வேலை வாய்ப்பு

போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அக்.21 கடைசி நாள்

செ.ஆனந்த விநாயகம்

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சி பெற விரும்புவோர் அக்.21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி, 2020, 21, 22, 23, 24 ஆகிய ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இசிஇ ஆகிய பொறியியல் பிரிவில் டிப்ளமா மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்கள் 341 பேர், பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ, பிபிஎம் ஆகிய பொறியியல் அல்லாத பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் 158 பேர் என மொத்தம் 499 பேருக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.

அவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் மற்றும் டிப்ளமா படித்தவர்களுக்கு ரூ.8 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த பயிற்சிகளை பெற விரும்புவோர் www.boat-srp.com என்ற இணையதளத்தில் அக்.21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு தேர்வானோரின் பட்டியல் அக்.28-ம் தேதி மேற்கூறிய இணையதளத்தில் வெளியிடப்படும். நவ.13,14,15 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT