தமிழ் சினிமா

2026க்குப் பதிலாக 2031-ஐ குறிவைத்து களம் ஆடுங்கள் - விஜய்க்கு ஆதரவாக சேரன் பதிவு

ஸ்டார்க்கர்

தவெக தலைவர் விஜய்க்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சேரன்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

விஜய்யின் இந்த நகர்வு தொடர்பாக தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் சேரன். இது தொடர்பாக தனது பதிவில், “நானும் கரூர் சென்றிருக்க வேண்டும் என வலியுறுத்தியவன் தான். ஆனால் அனைவரின் கருத்துக்களையும் மீறி அவர்களை அழைத்து வந்து அவர்களோடு அமர்ந்து எந்த இடைஞ்சலும் கவனச்சிதறலும் இல்லாமல் துயரத்திற்கு நிம்மதியான ஆறுதலை வார்த்தைகளாகவும் நம்பிக்கையாகவும் கொடுத்திருக்கும் விஜய் அவர்களை பாராட்டுகிறேன். கரூர் சென்றிருந்தால் கூட இத்தனை நெருக்கத்தில் மனம் விட்டு பேசி அமைதி கண்டிருப்பார்களா என்பது சந்தேகமே. நீங்கள் செய்ய நினைத்ததை சரியாக செய்திருக்கிறீர்கள். இனி இதை இந்த உலகம் உற்று கவனிக்கும். நீங்கள் உருவாக்கும் குழு என்றும் தவறிவிட்டு விடக்கூடாது. அதில்தான் உங்கள் அரசியல் வளர்ச்சி உள்ளது.

உங்கள் தொண்டர்களை ஒழுங்கு செய்யுங்கள். கட்டமைப்பை வலுப்படுத்துங்கள். எல்லாம் இதுவரை உங்களை ரசித்தவர்கள்.. இனி அவர்களை சமூக பாதுகாவலர்களாக மாற்றும் கடமை உங்களது.. உங்கள் கையசவுக்கும் கண்ணசைவுக்கும் கட்டுப்படுத்த தயார் செய்யுங்கள். நடந்த நிகழ்வும் அதன் கறைகளும் முற்றுமாக அகற்றப்படவில்லை.. அவையெல்லாம் மாறுவதென்பது தொடர்ந்து உங்கள் கட்சி தொண்டர்கள் நடத்தையில் இருக்கிறது. மக்களுடன் இறங்கி, பழகி இலகுவாகுங்கள். உங்கள் இலக்கு 2026 ஆக அல்லாமல் 2031 ஆக குறிவைத்து களம் ஆடுங்கள். முடியும்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.

Well done @actorvijay
நானும் கரூர் சென்றிருக்க வேண்டும் என வலியுறுத்தியவன் தான். ஆனால் அனைவரின் கருத்துக்களையும் மீறி அவர்களை அழைத்து வந்து அவர்களோடு அமர்ந்து எந்த இடைஞ்சலும் கவனச்சிதறலும் இல்லாமல் துயரத்திற்கு நிம்மதியான ஆறுதலை வார்த்தைகளாகவும் நம்பிக்கையாகவும் கொடுத்திருக்கும் pic.twitter.com/bEntULlaud

SCROLL FOR NEXT