திரைப்படமாக உருவாகும் அக்‌ஷர்தம் கோயில் தாக்குதல் சம்பவம் 

By ஐஏஎன்எஸ்

குஜராத் அக்‌ஷர்தம் கோயில் தாக்குதல் சம்பவம் திரைப்படமாக உருவாகிறது.

2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள அக்‌ஷர்தம் கோயிலில் துப்பாக்கி ஏந்திய இருவர் அங்கிருந்த பக்தர்களைச் சரமாரியாகச் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். 80க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் தற்போது திரைப்படமாக உருவாகிறது. மும்பை தீவிரவாதத் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஸ்டேட் ஆஃப் சீஜ்: 26/11' என்ற வெப் சீரிஸை உருவாக்கிய அதே குழு இத்திரைப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு ‘ஸ்டேட் ஆஃப் சீஜ்: அக்‌ஷர்தம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குநர் சென் கோஷ் கூறியுள்ளதாவது:

''அக்‌ஷர்தம் கோயில் தாக்குதல் குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்குப் பின்னணியில் என்ன நடந்தது, அதற்காக நம் ராணுவம் செய்த தியாகங்கள் என்னென்ன என்று யாருக்கும் தெரியாது. அவற்றை முழு பின்னணியுடன் பார்வையாளர்களுக்கு ‘ஸ்டேட் ஆஃப் சீஜ்: அக்‌ஷர்தம்’ திரைப்படம் வழங்கும்''.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இப்படம் அடுத்த ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE