ராஜலட்சுமியின் படுகொலை, ஆணாதிக்கமும், சாதிய ஆதிக்கமும் நிகழ்த்திய பச்சைப் படுகொலை என்று ஜீ.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சாமுவேல். இவரது மனைவியின் பெயர் சின்னப்பொண்ணு. இவர்களது மகள் ராஜலட்சுமி 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
ராஜலட்சுமியை, நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவராகப் பணிபுரியும் தினேஷ் குமார் என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை, தன் தாய் சின்னப்பொண்ணுவிடம் கூறியிருக்கிறார் ராஜலட்சுமி.
இந்நிலையில், கடந்த 22-ந் தேதி ராஜலட்சுமி வீட்டில் இருந்தபோது, தினேஷ் குமார் உள்ளே புகுந்து அவரின் தலையைத் துண்டித்துக் கொலை செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக ஆத்தூர் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜலட்சுமியின் கொலை தொடர்பாக ஜீ.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தங்கை ராஜலட்சுமியின் பாலியல் படுகொலை ஒவ்வொரு ஆணும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பெருங்கொடுமை. ஆணாதிக்கமும், சாதிய ஆதிக்கமும் கூட்டு சேர்ந்து நிகழ்த்திய பச்சைப் படுகொலை” என்று தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட்ல இருந்திருந்தா இந்த ‘but’ வந்திருக்காது: #MeToo லீனா மணிமேகலை Exclusive