பாலிவுட் நடிகை ரேகாவின் பங்களாவில் பணிபுரியும் காவலருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்குச் சொந்தமான பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.2 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 5.15 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 22,123 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ளது நடிகை ரேகாவின் ‘சீ ஸ்ப்ரிங்ஸ்’ பங்களா. இங்கு இரண்டு காவலர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களில் ஒருவருக்குக் கரோனா அறிகுறி தென்பட்டதால் அவர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று (11.07.20) ரேகாவின் பங்களாவுக்கு சீல் வைத்து அவரது வீடு இருக்கும் பகுதியை நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்தனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட அந்தக் காவலர் தற்போது பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள கரோனா முகாமில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது வீட்டின் காவலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது குறித்து இதுவரை ரேகா தரப்பிலிருந்து எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.