கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும் 'பொன்மகள் வந்தாள்': இயக்குநர் பாரதிராஜா

கண்டிப்பாக 'பொன்மகள் வந்தாள்' படம் சமூகத்தை கலங்கடிக்கும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது.

நாளை (மே 29) அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. சரியாக நள்ளிரவு 12 மணியளவில் அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்த் திரையுலகினர் முக்கியமான நபர்களுக்கு மட்டும் அமேசான் ப்ரைம் லிங்க்கை அனுப்பிவைத்து பார்வையிடச் சொல்லியுள்ளது 'பொன்மகள் வந்தாள்' படக்குழு.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாரதிராஜா தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

"அரியாத வயதில் காமத்தை சுமந்து, வெளியில் சொல்லா முடியாமல் வாழும், பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல, பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம். இயக்குநரின் இயக்கமும், ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள் கண்களைக் கலங்கடித்து விட்டது. இந்த "பொன்மகள் வந்தாள்" கண்டிப்பாக சமூகத்தைக் கலங்கடிக்கும்"

இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா தவிர்த்து பல்வேறு திரையுலக பிரபலங்களும், இந்தப் படம் தொடர்பாக தங்களுடைய கருத்துகளை சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE