்கப்பட்டது? அவருடைய படங்கள் மிகச்சிறந்த படங்கள், அவரின் வசனங்கள் மிகச்சிறந்த வசனங்கள், அவர் மிகச்சிறந்த இயக்குநர்.
நான் பாலசந்தர் சார் யுனிவர்சிட்டியில் படித்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இன்றைக்கு நான் சந்தோஷமாக இருக்கிறேன். அதற்காக தினமும் நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

இவ்வாறு சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE