தென்னிந்திய சினிமா

பொழுதுபோக்கு படம் எடுப்பது கஷ்டம்: மோகன்லால்

செய்திப்பிரிவு

மோகன்லால், மஞ்சு வாரியர் நடித்து, 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிஃபர்’ படம் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமானார். இதில் டோவினோ தாமஸ், விவேக் ஓபராய், ஜான் விஜய் உட்பட பலர் நடித்தனர். இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘எல் 2: எம்புரான்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. பிருத்விராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 27-ம்தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது மோகன்லால் கூறும்போது, “இந்தப் படத்தின் கதையை மூன்று படமாக எடுக்க முடிவு செய்தோம். ‘லூசிஃபர்’ வெற்றிக்குப் பிறகு ‘எம்புரான்’ படத்தை உருவாக்கி இருக்கிறோம். அடுத்தும் ஒரு படம் வரும். இப்படியும் ஒரு பிரம்மாண்ட படம் தேவை என்று உருவாக்கி இருக்கிறோம்.

ஒரு பொழுதுபோக்கு படம் எடுப்பது மிகவும் கஷ்டம். நல்ல நடிப்பு, நல்ல இசை, ஒளிப்பதிவு என்று அனைத்தும் நன்றாக இருந்தால்தான் பொழுதுபோக்கு படம் சரியாக வரும். அதற்காக நானும் பிருத்விராஜும் இணைந்து அதிகமாக உழைத்தோம். இந்தப் படத்துக்கு டிக்கெட் புக்கிங்கிலேயே, கேரளா மட்டுமல்லாமல், தமிழ்நாடு, ஆந்திரா, வெளிநாடு என பல பகுதிகளிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மக்கள் இந்த படத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். அதற்கு காரணம் ‘லூசிஃபர்’. இந்தப் படம் வெற்றிபெற வேண்டும். இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்” என்றார். பிருத்விராஜ், மஞ்சுவாரியர் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT